பத்தொன்பதாம் நூற்றாண்டில் போர்கள் பல வென்றிருந்தாலும், மாவீரன் நெப்போலியனின் பெரும் புகழுக்குக் காரணம் அவர் ஒரு நல்ல ஒருங்கிணைப்பாளர், நிர்வாக செயலாட்சியர் மற்றும் திறமையான மேலாண்மையாளர் என்பதே.

ரவீந்திரா சித்தூர் என்பவர் இந்திய வணிகப் பள்ளியின் வினைமுறைத் திறம் (Strategy) துறையின் உதவிப் பேராசிரியர். இவர்  நெப்போலியனின் வாழ்க்கையின் வெற்றி ரகசியங்கள் பற்றிய ஆய்வு செய்தவர்.  நெப்போலியனின் சாதனைகளுக்கான சில குணாதிசயங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்.

1. அந்த நாட்களில் தொடர்ச்சியாகக் கற்றுக் கொள்வதற்கு நிறைய புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. நெப்போலியனுக்கு சிறுவயது முதலே வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்வி என்பது தொடர்ச்சியான செயற்பாங்கு (Education is a continuous process) என்று நெப்போலியன் கருதினார்.

ஒருவருடைய பதவிக்கும், உயர்ந்த நிலைக்கும் படிப்பு உதவும் என அவர் நம்பினார். பேரரசரான அவர் அரசருக்குத் தேவையான அனைத்தும் தெரியாமல் இருந்து விடக்கூடாது என்று எண்ணி, அவரது அரண்மனையிலேயே பல நூல்கள் நிறைந்த வாசகசாலை வைத்திருந்தார்.

1808 ல் உக்கிரமான போர்க்களங்களில் அவர் இருந்த போதும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும், சிறிய எழுத்துக்களில் ஓரங்களில் இடம் விட்டு அச்சிடாமலும், வாசிப்பதற்கு எளிதாக, தளர்வாக இணைத்தும் 1000 புத்தகங்களை அனுப்பும்படி வாசகசாலை நூலகருக்கு குறிப்பு அனுப்பினாராம்.

பேரரசன் நெப்போலியனிடம் மும்முரமான பதவிக் காலகட்டத்திலும், வாசிப்பதிலுள்ள அறிவுத் தாகம் தீவிரமாக இருந்தது. போர்க் கைதியாக செயின்ட் ஹெலினாவில் இருந்த கால கட்டத்திலும் அது தொடர்ந்தது. 

2. வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள படிப்பதைத் தவிர சிறந்த வழி வேறில்லை (No better way to learn in life than to read) என்று நெப்போலியன் கூறுகிறார். தொடர்ந்த வாசிப்பு தேவையென்றும், அவரது வாழ்க்கையின் எந்தத் தருணத்திலும் வாசிப்பதை நிறுத்தவில்லை என்றும் தெரிகிறது. ரூஸ்ஸோவின்   கோட்பாட்டுத் தொகுப்புகளின் மீதான தாக்கம் அவரிடம் இருந்தது. அவரது காலத்திய கல்வி மறுமலர்ச்சி ரூஸ்ஸோ கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது.

செயின்ட் ஹெலினாவில் கைதியாக இருந்த கடைசி நாட்களில் கப்பலில் புத்தகங்கள் மரப்பெட்டியில் கொண்டுவரப்பட்ட நாளை, பொன்னான நாளாகக் கருதினார். திறந்த ஈரமான அடுக்குகளில் 3000 புத்தகங்கள் வரை வைத்திருந்ததாகத் தெரிகிறது.

3. நெப்போலியன் தீவிரமான வாசிப்பாளர். எனவே வேண்டாத பகுதிகளை விடுத்து, தேவையானதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் திறனுள்ளவர். மிக வேகமாக, ஒரு மணி நேரத்திற்குள் ஒரு புத்தகத்தை வாசித்து முடித்துவிடுவாராம். உதவியாளருக்கு புத்தகங்களை எடுப்பதும், திரும்ப அடுக்குகளில் வைப்பதுமாக வேலை சரியாக இருக்கும்.

இன்றைய விரைவான உலகில், கிடைக்கும் அபரிமிதமான செய்திகளை அறிந்து கொள்ள வேகமாகவும், தேர்ந்தெடுத்து வாசிக்கவும் பழகிக் கொண்டால்தான் அவையில் முந்தியிருக்க முடியும். கண்ட அனைத்தையும் வாசித்து நேரத்தை வீணாக்காமல், தேர்ந்தெடுத்து வாசிக்கப் பழகிக் கொள்வது (Be selective in your reading) காலத்தின் கட்டாயம்.    

4. தற்கால நவநாகரீக உலகில் போட்டியைச் சமாளிக்க ஒவ்வொரு நாளும் உன் நேரத்தை சிறப்பாக செயல்படுத்த (Learn to manage your time better) கற்றுக் கொள்ளுங்கள் என்ற செய்தி நெப்போலியனின் வாழ்க்கையிலிருந்து சொல்லப்படுகிறது.

