சிறுமிக்கும் குமரிக்குமான வித்யாசங்களை அவளிடமிருந்து மெல்ல செதுக்கிக் குறைத்துக் கொண்டிருந்தது காலம். காலத்தின் இரவில் கனவு கண்டு புரண்டாள் புஷ்பா. கனவில் படுபாதாளமாய் ஆழ்ந்திருந்தது ஒரு கிணறு. அதன் நீர் சாந்தின் பிசுபிசுப்பில் துளும்பிக் கிடக்க அதில் மெல்ல நீந்திக்கிடந்தன இரு மீன்கள். குளித்துத் துவட்டும் போது வெற்றுடம்பின் எடுப்பை வியக்காது எடுப்பின் மச்சத்தை ஒருத்தி தொட்டு வியப்பது போலவே அவள் மின்னும் மீன் குறித்து வியக்காமல் நீரின் நிறம் குறித்து வியந்தாள். வியப்பு அவளின் உதட்டையும் இமையையும் துடிக்கச் செய்தது. சுருண்டு கதகதப்பாய் உறங்கிய சிறுமி அவளை காலத்தின் உலையடுப்பும் கொதிநெருப்பும் வார்த்துக்கொண்டிருந்தது. அந்த இரவின் கனவுப் பொழுதில் அவளுக்கு வயது பதினொன்றுக்கும் சிலநாள் குறைவாகவே இருந்தது.

தன் மூப்பால் எழுபத்தியிரண்டு பெண்களுக்கு உடல் பார்த்து சமயும் நாள் சொன்ன அவள் பாட்டியைப் போல புஷ்பா அனுபவப் பட்டவள் இல்லை என்றாலும் ஒருத்திக்கு கனவில்; ஆண் பிள்ளையின் சாயலொத்த நிமித்தங்கள் வந்தால் மறுநாளே சமைந்து நிற்பாள் என்று கனவில் நினைவோடிற்று அவளுக்கு. ஆண் பிள்ளை கனவில் வருவது கள்ளத்தின் அடையாளமென்று அவள் அம்மா சொல்வதும் அவளுக்கு உறைக்காமல் இல்லை.

கனவில் நீந்தியது மீன்கள்தான் என்றாலும் அதில் ஒரு மீன் ஆண் மீனாகத்தான் இருக்கும் என்று உறுதியாய் நம்பினாள். அதே நேரத்தில் எது ஆண்;, எது பெண் என்று பேதம் அறியாது குழம்பினாள். மீன்கள் ஒன்றையொன்று கவ்விப் பிரியும் ஒவ்வொரு முறைக்கும் புஷ்பா புரண்டு தன் அம்மாவின் மேல் கால் போட்டு இறுக்கிக் கொண்டாள். உடல் உஷ்ணமோ மிஞ்சியபடி இருந்தது. மகளின் தொடையை முரட்டுத் தனமாய் அம்மா தட்டிவிட கனவின் இரு மீன்களில் ஒரு மீன் அளவில் ராட்சசமாய் வளர்ந்து, இன்னொரு மீனை ஈட்டிப் பல்லால் இரு துண்டாக்கி, இரு துண்டையும் விழுங்கியது. திடுக்கிட்டு விழித்த புஷ்பாவின் பயந்த விழிகளில் இன்னமும் ராட்சச மீன் பீய்ச்சிய ஆயிரக்கணக்கான முட்டைகள் பொன்னிறத்தில் மின்னியது. ராட்சசம் முட்டை வைக்கிறதென்றால் துண்டுபட்டது ஆண் மீனாகத்தான் இருக்கும். ஆண் மீன் மீது பரிதாபம் ஏற்பட அவளுக்கு உறக்கம் பிடிக்கவில்லை.

வெறுமென படுத்திருந்த அவளை, அவள் அம்மா, காக்கை கத்தும் கரும் விடியலில் திட்டி எழுப்பினாள். பெண் விடியும்வரை படுக்கையில் புரண்டுக் கிடப்பது தவறென்று அம்மா சொல்லும்போதே புஷ்பாவுக்கு எண்ணம் ஓடிற்று... ராமக்காள் ஏரிக்கும் வெகு தூரத்தில் உதிக்கும் ச+ரியனின் வெயில், காக்கைக்கும் கருநாய்க்கும் ஒன்றே எனும்போது தனக்கும் தன் அண்ணனுக்கும் மட்டும் விடிவது எப்படி வித்தியாசப்படும் என்று. சற்று தள்ளி அவள் அண்ணன் லுங்கி அவிழ அலங்கோலத் தூக்கத்தில் இருந்தான். சந்தேகத்தை அவள் வாய்திறந்து கேட்கவில்லை. கேட்டால், அம்மாவின் வலது உலக்கை அவளின் நடு மண்டையில் இடியென இறங்கும்.

