உடம்பில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த அனைத்து எலும்புகளும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு தனது பங்கை செவ்வனே செய்துவருகிறது.

நாம் இந்த மொத்த எலும்புகளையும் பாதுகாக்க, நாம் எடுத்து கொள்ளும் உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறை மிக முக்கிய ஒன்றாகும். இந்த மொத்த எலும்புகளும் உடம்பில் உள்ள பகுதிகளுக்கு ஏற்ப தங்களை வடிமைத்துக் கொண்டு மனிதனுக்கு உடல் கட்டமைப்பை கொடுக்கின்றன‌. எலும்பு மற்றும் பற்கள் உடம்பில் உள்ள மிக உறுதியான பகுதிகளாகும். மற்ற உறுப்புகளைப் பாதுகாப்பதில் எலும்புகள் மிக முக்கிய பணியைச் செய்து வருகின்றன. எடுத்துக்காட்டாக மூளை, இருதயம், சிறுநீரகம், சுவாசப்பை போன்ற பகுதிகள் எலும்புகளின் மூலம் உருவாக்கப்பட்ட கூடுகளில் மிகப் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்றன.

மூளை மண்டைக் கூட்டிற்குள்ளும், இருதயம், சுவாசப்பை நெஞ்சுக் கூட்டிற்குள்ளும் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இது போன்ற பாதுகாப்புகளை நமக்கு அளிக்கின்ற எலும்புகள், விபத்துக்களின் போது சில நேரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உடைவதை மருத்துவர்கள் பிராக்ட்ச்சர்(Fracture) என்கிறார்கள். இதனைக் குணப்படுத்த நவீன மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை எளிதில் சகஜ நிலைக்கு கொண்டு வர முடியும்.

இதனைப் போன்று இன்னும் பல்வேறு நோய்கள் மனித எலும்புகளை பாதிக்கின்றன. அதில் சமீப காலமாக அனைவரையும் பயமுறுத்தி வரும் பாதிப்பு எலும்புத் தேய்மானம். அதாவது இதனை ஆங்கிலத்தில் osteoporosis என்பார்கள். இதை ஒரு நோய் என்பதை விட குறைபாடு என்பது மிகப் பொருந்தும். அதாவது மனிதன் முதுமை அடையும் போது ஏற்படும் உடல் மாற்றங்களில் இந்த எலும்புகளும் சேதம் அடையத் தொடங்கிவிடுகின்றன. மிக மெதுவாக தேயத் தொடங்கும் எலும்புகள் பிற்காலத்தில் ஏற்ப்படுத்தும் நோயின் தீவிரம் ஆளைக் கொல்லும் வலிமை உடையது.

முதுமையில் பொதுவாக நாற்பது (40) வயதைத் தொடும் பொழுது மனித எலும்புகள் தனது வலுவை இழக்கத் தொடங்கிவிடுகின்றன. இதனைத் தான் மருத்துவர்கள் எலும்புத் தேய்மானம் என்று பொதுவாக விளக்கம் அளிக்கிறார்கள். இது பொதுவாக பெரும்பாலும் பெண்களை அதிகமாக அவதிகுள்ளாக்கிவிடுகிறது. பெண்களில் 40 வயது முதல் இந்த நோயின் தாக்கம் ஏற்படத் தொடங்கி அவர்கள் வயது அதிகரிக்க அதிகரிக்க நோயின் தீவிரம் அதிகரித்து மிகத் தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்திகிறது.

எலும்புகளுக்குத் தேவையான முக்கியமான ஒன்று கால்சியம் என்ற தாது உப்பு. இந்த தாது உப்பை எலும்புகள் நாம் உண்ணும் உணவில் இருந்து எடுத்துகொள்ளும் தன்மை கொண்டுள்ளது. இந்த குணம் பொதுவாக நாம் முதுமையை நெருங்கும் பொழுது மெதுவாக மாறியும் மறைந்தும் போய்விடுவதால் எலும்புத் தேய்மானம் வருகிறது. அதாவது முக்கியமாக பெண்களில் உதிரப்போக்கு நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கால்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து இந்த குறைபாடு ஏற்படுகிறது.

இதனால் ஏற்படும் முக்கிய சில பக்கவிளைவுகள்

1 . எலும்பு முறிவு
2 . மூட்டு வலி
3 . மூட்டு வாதம்
4 . கழுத்து எலும்பு தேய்மானம்
5 . முதுகு எலும்பு தேய்மானம்
6 . முதுகு வலி
7 . உடல் சோர்வு
8. அசதி
9 . முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல்
10 . நடையில் தளர்வு

இது போன்ற பக்க விளைவுகளால் பெண்கள் தனது 40 வயது முதல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். நோய்களை குணப்படுத்துவதை விட எளிதாகத் தடுக்க முடியும் என்பது எல்லோராலும் அறியப்பட்ட உண்மை.

தடுப்பது ஒன்றே சரியான தீர்வு, அதை எப்படி செய்வது?

1 . எலும்புகளின் தன்மையை அதன் உறுதியைப் பாதுகாக்க தினமும் உடற்பயற்சி செய்வது மிக முக்கிய தடுப்பு முறையாகும்.

2 . வலி வந்து விடுமே என்ற பயத்தில் சிலர் நடப்பதை முற்றிலும் தவிர்ப்பார்கள். இது மிகவும் தவறானது. இது நோயின் வீரியத்தை இன்னும் அதிகப்படுத்தும். அதாவது குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயற்சி செய்வது மிக முக்கியம்.

3 . நடைப்பயற்சி செய்வதை முறையாக செய்வது நல்லது, அதாவது சரியான காலணிகள் அணிவதால் முழங்காலில் ஏற்படும் வலி வாதம் இவற்றைத் தவிர்க்கலாம்.

4 . மிகவும் வயது முதிர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.

5 . குறைந்தது பதினைந்து நிமிடமாவது சூரிய ஒளி உடலில் படுவது அவசியம். அதாவது இதன் மூலம் எலும்புகளுக்குத் தேவையான வைட்டமின் டி தோல் மூலம் உறிஞ்சப்படும்.

6 . கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

7 . பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை விரும்பி உண்ணுங்கள்.

8 . சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள்.

9 . காபி அதிகம் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது, இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.

10 . மீன் உணவுகளை தினம்தோறும் சேர்த்துக் கொள்வது நல்லது.

11 . புகைபிடிப்பது, மது அருந்துவது உடலில் உள்ள கால்சியம் அளவை குறைக்க வாய்ப்புள்ளதால் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

12 . பால் இரவில் அதிகம் எடுப்பதை விட மாலை அல்லது காலை வேளைகளில் எடுத்துக் கொள்வதால் தூக்கம் தடைபடுவதைத் தவிர்க்கலாம்.

13. கால்சியம் இப்பொழுது மாத்திரை வடிவில் கிடைக்கிறது, இதனை உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.

முதுமை மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒன்று. இதனை நாம் சரி செய்து கொள்ள மேலே சொன்ன அறிவுரைகளைப் பின்பற்றுவது மூலம் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இது போன்ற பக்கவிளைவுகளை தவிர்க்கலாம்.

- செந்தில்குமார்.தி, இயன்முறை மருத்துவன், ராசிபுரம்

Pin It