நெப்போலியன் வாழ்ந்தது 51 ஆண்டுகள், 7 மாதங்கள், 20 நாட்கள்தான். வாட்டர்லூ போரில் தோல்வியடைந்து செயின்ட் ஹெலினா தீவு சிறைக்கு நாடு கடத்தப்பட்டார். மிக மோசமான தட்ப வெட்ப நிலையுள்ள அந்தத் தீவில் ஆறு ஆண்டுகள் சாகும் வரை இருந்தார்.

அவர் இயல்பாக வாழ்ந்தது 45 ஆண்டுகள் தான் என்றாலும், இந்த குறுகிய காலகட்டத்தில் ஆக்க பூர்வமாக வாழ்ந்து, காலச் சக்கரத்தில் முத்திரை பதித்தவர். நெப்போலியனின் 1799 முதல் 1815 வரையுள்ள காலத்தில் அவருடைய அருஞ்செயல்கள் எல்லையில்லாதது. நெப்போலியன் அனைவர்க்கும் நல்லறிவூட்டி எச்சரிக்கை செய்வது என்னவெனில், 'தோல்வியுற்ற இடங்களைத் திரும்பப் பெறலாம், நேரத்தைப் பெற முடியாது' என்பதே.

5. நெப்போலியனுக்கு முக்கியமான தருணம் என்பது "இப்பொழுது' (Live in the present) என்ற மந்திரமே. ஒரு பிரச்னையைத் தீர்க்க வேண்டுமென்றால், அவர் மனதில் ஓடும் பிற எண்ணங்களை   எல்லாம் முற்றிலும் ஒதுக்கி விட்டு, அந்தப் பிரச்னை பற்றி மட்டுமே சிந்தித்து அப்பொழுதே முடிவெடுப்பார். அந்த நேரத்தில் எடுக்கப்படும் முடிவு உங்கள் தலைவிதியையே மாற்றியமைக்கும் என்பார். உங்களால் நிகழ்காலத்திற்காக வாழ முடியவில்லை என்றால், கடந்த காலத்தைப் பற்றியும் வருங்காலத்தைப் பற்றியும் வருத்தப்பட்டுப் பயனில்லை என்கிறார்.

6. நெப்போலியன் ஆடம்பரத்தையும், படை பரிவாரங்களையும் விரும்பினாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் (Be thrifty) மிகச் சிக்கனமானவர். அவர் அரசவையைச் சேர்ந்தவர்களுக்கு "வெளியில் தாராளமாக இருந்தாலும், வீட்டில் சிக்கனமாகவும், மிக உலோபித்தனமாகவும் கூட இரு" என்று அறிவுறுத்தினார்.

அவர் இரண்டு வேளை மட்டுமே எளிமையான உணவு சாப்பிடுவார். அரைக் குவளை காபி மட்டும் இரண்டு அல்லது மூன்று வேளை குடிப்பார். அவரது உடைகளும், இரண்டு வெல்வெட் தொப்பிகள் உட்பட, குறைந்த அளவில்தானிருக்கும்.

அவர் அறையிலுள்ள மேசை, நாற்காலி போன்ற பொருட்களெல்லாம் அவர் பெற்ற ஊதியத்திலிருந்து பெறப்பட்டவையே. அவர் சொந்த சேமிப்பாக இருந்தது அவர் பதவிக்காக பெற்ற 14 வருட சம்பளம் மட்டும்தான். அவர் வாழ்விலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது 'சிக்கனமாக வாழுங்கள்' என்பதே.

7. எத்தகைய சூழ்நிலையிலும், அனைவரது மனத்திலும் தன்னைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை முத்திரை பதிக்கும் திறமை (Leave an impression) பெற்றவர் நெப்போலியன். பிரெஞ்ச் புரட்சித் தலைவர் Maximilien Robespierre க்கு அவரது சகோதரர் Augustin 1794 ல் எழுதிய கடிதத்தில் Bonaparte நெப்போலியனின் பெயரை தம் நாட்டின் தேசாபிமானிகளின் பெயரில், 'ராணுவத்தின் பாராட்டுக்குரிய தளபதி'யாக சேர்க்கிறேன் என்று எழுதினார்.

எல்பாவின் ஆங்கில ஆணையாளர் Sir Neil Campbell, "என் வாழ்வின் எந்த சந்தர்ப்பத்திலும், நெப்போலியனைப் போன்ற தனிப்பட்ட ஈடுபாடு மற்றும் ஓய்வில்லாத தீவிர முயற்சி உடையவரைப் பார்த்ததில்லை" என்று தன் குறிப்பேட்டில் எழுதுகிறார். 

நெப்போலியனின் எதிரி பிரிட்டிஷ் படைத்தலைவர் வெலிங்டன் கோமகன் Arthur Wellesley, "போர்க்களத்தில் நெப்போலியன் ஒருவர் இருப்பது 40000 வீரர்களுக்குச் சமம்" என்பாராம். 

எனவே ஒவ்வொருவரும் நெப்போலியனின் வெற்றி ரகசியத்தைப் பின் பற்றினால், எல்லோரும் வாழ்க்கையில் உயர்வது உறுதி.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It