ஈழத்து இலக்கிய வரலாற்றில் சிறுகதை எழுதுதல் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் சிறுகதைகளை எழுதும் வீதம் சமீக காலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் திருமதி. ஸக்கியா ஸத்தீக் பரீத் அவர்களும் பெண் சிறுகதை எழுத்தாளர்கள் வரிசையில் இணைந்து கொள்கின்றார். பட்டதாரி ஆசிரியரான இவர் விடியலின் விழுதுகள் என்ற சிறுகதைத்தொகுதி உட்பட முதிசம், இதயத்தின் ஓசைகள் என்ற நூல்களையும் வெளியிட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுதியில் திருப்பம், மங்கா வடு, காலத்தின் கோலம், கண்ணீர் எழுப்பிகள், இறை தீர்ப்பு, திசை மாறிய பறவை, நிரபராதிகள், கோக்கி யார், மின்னும் தாரகை, இணங்கிப் போ மகளே, இலவு காத்த கிளி, முக்காட்டினுள் மாமி, நியதி ஆகிய பதின்மூன்று சிறுகதைகள் 122 பக்கங்களில் அமைந்திருக்கின்றது.

திருப்பம் என்ற முதல் கதை அப்பாவிப் பெண்ணான மஸ்னாவைப் பற்றி பேசுகிறது. பிறக்கும்போதே தாயை இழந்த அவள் உம்மும்மாவின் தயவிலேயே வாழ்கின்றாள். காலங்கள் நகர்ந்து செல்ல உம்மும்மா மௌத்தாகின்றார். அதன் பின் மஸ்னாவுக்கு வாழ்க்கையின் பாரதூரம் புரிய ஆரம்பிக்கின்றது. தான் தனித்த விடப்பட்டதாக எண்ணி கவலைக்கொண்டிருக்கும் சமயத்தின் பக்கத்து வீட்டு மைமூன் நோனா மஸ்னாவைத் தேடி வருகின்றார். மஸ்னாவின் படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு தனது வீட்டு வேலைக்காரியாக்குவதே மைமூன் நோனாவின் உள்நோக்கமாக இருந்தது. உம்மும்மாவின் சகோதரரான குஞ்சு மாமா மஸ்னாவை அவர்கள் நன்றாக பார்த்தக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அவளை அனுப்பி வைக்கிறார்.

அவளுடைய வாழ்க்கையின் அடுத்த பயங்கர கட்டம் இங்குதான் நிகழ்கின்றது. அதாவது மைமூன் நோனாவின் மகன் பியாஸ், மஸ்னாவின் பேரழகில் மயங்கி அவளை வேட்டையாடுவதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றான். அது மாத்திரமன்றி அறுபது வயதாகியும் ஆசை நரைக்காத மைமூனின் கணவனும் மஸ்னாவில் குறிவைத்திருக்கிறார்.

எதேச்சையாக ஒருநாள் மைமூனின் கணவர் மஸ்தானிடம் அகப்பட்டுக்கொள்ளுவதிலிருந்து மயரிழையில் தப்பும் மஸ்னா, வீட்டைவிட்டு ஓடிவந்து தாஹிர் ஹாஜியாரின் வீட்டில் நுழைகிறாள். தங்க மனம் படைத்த அவரும் அவரது மனைவியும் மஸ்னாவை தம் பிள்ளைபோல ஆதரித்து அவளுக்கு வீடும் கட்டிக்கொடுத்து திருமணம் முடித்து வைப்பதாக கதை நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த சமூகத்தில் நடமாடும் சில வேங்கைகள் பார்ப்பதற்குத்தான் பசுக்களாகத் தெரிகின்றனர். ஒரு அப்பாவி மாட்டி விட்டால் அவளை எப்படி கூறுபோட்டு எப்படி விற்றுவிடலாம் என்ற கேவலமான புத்திகொண்டவர்கள் நம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றார்கள். அத்தகையவர்களிடமிருந்து தப்புதல் பெருங்கஷ்டம். எனினும் மஸ்னாவின் இறைபக்தியும், துணிச்சலும் அவனைக் காப்பாற்றி விட்டது.

சிறுமிகளை வேலைக்குச் சேர்க்கும் இன்னொரு கதையாக மங்கா வடு அமைந்திருக்கின்றது. ரிஸ்மினா என்ற பெண் வேலைக்கார சிறுமிக்கு செய்கின்ற கொடுமைகள் இக்கதையில் விளக்கப்பட்டிருக்கின்றது. எந்த வேலையென்றாலும் இந்தச் சிறுமியை ஏவுவது, அடிப்பது, சூடு வைப்பது முதலிய கொடுமைகள் நிகழ்கின்றன். இவ்வளவுககும் ரிஸ்மினாவின் மகள் ஷர்மிளாவின் வயதையொத்த சிறுமிதான் இந்த வேலைக்காரச் சிறுமி.

