அணுவின் ஆற்றல் பற்றியும், இவ்வாற்றல் குறித்த சாதக மானதும், பாதகமானதும் ஆன கருத்துகள் பற்றியும் இதுவரை பார்த்தோம்.

இனி உலகு தழுவிய நாடுகளில், இந்த அணு ஆற்றல் என்பது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? அதற்கு மக்கள் ஆதரவு எப்படி உள்ளது? அங்கு ஏற்பட்ட அணுசக்தி நிலைய விபத்துகள் மற்றும் கழிவுகளின் நிலை என்ன? என்பதைப் பார்ப்போம்.

உலகத்தில் இன்று ஆக்க சக்தி எனப்படும் மின் சக்திக் காகவும், அழிவு சக்தி எனப்படும் அணுகுண்டு தயாரிப்புக்கு மாகவும் பல வழிகளில் அணுசக்தி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது எப்படிப் பயன்படுத்தப்பட்டாலும், இந் நிலையங்கள் செயல்படும் காலத்திலும் சரி, அது ஏற்படுத்தும் கழிவுகள் விஷயத் திலும் சரி ஒரே விதமான விளைவுகளையே ஏற்படுத்துகிறது.

இவ் விளைவுகள் மொத்த உலகத்தின் சுற்றுப்புறச் சூழலையே பாதித்து வருகிறது. இதனால் இது மக்கள் மத்தியில் கடுமையான பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாகவே இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பும் பெருகி வருகிறது. இதனால் பல நாடுகளில் இனி புதிய அணு சக்தி நிலையங்களையே திறப்பதில்லை எனவும், அல்லது உள்ள நிலையங்களையே மூடி விடுவது எனவும் பல்வேறு வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இதுபற்றித் தினச் செய்தித்தாள்கள், வார மாத இதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள், தகவல்களை நாடு வாரியாக மொத்தமாக இங்குத் தொகுத்துப் பார்ப்போம்.

அமெரிக்கா

அணுசக்தி நிலையங்கள், அது அணுமின் நிலையமாகவோ அல்லது அணு ஆயுத உற்பத்தி நிலையமாகவோ மிகவும் அதிகம் கொண்டுள்ள ஒரு நாடு அமெரிக்கா. உலகில் உற்பத்தியாகும் மொத்த அணுசக்தி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவில் உற்பத்தியாவதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நாட்டில் ஏற்பட்ட முதல் அணு விபத்து 1961இல் இடாஹோ நீர் வீழ்ச்சிக்கருகில் உள்ள ஓர் அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தாகும். இந்த அணு உலை வெடித்ததில் 3 தொழிலாளர்கள் ஸ்தலத்திலேயே மாண்டார்கள். இறந்தவர்களின் உடல்கள் கடுமையான கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டதால் 20 நாட்கள் வரை சடலத்தை நெருங்கவே முடியவில்லையாம். பின்னர் சடலங்களை ஈயக் கல்லறைப் பெட்டிகளில் போட்டுப் புதைத்து அந்தக் கல்லறைகளையும் ஈயத்தால் பூசினார்களாம்.

Three_Miles_Island_accident

அடுத்து ஏற்பட்ட விபத்து 1966இல் என்ரிகோ பெர்மி பகுதியில் உள்ள வேக ஈனுலை அநேகமாக உருகி விட்டதால் ஏற்பட்ட விபத்து. இந்த விபத்து, அணுகுண்டு வெடிப்புக்குச் சமமான சம்பவமாக மாறியிருக்க வேண்டியது மயிரிழையில் தப்பியது என்கிறார்கள். இதனால் 12 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட டெட்ராயிட் நகரம், அதிருஷ்டவசமாக உயிர் தப்பியது. இச் சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்கா இப்படிப்பட்ட ஈனுலைகளைக் கட்டுவதில்லை என்ற முடிவுக்கு வந்தது.

அடுத்து, 1975இல் ப்ரௌன்ஸ் பெர்ரி அலபாமா பகுதியில் உள்ள ஓர் அணுசக்தி நிலையத்தில், ஏற்பட்ட விபத்து. ஒரு மெழுகு வர்த்தியை வைத்துக் கொண்டு காற்றுக் கழிவுகளைக் கண்டு பிடிக்க முயன்றபோது இரு அணு உலைகள் தீப்பற்றி எரிந்தனவாம். தீ 7 மணிநேரம் நின்று எரிந்ததாம். முற்றிலும் உருகியிருக்க வேண்டிய அணு உலை எப்படியோ தப்பியது என்கிறார்கள். அதன் பிறகு இந்த உலை இழுத்து மூடப்பட்டது.

