மே 1 முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுவரும் இடிந்தகரை சுற்றியுள்ள மக்கள் மீது அரசு, தன் காவல்துறை மூலம் ஒடுக்குமுறையை தொடர்ந்து ஏவிவருகிறது.இதைக் கண்டித்தும் போராடும் மக்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்க அரசை வலியுறுத்தியும், ’கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்கள் பரிமளா, ஜோன்சன், சமந்தா, ஜார்ஜ் ஆகியோர் கடந்த மே 10 மாலை முதல் 100 மணி நேர உண்ணா நிலை போராட்டம் மேற்கொண்டனர். இந்த 100 மணி நேர உண்ணா நிலைப் போராட்டம், இன்று (14 மே 2012) மாலை 5 மணியளவில் நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் , மதிமுக தலைவர் வைகோ , இந்திய பொதுவுடைமைக்கட்சி மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, பேராசிரியர் கல்விமணி, பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் பங்கு பெற்று உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்தனர்.

vaiko_nallakannu_620

இப்போராட்டத்தின் இறுதியில் மக்கள் கூட்டமைப்பு சார்பில் பின்வரும் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டது:

புகுசிமா அணுஉலை விபத்திற்கு பிறகு உலகம் முழுவதும் உள்ள மக்கள் அணு உலைகளின் ஆபத்தை உணர்ந்து, செயல்பட்டு கொண்டிருக்கின்ற அணு உலைகளை மூடிவிட்டு மாற்று மின் உற்பத்தி வழி முறைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.அணு உலை குறித்த இந்த அச்சம் கூடங்குளம் பகுதி மக்களிடம் அணு உலை ஆபத்து குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது அதன் விளைவாக கடந்த 9 மாதங்களாக பல்லாயிரக் கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் ஒன்று திரண்டு அணு உலையை எதிர்த்து அறவழியில் போராடி வருகின்றனர்.

இந்த எழுச்சிமிகு மக்கள் போராட்டத்தை ஒடுக்க இந்திய அரசும் தமிழக அரசும் பல்வேறு விதமான பொய்ப்பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.போராடும் மக்கள் மீது 55,000 ற்கும் மேற்பட்ட பொய் வழக்குகள்,தொடர் அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து ஏவிவருகிறது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை தேசதுரோகிகளாகவும், நக்சல்களாகவும் சித்தரித்து அரசு கருத்து பயங்கரவாதத்தை நிகழ்த்துகிறது. இதன் விளைவாக தோழர்கள் சதீஷ் மற்றும் முகிலன் ஒன்றரை மாதங்களாக சிறையில் அடைபட்டிருக்கின்றனர்.

இவை எதற்கும் அசராத மக்கள் போராட்டம் தடைகளைத் தாண்டி முன்னைவிட மிக அதிக எழுச்சியுடனும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

போராட்டத்தின் தற்போதைய வடிவமாக கடந்த மே 1 முதல் 325 க்கும் மேற்பட்ட மக்கள் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அடிப்படை மருத்துவ வசதி, மருத்துவர்களின் கவனிப்பு, இடர் ஊர்திகள் போன்ற எந்த உதவிகளையும் அரசு அனுமதிக்காமலும், போராடிவரும் மக்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கும் பொழுதும் அரசு பேச்சுவார்த்தையை தொடங்க எந்தவித குறைந்தபட்ச முயற்சியையும் முன்னெடுக்காது கடந்த 14 நாட்களாக மக்களை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது.

மேலும் கூடங்குளம் அணுஉலையை சுற்றி 2 கி.மீ. சுற்றளவிற்குள் இருந்த 144 தடையுத்தரவை, போராடும் மக்கள் 25,000 ற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை திரும்பக் கொடுத்த பிறகு இப்போராட்ட வடிவத்தை தடுப்பதற்காக கூடங்குளத்தை சுற்றி 7 கி.மி சுற்றளவிற்கு 144 தடையுத்தரவை அரசு நீட்டித்தும் சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியும், காவல்படைகளை அதிக அளவில் குவித்து ’திடீர்’ அடையாள அணிவகுப்புகள் நடத்தி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தியும் மக்களை திறந்த வெளிசிறைச் சாலைகளில் வைத்துள்ளது.