இவ்வாறு நடந்துகொள்வது பொலீஸீக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்றும் வேலைக்கார சிறுமி மீது பரிவும் காட்டிக்கொண்டிருக்கின்றார் எதிர்வீட்டு ஆரிபா தாத்தா. தீடீரென கோலிங்பெல் அடிக்கிறது. பொலீஸார்தானோ என்று பயப்படும் ரிஸ்மினா பதட்டததோடு நிற்க, வந்தவர்கள் சொல்லும் விடயம் ரிஸ்மினாவை அதிர்ச்சியடைய வைக்க இருவரும் வைத்தியசாலையை அடைகின்றனர். அங்கே... ரிஸ்மினாவின் மகள் ஷர்மிளா இறந்து கிடக்கின்றாள்.

ரிஸ்மினாவை விட வேலைக்கார சிறுமிக்குத்தான் வேதனை அதிகமாக இருக்கின்றது. அது கீழுள்ள வரிகளில் அழகாக கூறப்பட்டிருக்கின்றது.

ஷநோனா அடிக்கும்போதெல்லாம் தன்னைக் காப்பாற்றிய உத்தமி ஷர்மிளா, உம்மாவுக்குக் களவாக எல்லாத் தீன்பண்டங்களையும் தரும் என் அன்புத்தங்கை ஷர்மிளா, ஷர்மிளா தான் இந்த வீட்டில் எனக்குள்ள ஒரே ஆறுதல்...|

இறுதியில் ரிஸ்மினாவின் இதயம் துடிக்கின்றது. தன் மகளாக வேலைக்காரச் சிறுமியை வளர்க்கப்போவதாக அவள் கூறுகையில் அந்தச்சிறுமி அதை மறுத்து, ஷர்மிளா இல்லாத வீட்டில் தான் இருக்கப் பேவதில்லை என்று கூறி தனது வீட்டுக்கு சென்று விடுகின்றாள்.

மனிதர்கள் போடும் திட்டங்கள் முற்று முழுதாக சரியாக இருக்காது. அல்லாஹ்வின் திட்டங்கள்தான் சரியாக இருககும் என்பதை இறைத்தீர்ப்பு என்ற கதை விளக்கி நிற்கிறது. வசதிவாய்ப்புகளோடு வாழும் ரிஸானாவுக்கு முப்பது வயதில் முர்ஷித் என்ற மகன். அவனுடைய திருமணத்தை தடைசெய்த படியே இருக்கும் ரிஸானாவின் நண்பியான சப்ரியத் ஆண்டி. உம்மாவும் சப்ரியத் ஆண்டியும் பார்ககும் பெண்களையெல்லாம் குறை கூறிக்கொண்டிருப்பது பிடிக்காமல் நல்மனம் படைத்த முர்ஷித் வெளிநாடு சென்று விடுகிறான். கதையின் இறுதி முடிவு மிகவும் சந்தோஷமாக அமைந்திருக்கின்றது. அதாவது ஏற்கனவே முர்ஷித் பெண்பார்க்கச்செல்லும் தாஹிரா என்ற பெண்னை உம்மா வேண்டாம் என்கிறாள். அல்லாஹ்வின் நாட்டம் ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்த அதே அழகில் தனது மழலைகளுடன் கணவரை இழந்து விதவையாக இருக்கிறாள் அந்தப்பெண் தாஹிரா. அவளை முர்ஷித் திருமணம் செய்ய ஆசைப்படுவதை அறிந்து முதலில் ரிஸானா துடிக்க, சப்ரியத்துக்கு விட்மின் டொனிக் குடித்த பரவசம் ஏற்படுகிறது.

அடுத்தவரின் துக்கத்தில் சந்தோஷம் காணும் சப்ரியத்தின் திருவிளையாடல்களை புரிந்துகொண்டு, தனது நண்பியால் தனது மகனின் வாழ்வு இத்தனைக் காலங்களாக பாழ்ப்பட்டிருப்பதை இறுதியாக உணர்ந்து கொள்ளும் ரிஸானா, சப்ரியத்தைக் கூப்பிடாமல் தனது உறவினர்களுடன் தாஹிராவின் வீட்டுக்குச் சென்று திருமணம் பேசுவதாக கதை முடிந்திருக்கின்றது. சப்ரியத் போன்றவர்கள் கதைகளில் மாத்திரம் உலாவும் பாத்திரங்களல்ல. நிஜத்திலும் அவ்வாறு இருக்கின்றார்கள். அவர்களை அறிந்து விலக வேண்டியது எங்கள் திறமையில் தங்கியிருக்கிறது.