தூக்கக் கலகத்தில் அம்மாவின் கண்களும் கனவில் கண்ட மீன்கள் போல தெரிய, இதில் எம் மீன் ஆண் மீன் என்று அறிய உற்றுப் பார்த்தாள். தெரிந்தால் அதற்கு மட்டும் மை வைத்து அழகு பார்க்க எண்ணமிருந்தது அவளுக்கு. அம்மாவின் மீன் கண்களோ ராட்சச பற்களுடன் முறைத்தது. “என்னடி முறைக்கிற...! குடத்த எடுத்துகிட்டு கிளம்பு. தண்ணி எடுத்தாற வேணாமா?” விரட்டினாள் அம்மா. அவள் பயந்து, விழுந்தடித்து குடங்களைத் தேடி எடுத்தாள். தன்னை முகம் பார்த்துக்கொள்ளவோ, அழகாக்கிக் கொள்ளவோ, தன் வனப்பு குறித்து யோசிக்கவோ நேரமின்றி ஆறேழு குடங்களை எடுத்துக்கொண்டு பத்துக் கை காளி ஆயுதங்களோடு யுத்தத்திற்கு போவது போல வெளிச்சமற்ற விடியலில் அவள் ஊரின் பொதுக்கிணற்றிற்கு போனாள். ‘ஆண்டிக்கு மடம் அழகு! பெண்ணுக்கு குடம் அழகு!’ என்று எந்த சோம்பேறியும் சொல்லி இவள் கேள்விப்பட்டதில்லை. ஆனாலும், பெண்களுக்கு மட்டும் இடுப்பில் பாவாடைக்கு அடுத்தபடி குடங்கள் ஏன் அதிகப்படியான நேரம் தங்குகிறது என்ற தர்க்கம் அவளை வழிநெடுக குடைந்துகொண்டே வந்தது.

அங்கே பொதுக்கிணற்றைச் சுற்றி மந்தை யானைகள் போலவும், கறுப்பு எருமைகள் போலவும், ஆடுகள் போலவும், பெருச்சாளிகள் போலவும் சிறிதும் பெரிதுமாய் குடங்கள் பெருகியிருந்தன. நீர் இல்லாத ஊரின் இரவுகளில் பெண்கள் உறங்குவதே இல்லை. தனக்கு எப்படியும் மத்தியானத்திற்கும் சாயிந்தரத்திற்குமான ஒரு பொழுதில்தான் குடம் நிரப்ப நேரம் வரும் என்பதை உணர்ந்த அவளுக்கு சலிப்பு ஏற்பட்டது. குடத்தோடு கிணற்றடியில் உட்கார்ந்தாள். மீன்களின் கனவு அவளின் மனசில் இன்னும் நீந்தியது. உடம்பின் நரம்புகளிள் மீன் விளையாட்டின் குறுகுறுப்பு ஓடியது. துண்டுபட்ட மீனின் ரத்த அதிர்ச்சியும் இதயத்தில் துடித்தது. அங்கிருந்த வெற்றுக் குடங்களை நோட்டமிட்டாள். குடத்தின் நீரில் அந்த மீன்கள் நீந்துமா? கனவு மீன்கள் எத்தனை பெரிதென்று தெரியாமல் மலைத்தாள். ஒரு வேளை அவை மலையளவு பெரிதேர் இந்த கிணற்றில்கூட நீந்தமுடியாத பெரிதோ?

அந்த பொதுக்கிணறு என்பது ஊருக்கெல்லாம் ஒரே கடலாக இருந்தது. ‘முட்டிக் குடி கண்ணு...’ என்று தன் கன்றுக்கும், போகிற போக்கில் மாற்றுப் பசுவின் கன்றுக்கும், அதன் பிறகு தன் குலத்திற்கே ஒவ்வாத மனிதன் பெற்ற கன்றுக்கும் பால் பீய்ச்சிக் கொடுக்கும் உபகாரப் பசுவைப் போல எத்தனை பேர் வந்தாலும் வற்றாமல் நீர் சுரந்துகொண்டிருந்தது அந்தக் கிணறு. இளநீர் சுவை கொண்டதாய், கற்கண்டின் தித்திப்பாய் அதன் நீர் சுவைக்காது என்றாலும் நாக்குத் தோல் உறிந்து போகாத அளவுக்கு உப்போடும், கண்ணீர் வராத அளவுக்கு காரத்தோடும், தோல் வெந்துவிடாத அளவுக்கு உஷ்ணத்தோடும் இருந்தது அதன் நீர். உப்பாய் இருந்தாலும் ஊருக்கு அது அமிர்தக் கிணறுதான். அமிர்தம் உப்புக்கரிக்காது என்பது உண்மையல்ல.