இத்தகைய சூழலில் அணுஉலை வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியை கடந்து, தங்கள் கருத்துகளை சனநாயக வழியில் வெளிப்படுத்து வதற்கு கூட மக்களுக்கு உரிமை கிடையாதா என்ற கேள்வி எழுகின்றது. அறவழியில் போராடும் மக்களை தேசத்துரோகம் செய்தவர்களாக அரசு சித்தரிக்கிறது.

மக்கள் பெருமளவில் போராடிவரும் சூழலில் தேர்தல் நேரத்தில் மக்களின் வாக்குகளை பொறுக்குவதற்காக வீதி வீதியாக ‘சூறாவளியாக’ பயணம் வரும் அரசியல்வாதிகள், அறவழியில் போராடும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிடாக இருந்து வருகின்றனர்.

அனைத்துவிதமான குரல்களையும் அரசு நசுக்கி வரும் சூழலில், முக்கிய அரசியல் கட்சிகள் மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி வரும் சூழலில்தான் ’கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ’சார்பாக சென்னையில் இந்த100 மணி நேர உண்ணாநிலை போராட்டத்தை தோழர்கள் பரிமளா. சமந்தா, ஜார்ஜ், ஜோன்சன் ஆகியோர் மேற் கொண்டனர்.

இந்த நேரத்தில் ’கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புமக்கள் கூட்டமைப்பு’ சார்பாக பின் வரும் கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கின்றோம்: 

கூடங்குளம் அணுஉலையை ஆதரித்து வரும் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட தமிழக கட்சிகள் அணுமின் ஆற்றல் குறித்த தங்கள் நிலைப்பாட்டை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
 
பின்வரும் இடிந்தகரை மக்களின் 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

கைது செய்யப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்களை முன்நிபந்தனை இன்றி விடுதலை செய்க!
 
ஆயிரக்கணக்கான மக்கள் மீது போடப்பட்டுள்ள தேச துரோக வழக்குகள் உள்ளிட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறுக!
 
கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவப்பட்டுள்ள பகுதியில் நீரியல், புவியியல் மற்றும் கடலியல் ஆய்வை மேற்கொள்ள சுதந்திரமான தேசியக் குழு ஒன்றை நிறுவுக!

கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றி 30 கி.மீ தொலைவில் வாழும் மக்கள் அனைவருக்கும் பேரிடர் மேலாண்மை மற்றும் வெளியேற்றப் பயிற்சிகள் வழங்குக.
 
விபத்து இழப்பீடு குறித்து இந்தியாவும் இரசியாவும் 2008 இல் போட்டுக் கொண்ட இரகசிய ஒப்பந்தத்தின் ஒரு படியைக் கொடுத்திடுக!
 
கூடங்குளம் அணு உலையிலிருந்து எவ்வளவு கழிவுகள் வரும், அதை எப்படி நீங்கள் பாதுகாக்கப் போகிறீர்கள் என்ற தகவல்களை வெளியிடுக!
 
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து அமைதியான வழியிலும் வன்முறையற்ற வழியிலும் போராடுவதற்கு மக்களுக்கு இருக்கும் ஜனநாயக உரிமைகளை மதித்திடுக!

நிறைவு நிகழ்வில் பங்கேற்ற தோழர்கள், தலைவர்கள் ஆற்றிய உரையின் செய்திக்குறிப்பு பின்வருமாறு:

தோழர் செந்தில் முன்னுரை:

