“ஆட்டிஸம்” என்பது மூளையின் முக்கியச் செயல்பாடுகளாகிய பேச்சுத்திறன், சமுதாயத்தொடர்பு மற்றும் புலன் உணர்வு இவற்றைப் பாதிக்கும் நோயாகும். ஆட்டிஸம் நோயை தமிழில் “மதி இறுக்கம்” என்று அழைக்கிறார்கள். ஆட்டிஸம் நோய் பாதித்த ஒவ்வொரு குழந்தையும் மற்றவரிடமிருந்து வேறுபடுகிறார்கள். மதி இறுக்க நோய் பாதித்த குழந்தைகளை இனம் காண சில அறிகுறிகள் உள்ளன.
யார் முகத்தையும் பார்க்காது இருத்தல்; காது கேளாததுபோல் இருத்தல்; நன்றாக பேசிக்கொண்டிருந்த குழந்தையின் பேச்சுத்திறன் படிப்படியாக குறைதல்; யார்மீதும் நாட்டம் கொள்ளாமல் இருத்தல்; காரணமின்றி மற்றவர்களைத் தாக்குதல்; தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொள்ளுதல்; அர்த்தமற்ற செயல்களைச் செய்தல்-எடுத்துக்காட்டாக கையை உதறுதல், உடலை முன்னும் பின்னும் அசைத்தல்; அதிக வலியை தாங்கிக் கொள்ளுதல்; தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல் ஆகிய அறிகுறிகளால் மற்ற குழந்தைகளிடமிருந்து இவர்களை எளிதாக வேறுபடுத்தி அறியலாம்.
மதி இறுக்க நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பேசுபவர்களின் கண்களைவிட உதட்டு அசைவை கருத்தூன்றி பார்ப்பதாக இப்போது பொது உளவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பிறந்த ஆரோக்கியமான குழந்தை சில வாரங்களில் மற்றவர்களின் கண்களைப்பார்க்கத்துவங்கும். சமூக உறவுகளுக்கு கண்கள்தானே சாளரம். “உள்ளத்தின் கதவுகள் கண்களடா..” என்பதுதானே கவிஞரின் வாக்கு.
எவ்வளவுநேரம் சிசுக்கள் மற்றவர்களின் கண்களைப் பார்க்கின்றன என்பதை வைத்து அவர்கள் சமூகத்துடன் தொடர்புகொள்ளும் திறனை அளந்துவிடலாம். மற்றவர்களின் கண்களைப் பார்க்க மறுக்கும் சிசு மதி இறுக்க நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.
யேல் பல்கலைக்கழக மனநல மருத்துவர்கள் மழலைகளைத் தாக்கும் மதி இறுக்கநோயைக் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள். இரண்டு வயது நிரம்பிய மழலைகள் தாயின் பராமரிக்கு உட்படும் சமயங்களில் மழலையர்களின் பார்வை நிலைக்கும் இடங்கள் சிறப்புக்கருவிகளின் துணைகொண்டு பதிவு செய்யப்பட்டன. சில வாரங்கள் கழித்து மழலையர்களின் பார்வை நிலைப்பு பராமரிப்பவர்களின் கண்களின் மீது நிலைக்குத்தி இருந்தது தெரியவந்தது. இது மழலையர்கள் சமூகத்துடன் ஒன்றிப்போவதற்கான அடையாளமாகும்.
தாயின் கண்களின் மீது அல்லாமல் உதட்டு அசைவுகளின்மீது மழலையர்களின் பார்வை நிலைகுத்தி இருக்குமானால் அது மதி இறுக்க நோயின் தொடக்கமாக இருக்கலாம். இது பற்றிய ஆய்வுகள் தற்போது யேல் பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது.
- மு.குருமூர்த்தி
எனது அக்காவின் மகனுக்கு ஆட்டிசம் , அவன் வயது ஆறு, அவனுக்கு சரியான மருத்துவம் தேவைபடுகிறது, எனவே தாங்களுக்கு தெரிந்த மருத்துவர் இருப்பின் தயவு செய்து உதவி புரியும்படி கேட்டுக்கொள்கிற ேன். நாங்கள் பல இடங்களில் பார்த்தும் பலன் இல்லை. எனவே தயவு செய்து உதவி புரியும்படி கேட்டுக்கொள்கிற ேன்.
நன்றி!
RSS feed for comments to this post