அடுத்து, உலகளவில் இன்றும் பிரசித்தமாகப் பேசப்படும் அளமவுக்குப் பாதிப்பை உண்டாக்கிய 1979இல் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தின் மூன்று மைல் தீவு என்னுமிடத்தில் ஏற்பட்ட விபத்து. ஒரு பம்பு சரியாக வேலை செய்யாததால் அணு உலை உருகும் நிலை ஏற்பட்டது. இதனால் அபாயகரமான கதிரியக்கம் ஏற்பட்டது. கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் அந்தச் சிறிய நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். உலை முழுதும் உருகும் முன்பு மூடப்பட்டு விட்டது. இந்த விபத்துக்குப் பின்னர்தான் அணு மின் சக்தி தயாரிப்பது என்பது எவ்வளவு அபாயகரமான விஷயம் என்பதை அமெரிக்க மக்கள் உணர்ந்தார்கள்.

தற்போது அமெரிக்காவில் ஆறு அணுமின் நிலையங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. 107 அணு உலைகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகார உத்தரவு திரும்பப் பெறப்பட்டு விட்டது. கடந்த 35 ஆண்டுகளில், அதாவது 1974க்குப் பிறகு எந்தப் புதிய அணுமின் உலைத் திட்டங்களும் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் அந்த நாட்டின் அணு மின் நிலையங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது எனக் குறிப்பிடப் படுகிறது.

அமெரிக்காவில் ‘லாங் ஐலண்டு’ பகுதியில் வில்கோ என்கிற கம்பெனி நிர்மாணித்துள்ள 900 மெ.வா. ‘ஹோர்காம்’ அணுமின் நிலையத்தை மூடி விடுவதற்கு அக்கம்பெனியும், நியூயார்க் மாநில அரசும் கடந்த மே 26ஆம் தேதி (26-5-1988) ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதாம்.

530 கோடி டாலர் செலவில் 21 ஆண்டுகள் கடும் உழைப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்நிலையம் அமெரிக்காவிலேயே மிகப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்டதாம். இப்படிப்பட்ட ஓர் அணுமின் நிலையம் இயங்கத் தொடங்குவதற்கு முன்பே மூடப்பட்டுவிட்டது என்பதோடு, இயங்கத் தொடங்கு முன்பே மூடப்படும் முதல் அணு மின் நிலையமும் இதுதானாம். இதில் நியூயார்க் மாநிலத்துக்கு அதிக அளவில் மின்சாரம் தேவைப்பட்ட போதிலும், அதையும் பொருட்படுத்தாமல் அரசு இதை மூடிவிட முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாக்ரமென்டா மாவட்டத்தில் “ரான்சோ சேக்கோ’ அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடிவிடலாமா என்பது பற்றி அந்த மாவட்ட வாக்காளர்கள் மத்தியில் 6-6-88 அன்று வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. முடிவு தெரியவில்லை. மூடியிருந்தால் உலகிலேயே வாக்காளர் விருப்பப்படி மூடப்படும் முதல் அணு மின் நிலையம் இதுவாகவே இருக்கும் என்று சொல்லப் படுகிறது.

இந்த நிலையத்தை நடத்தி வரும் சாக்ரமென்டா மாவட்ட ஆட்சி மன்றம், இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப் படுத்துவதற்காக மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 கோடி டாலருக்குமேல் செலவிட்டதாம். இப்படிச் செலவிட்டு ஏற்பாடு செய்த அணுமின் நிலையத்தை மூடவே வாக்கெடுப்பு.

மசாசூ செட்சில் உள்ள பில்கிரிம் அணுமின் நிலையத்தில் மிக மோசமான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக அது மூடப்பட்டிருக்கிறது. அதை மீண்டும் திறக்கக் கூடாது எனவும், நிலையத்தை மூட கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் பகுதி வாழ் மக்கள் கோரியிருக்கின்றனர்.

நியூ ஹான்போர்டு மாநிலத்தில் ‘ஸீபுரூக்’ அணுமின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மக்களுக்குச் சந்தேகம் தோன்றியதன் காரணமாக அங்கு இரண்டாவது பிரிவைத் தொடங்கும் திட்டம் கைவிடப்பட்டது. முதல் பிரிவில் உற்பத்தியைத் துவங்குவதும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

மிச்சிகன் மாநிலத்தில் மிட்லண்ட் அணுமின் நிலையத்தை எரிவாயு மின் நிலையமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டிருக்கிறதாம். அதாவது அபாயமுள்ள அணுசக்திக்குப் பதிலாக அபாயமற்ற எரிவாயுக்கு மாற்ற திட்டமிட்டிருக்கிறார்கள்.

செயல்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் குறை பாடுகள் காரணமாக டென்னசி அணைத்திட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று அணுமின் நிலையங்கள் மூடிக் கிடக்கின்றன.