100 மணி நேர பட்டினிப் போராட்டத்தை நிறைவு செய்ய வந்திருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய பொதுவுடைமை கட்சியின் மூத்தத் தலைவர் தோழர் நல்லகண்ணு,தோழர் கல்யாணி,பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோரை வரவேற்றுப் பேசிய தோழர் செந்தில், மே1 முதல் இடிந்தகரை மக்களின் சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தை முற்றாக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது. பெருவாரியான ஊடகங்களும் தொடர்ந்து இச்செய்தியை மக்களிடையே போய்ச்சேர்க்காமல் இருட்டடிப்பு செய்து வருகின்றன. அரசின் இந்த அலட்சியப்போக்கை கண்டிக்கும் விதமாக இடிந்தகரை மற்றும் கூடன்குளத்து மக்கள் 25000 வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடமே திருப்பித்தர முன் வந்திருக்கின்றனர். அவர்கள் தனித்து விடப்படவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவும் தொடர்ந்து ஆதரவளிக்கவும் இத்தகையதொரு போராட்ட வடிவத்தை மேற்கொண்டதாகவும் செந்தில் கூறினார்.

பேராசிரியர் அ.மார்க்ஸ்:

ஊடகங்களின் தொடர் புறக்கணிப்பை கண்டித்த மார்க்ஸ், பஞ்சாயத்து தலைவர்களை முன்னிறுத்தி,போராடும் மக்களிடையே ஒற்றுமையில்லாமல் இருப்பது போன்ற தோற்றத்தை அரசு ஏற்படுத்தி வருகிறது.தொடக்கம் முதலே அரசு இவ்விஷயத்தில் தந்திரமாக பிரச்சினைகளை கையாண்டு வருகிறது.

1948ல் நேரு அணு ஆற்றலை தேசப்பாதுகாப்பு, தேச வளர்ச்சி ஆகிய கூறுகளை பிரதானப்படுத்தி, மக்களிடையே வெளிப்படுத்தாமல் ஒரு ரகசிய செயல்பாடாக்கினார். எனவே அணு ஆற்றலை எதிர்ப்பவர்கள் அப்போதே தேசத்துரோகிகளாக்கப்பட்டனர்.இது மாபெரும் ஜனநாயக மறுப்பாகும். இந்நிலையை மாற்ற அனைத்து கட்சிகளும் இவ்விஷயத்தில் ஒன்றிணைந்து போராட வேண்டும். இடிந்தகரையில் உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்களுடைய கோரிக்கைகள் ஏற்கப்படவேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இடிந்தகரையிலிருந்து தொலைபேசியில் தோழர் உதயகுமார்:

100 மணி நேரம் பட்டினிப்போராட்டத்தை நிறைவு செய்த தோழர்கள் பரிமளா, ஜார்ஜ், சமந்தா, ஜோன்சன் ஆகியோருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்த உதயகுமார். நீதியரசர் ஏ.பி.ஷாவின் வேண்டுகோளை ஏற்று காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை இன்றுடன் முடித்து கொண்டதாகவும் நாளை முதல் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நெருங்கி கொண்டிருக்கும் இவ்வேளையில் எல்லா அடக்குமுறைகளையும் ஒருங்கே அனுபவிக்கும் தமிழரின் எதிர்காலம் பற்றிய ஒரு மாநாட்டை இடிந்தகரையில் வருகிற மே 17ஆம் தேதி நடத்தவிருப்பதாகவும், மறுகரையில் உயிர்விட்ட நம் தொப்புள் கொடி சொந்தங்களுக்கு, கடலில் இறங்கி மலரஞ்சலி செலுத்தியும், மெழுகுதிரி ஏந்தி ஊர்வலம் நடத்தவிருப்பதாகவும் தெரிவித்தார்.

தோழர் கல்யாணி:

கூடன்குளம் இடிந்தகரை என சுற்றுவட்டாரங்களில் மட்டும் நடத்தப்படும் போராட்டங்களுக்கு ஆதரவாக தலைநகரிலிருந்து திருப்பியடிக்கும் ஒரு திருப்பு முனையாக இந்த 100 மணி நேர பட்டினிப்போராட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்த போராட்டம் என்பது உலகின் கடைசி அணு உலை இருக்கும் வரை தொடரும் அது ஒரே ஒரு அணு உலையாக உலகின் எப்பகுதியில் இருந்தாலும் சரியே. இது கூடங்குளத்துக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே காக்கும் போராட்டமாக இருக்கும். ஏனெனில் அணு ஆற்றலை கட்டுப்படுத்த முடியாது.அது ஒரு தொடர்வினை. மேலும் உண்ணாவிரதம் இருப்பது அவ்வளவு சாதாரணமல்ல.மேலும் பேசுகையில், தோழர்கள் சதீஷ், முகிலன் ஆகியோர் விடுவிக்கப்படவேண்டுமெனவும் அவர்கள் மீதான மதிப்பு இப்போது இன்னும் கூடியிருப்பதாகவும் தெரிவித்தார்.

