தேவையான பொருட்கள்:

கோழி - ஒன்று
தேங்காய் - அரை மூடி
பெரிய வெங்காயம் - 3
கசகசா - ஒரு மேசைக்கரண்டி
உலர்ந்த திராட்சை - அரை கப்
முந்திரி - அரை கப்
மஞ்சள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 8 பல்
சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி
பட்டை - 2 சிறு துண்டுகள்
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
தக்காளி - 2
மல்லித்தழை சிறிது
நெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

கோழிக்கறியினை கழுவி சுத்தம் செய்து, துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். திராட்சையை கழுவி சுத்தம் செய்து அரைத்துக் கொள்ள வேண்டும்ச். முந்திரியில் பாதியை அரைத்துக் கொள்ள வேண்டும். இரண்டு வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு அத்துடன் துருவிய தேங்காய், கசகசா, பூண்டு, இஞ்சி, கடுகு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் அவற்றுடன் சிறிது நீர் சேர்த்து மையாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

மீதமுள்ள ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்க வேண்டும். பிறகு நறுக்கின வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு மையாக கரைத்து வைத்துள்ள தூள்களையும், அரைத்து வைத்துள்ள தேங்காய், கசகசா கலவையையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை மிதமானத் தீயில் வதக்க வேண்டும். பச்சை வாடை போய் நெய்யானது மிதக்கும் சமயம் நறுக்கின தக்காளி மற்றும் கொத்தமல்லித்தழையைச் சேர்த்து மேலும் 3 நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.

இப்போது கோழிக்கறியினைச் சேர்த்து லேசாக சிவக்கும் வரை நன்கு பிரட்டி வதக்க வேண்டும். பிறகு வினிகர் மற்றும் அரைத்து வைத்துள்ள திராட்சை, முந்திரி விழுதினைச் சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பும் சேர்த்து குறைவானத் தீயில் மூடி வைத்து வேகவிட வேண்டும். கறி நன்கு வெந்தபின் மீதமுள்ள முந்திரியை நெய்யில் வறுத்து, கறியுடன் சேர்த்துப் பரிமாற வேண்டும்.

Pin It