இது போன்ற நிகழ்ச்சிகள் காரணமாக அமெரிக்காவில் அணுமின் உற்பத்தித் தொழிலுக்குப் பெரும் நெருக்கடி ஏற் பட்டுள்ளது. புதிய நிலையங்கள் அமைக்க ஆர்டர்கள் எதுவும் கிடைப்பதில்லை என்பதுடன் பழைய ஆர்டர்களும் இரத்து செய்யப்பட்டு வருகின்றன.

அணுமின் நிலையங்களில் ஏற்படும் விபத்துகள், அணு உலைகளின் பாதுகாப்பு, ஆபத்துக் காலத்தில் மக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள், கதிரியக்கக் கழிவுகளை அப்புறப்படுத்துதல் ஆகியவை சம்மந்தமாக அமெரிக்க மக்களுக்குக் கவலை ஏற்பட்டிருப்பதே மேற்கண்ட நட வடிக்கைகளுக்குக் காரணம் என்கிறார்கள்.

அதோடு அமெரிக்க சிவிலியன் மற்றும் இராணுவ அணு உலைகளின் பாதுகாப்பு விதிகள் மீறப்படுவதாகக் கண்காணிப்பு நிலையங்களும், தகவல் சாதனங்களும், குடிமக்களின் ஆய்வுக் குழுக்களும் கண்டுபிடித்துள்ளன என்பதும் இதற்குக் காரணம்.

இவ்வகையான எதிர்ப்புகளில் மக்கள் மட்டுமல்ல, அதிகாரத்தில் இருப்பவர்களும் பங்கு பெறுகிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம், முன் குறிப்பிட்ட ஷோர்காம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை நியூயார்க் ஆளுநரும் ஜனநாயகக் கட்சி பிரமுகருமான ‘மரியா குவோமா’ என்பவரே முன்நின்று நடத்தியிருக்கிறார். இந்த நிலையம் ஒருக்காலும் பாதுகாப்பாக இயங்க முடியாது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். அங்கு 500 மெகாவாட் உலையை நிறுவ வில்கோ கம்பெனி அனுமதி வாங்கியது. பிறகு அது 900 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது.

ஆரம்பம் முதலே இந்த நிலையம் பற்றிச் சர்ச்சை இருந்திருக்கிறது. எனவே இந்த நிலையம் பூர்த்தி செய்யப்பட்ட பின் நெருக்கடிகால ஏற்பாடுகளில் - அதாவது மக்களை அப்புறப் படுத்துதல் போன்ற ஒத்திகை நடவடிக்கைகளில் - பங்கு பெற முடியாது என மாவட்ட மற்றும் மாநில அதிகாரிகள் கூறி விட்டதால் அக்கம்பெனியால் உலையை நடத்த முடியவில்லை. பிறகு சர்ச்சைக்கிடமான அந்த உலையை மூடிவிடுவது என முடிவு செய்து மூடியும் விட்டார்கள்.

அமெரிக்க இராணுவ தளவாட உற்பத்திக்கு ட்ரிட்டியம் (ஹைட்ரஜன் ஐசோடோப்) வழங்கிவரும் ஒரே நிலையமான, தென் கரோலினாவில் எய்க்கினுக்கு அருகில் உள்ள ‘சவன்னா அருவி’ அணு ஆயுத நிலையத்தில் (அரசுக்குச் சொந்தமானது), குளிரூட்டும் பைப்பில் கடுமையான விரிசல்கள் ஏற்பட்டுள் ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த விரிசல் மிகவும் அபாய கரமானது என்றும் அதிக நாள்பட்ட இந்த அணு உலையில் ஏற்பட்ட இக்கோளாறுகள் உலைக் கட்டமைப்பின் காரணமாக ஏற்பட்டது எனவும் செய்தியை வெளியிட்ட வாஷிங்டன் போஸ்ட் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையத்தில் உள்ள மூன்று உலைகளும் தற்போது மூடப்பட்டுள்ளன. இது நிரந்தரமாக மூடப்பட்டு விடலாம் என்றும் தெரிகிறது.

இதுவல்லாமல் அமெரிக்கா பற்றி பல்வேறு இதழ்களில் வந்துள்ள சில பொதுவான தகவல்கள்:

அமெரிக்காவில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை ஆய்வு செய்ததில், இதில் 4 இலட்சம் குழந்தைகள் 1950-69க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்க அரசு நடத்திய அணுகுண்டு சோதனைகள் காரணமாக இறந்திருக்கின்றன என்று டாக்டர் ‘எர்ணட்ஸ்டார்ன் கிளாஸ்’ என்பவர் கூறியுள்ளார்.