தோழர் நல்லகண்ணு

 மீனவ மக்களின் வாழ்வே ஒரு போராட்டமாக இருக்கிறது.கடலிலும் நிலத்திலும் மட்டுமே போராடிய அவர்கள் இன்று காற்றையும் காக்க போராட வேண்டியிருக்கிறது. அந்த மக்களை இராணுவத்தாலும் போலிசாலும் எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. இந்திய வரலாற்றில் இத்தனை நாட்கள் எந்த ஒரு போராட்டமும் அமைதியாக நடந்திருக்கவில்லை. எப்படியாவது அரசு வன்முறையை அங்கே ஏவிவிட்டு விடும். பஞ்சாயத்து தலைவர்களை வைத்து அவர்களிடையே அந்த 500 கோடியை பிரித்து பிரச்சினைகளை உண்டு பண்ண நினைத்தார்கள். அந்நிய நாட்டிடமிருந்து பணம் வருகிறதென்று சொன்னார்கள். பிறகு மதரீதியாக பிரிக்கப்பார்த்தார்கள். கிருஸ்துவ மிஷினரியின் பின்புலம் என்றார்கள்.எல்லாவிதமான பிரித்தாளும் சூழ்ச்சியையும் முயன்று பார்த்தது இந்த அரசு..அணு உலையின் தலை வாசலில் இருக்கும் மக்களை கலந்து பேசாமல் அவர்களின் ஒப்புதலை பெறாமல் அணு உலை திறப்பு என்பது ஒரு திணிப்பு தான்.

100 மணிநேர பட்டினிப் போராட்டத்தை நிறைவு செய்த தோழர் பரிமளா:

 இது ஒரு ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஊடகங்களில் இந்த உண்ணாவிரத செய்தி தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுவே ஒரு மிகப்பெரிய ஜனநாயக மறுப்பு. தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை பார்க்கும் நாங்கள் இதற்கு முன்பு உண்ணாவிரதம் இருந்ததில்லை. அதன் வலியை இப்போது உணருகிறோம். ஆனால் 14 நாட்கள் உண்ணாவிரதமிருந்து தங்களை வருத்திக் கொள்ளும் அந்த எளிய மக்களை அரசு அலட்சியப்படுத்துகிறது. அணு உலை எதிர்க்கருத்து உடையவர்கள் கூட ஊருக்குள் அனுமதி இல்லை என்ற அரசு மக்களை திறந்த வெளிச்சிறையில் அடைத்திருக்கிறது. புகுசிமாவின் ஒரு அணு உலையில் ஏற்படும் ஒரு கண்ட்ரோல் ரோடு கோளாறு ஜப்பானையே ( Annihalation of Japan ) விழுங்கி விடும் அபாயமிருப்பதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலை தான் நமக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தோழர் வைகோ:

இப்போராட்டத்தை இரண்டு அம்சங்களாக நான் பார்க்கிறேன். கூடன்குளத்தில் அணு உலை இருக்கக்கூடாது. அது மனித உயிருக்கு நாசம் விளைவிக்கக்கூடியது. கல்பாக்கத்தில் அணு உலை அகற்றப்பட வேண்டும்.