இன்று பல்கலைக்கழகங்கள் தோறும் பகிடிவதை நடைபெறுகிறது. சிலர் அதைத் தாங்கிக் கொள்கிறார்கள். வேறுசிலர் படிப்புக்கே கும்பிடு போட்டுவிட்டு வந்துவிடுகின்றார்கள். சமூக மயமாக்கல் என்ற பெயரில் நிகழும் இந்த கலாச்சாரம் வெறும் அநாச்சாரம் என்று இன்னும் மாணவ சமூகம் புரிந்துகொள்ளவில்லை. திசைமாறிய பறவை என்ற கதையில் வரும் அஸ்மா டாக்டர் ஆகும் நோக்கத்தோடு பல்கலைக்கழகத்தில் காலடி எடுத்து வைக்கிறாள். அங்கு குழுமியிருந்த மாணவர் கூட்டம் அவளது ஹிஜாபை கழற்றி வீசச்சொல்கிறது. செருப்பை தலையில் வைத்து நடக்கச்சொல்கிறது. இறுதியில் புளித்த பாலில் மிளகாய்த் தூள் தூவி அதை அருந்த வைக்கிறார்கள். இந்த சம்பவம் அஸ்மாவை பெரிதும் பாதிப்படையச் செய்கிறது. இரைப்பையில் அலர்ஜி ஏற்படுவது மாத்திரமன்றி அவள் மனநோயாளியாகவும் மாறி விடுகின்றாள். காலம் கழிய பகிடிவதையில் நாயகனாக செயற்பட்ட முனாஸ் என்ற மாணவன் டாக்டராகி அஸ்மாவை இந்தக்கோலத்தில் சந்திக்கிறான். அவளது நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றான். அவன் செய்த காரியத்தால் மனநோயாளியாகியிருக்கும் அஸ்மாவை இறுதியில் தன் மனைவியாக்கி அவளுக்கு வாழ்வு கொடுக்கின்றான். டாக்டராக வரமுடியாமல் போன அஸ்மா, டாக்டரின் மனைவியாகி நிற்பதைக் கண்டு ஊரே ஆனந்தப்படுவதாக கதை முடிந்திருக்கின்றது.

கோக்கி யார் என்ற கதை உள்ளத்தை உருக்கும் சம்பவமாக இருக்கின்றது. ஹோட்டல் ஒன்றில் இரவுபகலாக நெருப்பில் வெந்து தனது மகனின் படிப்பு செலவுகளை மேற்கொள்ளும் காஸிம் காக்கா நம்பிக்கையான மனிதர். அவர் கொழும்பிலிருந்து ஊருக்குப் போகும்போது அவர் கொண்டுபோகும் நெய்பூந்தியை வாங்கவென்றே சிறுபிள்ளைகள் அவரது வருகைக்காய் காத்திருப்பார்கள். தந்தை படும் கஷ்டங்கள் தெரியாமல் வளரும் மகன் தப்ரிஸ் வீடுமுறைகளில் கொழும்புக்கு வந்து ஓரிரு நாட்கள் வாப்பா காஸிமுடன் தங்கிவிட்டுச் செல்வான். அவன் சாதாரணதர பரீட்சையில் நல்ல முறையில் சித்தியடைந்தாலும் அவனது ஒழுக்கத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படுகிறது. அதனால் மனமுடைந்து இருதய நோயாளியாகிறார் காஸிம். தப்ரிஸ் உயர்தரம் கற்பதற்காக வேண்டி விண்ணப்பங்களுக்கு ஒப்பம் பெற காஸிமைத்தேடி வருகிறான். ஹோட்டலில் அவர் இல்லை. அவரது அறையிலும் இல்லை.

முதலாளியிடம் வந்து வாப்பா எங்கே என்று கேட்காமல் மரியதையின்றி கோக்கியார் எங்கே என்று கேட்க, முதலாளிக்கு கோபம் உச்சத்தை அடைகிறது. தறுதலையாக இருக்கிறானே என்று திட்டியவர் வைத்தியசாலைக்கு அழைத்துப்போகின்றார். போகும் வழியில் காஸிம் அடுப்படியில் வெந்து பட்ட கஷ்டங்களைச் சொல்ல தப்ரிஸூக்கு அடிமனதில் ஏதோ நெருடுகிறது. வைத்தியசாலையில் வைத்து காஸிம் காக்காவின் தலையை முதலாளி ஆறுதலாக தடவி விடும்போதே கண்மூடி காஸிம் இறந்து போகின்றார். தவறை உணர்ந்த தப்ரிஸ், முதலாளியின் உதவியுடன் வாப்பாவின் ஆத்ம சாந்திக்காக மீண்டும் பழைய தப்ரிஸாக மாறி படிக்கின்றான்.

இங்கே நான் கூறியவற்றிற்கும் அப்பால் இன்னும் பல நல்ல கதைகள் இத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. திறமையாகவும், வித்தியாசமான கோணத்திலும் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகள் மனதை ஈர்க்கின்றன. அனைவரும் வாசித்து பயனடையக் கூடிய விதத்தில் இத்தொகுதி அமைந்திருக்கின்றது. கதாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - விடியலின் விழுதுகள் (சிறுகதைத் தொகுதி)
நூலாசிரியர் - ஸக்கியா ஸித்தீக் பரீத்
முகவரி - 4/4 நிகபே வீதி, நெதிமால, தெஹிவளை.
தொலைபேசி - 011 2726585
வெளியீடு - எக்மி பதிப்பகம்
விலை - 175/=
 
- தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It