மிகப் பெரிய ஜனநாயக நாடு எனப் பீற்றிக்கொள்ளும் அமெரிக்காவிலேயே இச்செய்தி பத்திரிகைகளில் வெளிவர முடியவில்லை என ‘லோ லெவல் ரேடியேஷன்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக நமது பத்திரிகைகளில் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இன்று அமெரிக்காவிடம் 20,000 டன் அணுக் கழிவுகள் கைவசம் உள்ளன. இதை அப்புறப்படுத்த இட வசதியோ, பண வசதியோ இல்லாமல் அமெரிக்கா தவித்துக் கொண்டிருக்கிறது. 70,000 டன் கழிவுகளை நீண்ட கால அடிப்படையில் கொட்டுவதற்கான இடமொன்றை அமெரிக்கா தேடி வருகிறது.  உலை உள்ள இடங்கள் தவிர கழிவுகள்,வேறு 375 இடங்களில் கொட்டப்பட்டுள்ளன.

1991க்குள் அணுத் துப்புரவுப் பணிக்கு மட்டும் எட்டா யிரத்து ஐந்நூறு கோடி (8,500,00,00,000) டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம்.

ஹான் போர்டு என்னும் இடத்தில் உள்ள அணு ஆயுத நிலையத்தைச் சுத்தப்படுத்த மட்டும் 100 கோடி டாலர்கள் தேவைப்படுகிறதாம். பணம் இல்லாததால் இவ்வேலைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இங்கு 10 கோடி காலன் கழிவுப் பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதை என்ன செய்வது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏற்கெனவே பல கோடி காலன் குறைந்த அளவு கதிரியக்கப் பொருட்கள் ஏரிகளிலும் குளங்களிலும் கொட்டப்பட்டது.

இடாஹா மாநிலத்தில் 1952 முதல் சேமிக்கப்பட்ட கழிவுப் பொருட்களை 1,20,000 பீப்பாய்களிலும், 11,000 உலோகப் பெட்டிகளிலும் தற்காலிகமாகச் சேமித்து வைத்திருக்கின்றனர்.

இவற்றைப் பூமிக்குக் கீழே 3000 அடி ஆழத்தில் உள்ள உப்புச் சுரங்கங்களில் புதைக்கப் போவதாக ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்னும் நிறைவேற்றப் மலேயே இருக்கிறது.

ஹான்போர்டு தொழிற்சாலையிலிருந்து மட்டும் 1944இல் இருந்து 1956 வரை 5,30,000 கியூரிகள் கதிர் வீச்சு ஆற்றல் கொண்ட அயோடின் கழிவுப் பொருள்கள் காற்றுடன் கலந்துவிட்டன. இந்த இடத்தைச் சுற்றி 1 மைல் தூரம் சாவு மைல் என வர்ணிக்கப்படுகிறது. அங்குப் புற்றுநோயால் தாக்கப்பட்டு மக்கள் மடிந்து வருகிறார்கள்.

வாஷிங்டன் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் கதிரியக்க அயோடின் கலந்துவிட்ட புல்வெளிகளில் மேய்ந்த பசுக்களின் பாலைப் பருகியதால் 20,000 குழந்தைகள் மிகையான கதிர் வீச்சினால் தாக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.

ஒகையோ மாநிலத்தில் பெர்னால்டு என்னுமிடத்தில் யுரேனியப் பிரிப்புத் தொழிற்சாலையிலிருந்து கடந்த 37 ஆண்டுகளில் 1,67,000 பவுண்டு நிறையுள்ள கதிரியக்கக் கழிவுகள் மியாமி நதியில் கொட்டப்பட்டுள்ளன. இது தவிர 1.27 கோடி பவுண்டு கழிவுப் பொருள்கள் குழிகளில் நிரப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றிலிருந்து கசிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் கெடும் அபாயம் தோன்றியுள்ளது. எனவே இந்தத் தொழிற்சாலையை மூடி விட வேண்டும் என்று ஒகையோ மாநில ஆளுநர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அணு உலையைக் குளிர்ப்படுத்தும் நீர் சவன்னா நதியில் கலப்பதால் அங்கு மீன்பிடித் தொழிலுக்கு ஆபத்து நேர்ந்துள்ளது.

ஆக, அமெரிக்காவில் அணுக் கழிவுகள் மலிந்து அமெரிக்க சுற்றுச் சூழலையே கடுமையாகப் பாதித்துள்ளது. அணு சக்திக்கு அமெரிக்க மக்களிடமிருந்து மட்டுமல்ல, ஆளும் மாநில நிர்வாகங்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, நடப்பில் உள்ள பல அணுமின் நிலையங்கள் மூடப்படுவதோடு, புதிதாக எதுவும் தொடங்கப்படாத நிலையும் நீடித்து வருகிறது.

Pin It