ஒரு புறம் நாடாளுமன்றம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆகின்றன என பெருமை பேசும் அரசு, மறுபுறம் இங்கு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிறது. கருத்துச்சுதந்திரம் என்பது ஜனநாயக உரிமை. இந்த போராட்ட செய்திகள் மக்களிடையே போய்ச் சேரக்கூடாதா? ஊடகங்களின் இருட்டடிப்பு ஏன்? நான்கு பேருந்துகளை எரித்தால் தான் செய்தியாகுமா ? கடைவீதியில் வன்முறை நடந்தால் தான் செய்தியாகுமா ? சமுதாயச் சீர்கேடுகள் தான் செய்தியாகுமா ? பண்பாட்டுச் சீரழிவுகள் தான் செய்தியாகுமா ? ஏன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் செய்தியாகக்கூடாதா ?

ஆர்ப்பாட்டங்களுக்கும் உண்ணாவிரதங்களுக்கும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இனிமேல் பனகல் மாளிகை அருகே கூட ஆர்ப்பாட்டம் நடத்த தடை என அரசு அறிவித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. உண்ணாவிரதம் என்றால் மக்கள் சஞ்சரிக்காத கூவம் ஆற்றின் கரையில் தான் அனுமதி அளிக்கப்படுகிறது. முன்னாள் அரசும் இதே தவறைச் செய்தது. இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது.தோழர் கொளத்தூர் மணி கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த உண்ணாவிரதத்திற்கு இடமளித்ததைப் போல‌ எந்த ஒரு மக்கள் போராட்டத்திற்கும் தாயகம் இடமளிக்கும். தமிழ்நாட்டின் மான உணர்வின் அடையாளமாக திகழ்கிறார்கள் அந்த இடிந்த கரை மக்கள். 8 மாத இடையறாத போராட்டம் இத்தனை அமைதியாக இந்திய வரலாற்றில் எங்குமே நடந்ததில்லை.

உலை திறக்கும் கோரிக்கையில் நான் கையெழுத்திட மாட்டேன் என்று உறுதியாக இருந்த ஜெயலலிதா, சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கு பின் முற்றிலும் தலைகீழ் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். இந்திய வரலாற்றில் எங்குமே நிகழாத வண்ணம், 55795 பேரின் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. 1000 பேருக்கு மேல் தேசத்துரோக வழக்கு. காந்தி காட்டிய அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெகுமதியா இது ?

1988ல் இந்திய நாடாளுமன்றத்தில் ரஷ்ய அதிபர் மிக்கேல் கோர்பசேவ்வுக்கு வாழ்த்துரை வழங்கி பேசிய இராஜிவ் காந்தி, இந்திய ரஷ்ய ஒப்பந்தத்தின் படி ஒரு அணு உலை திறக்கப்படும் என்று வாசித்தார். இதை நான் அன்றே கடுமையாக எதிர்த்தேன். எனக்கும் இராஜிவுக்கும் கடுமையான வாதம் நடைபெற்றது.

போராடும் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெற வேண்டும். சிறையிலிருக்கும் தோழர்கள் சதீஷ், முகிலன் ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும். மக்கள் கேட்கும் EAR (Environmental Analysis Report) அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.மக்கள் அறவழியில் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் அமைதியாக நடந்து வருகிறது. மீனவ மக்கள் சூறைக்காற்றுக்கும் சுறாமீனுக்கும் அஞ்சாதவர்கள். பனைமர உயர எழும் அலைகடலிலே கட்டுமரத்தைச் செலுத்தும் மரணத்துக்கு அஞ்சாத நெஞ்சுரம் கொண்டவர்கள். நியாயத்துக்காக போராடும் மக்கள் நாதியற்று போய் விட மாட்டார்கள். அவர்களின் இந்த அமைதி வழிப்போராட்டம் எப்படி வடிவமெடுக்கும் என்பது தெரியாது. எரிமலை வெடிப்பதற்கு முன்பு அமைதியாகத் தானிருக்கும். அறப்போராட்டம் எப்படி வடிவமெடுக்கும் என்பதற்கு ஈழமே சான்று. அரசுகளுக்கு எச்சரிக்கிறேன்.

இதில் பங்குபெற்ற அனைத்துத் தோழர்களுக்கும் நன்றியுரைத்து நிகழ்வினை முடித்தார், சேவ் தமிழ்சு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில்.

Pin It