‘வழக்கமாக வட்டமான இடங்களை ஆண்கள்தான் மொய்ப்பார்கள் ஆனால் விதிவிலக்காய் கிணற்று வட்டங்களை மட்டும் எப்பொழுதும் பெண்கள்தான் மொய்க்கிறார்கள்’ - மேற்படியதை நினைத்து ‘களுக்’கென்று சிரித்த புஷ்பாவுக்கு நிஜமாகவே பதினொரு வயதுதான். அவள் சிரித்ததைப் பார்த்து புருவம் நெறித்த ராமாயிக் கிழவிக்கு முகம் மறைத்தாள் புஷ்பா. முகம்;; தெரிந்துவிட்டாள் பருவம் நோக்கி நிற்கும் குமரி மனசுக்குள் குறுகுறுத்து சிரிப்பை மூட்டும் சங்கதி எதுவென்று அறிந்து அதை வெளிப்படையாய் எல்லோர்க்கும் சொல்லி குமரி மனசு நோக வெறுப்பேற்றி விடுவாள் அவள்.

பெண்கள் அந்த இடத்தை ‘பேசும் சந்தைக்காடு’ ஆக்கிக்கொண்டிருந்தார்கள். வெளிச்சமற்ற உடம்பின் மசங்களை வைத்து ஆள் யாரென்று அனுமானிக்க முடிந்தது புஷ்பாவால். குடங்களைப் போலத்தான் பெண்கள். சிலருக்கு குடத்தின் வாய் விளிம்புபோல இறுக்கமான வளைந்த உருவம், சிலருக்கு நடுக்குடத்தின் பருமன் போல சதையுருண்டை உருவம், சிலர் நிமிர்த்;தி வைத்த குடத்தைப்போல மேல் சிறுத்து கீழ் பருத்து இருந்தார்கள், சிலர் கவிழ்த்து வைத்த குடம்போல மேல் பருத்து கீழ் சிறுத்து இருந்தார்கள். சிலர் அண்டாக்களைப்போல மேலிருந்து கீழ் ஒரே சமமாய் இருந்தார்கள். குடத்திற்கும் அண்டாவிற்கும் பெயர் உண்டு வாய் உண்டு.

கிரீச்சிட்ட குரலில் ஒரு ஒடுங்கிய குண்டா போல் இருந்த ராமாயிக் கிழவிதான் இன்றைக்கும் முதல் ஆளாக வந்து தண்ணீர் சேந்திக்கொண்டிருந்தாள். அவளுக்கு தூக்கம் பகலிலா, இரவிலா யாருக்கும் தெரியாது. அவளை முந்திவந்து யாரும் தண்ணீர் சேந்தியதாய் பொதுக்கிணற்று சரித்திரமே கிடையாது. போட்டியாக வருகிறேன் என்று நடுச் சாமத்தில் வந்து கிணற்றில் தோண்டியை விடவும் யாருக்கும் இந்த ஊரில் தைரியம் கிடையாது. அப்படி செய்யாதபடிக்கு கும்மிருட்டின் பயமெழுப்பும் வினோதக் கதையொன்றை ராமாயிக் கிழவி ஊரில் உலாத்திவிட்டிருக்கிறாள். கதை அவளே புனைந்தது என்றாலும் அவளுடைய கண்ணற்ற பாட்டி பலவருசத்துக்கு முன் கண்டுணர்ந்து சொன்ன உண்மைக் கதை என்பாள்.

நடுச் சாமத்தில் சத்தமெழுப்பி தண்ணீர் சேந்தினால் உள்ளே வசிக்கும் கிணற்றுக் கோட்டானின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்று கிழவி சொன்ன வீபரீதக் கதையின் விஸ்தாரத்திற்காக எல்லோரும் அஞ்சினார்கள். கிணற்றுக் கோட்டான் என்பது கிணற்றின் பொந்துகளில் தங்கியிருந்து வயல் எலிகளை பிடித்து வந்து தின்று வயிறு வளர்க்கும் ஒரு அப்பாவி பறவைதான் என்றாலும் நல்லிரவில் அது பறந்து உச்சிக்கு போகும்போது அதன் நிலா நிழல் யார் தலையிலாவது பட்டால் படை படையாய் பேன் பிடித்து, ஈறுகள் அதிகமாகி, முடி மொத்தமும் கொட்டிப்போய், தலை சொறிந்து புண்ணாகி, புழுத்து தலை நாறி, செத்துப் போவார்கள் என்று ராமாயிக் கிழவி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் எல்லோரையும் மிரட்டி வைத்திருக்கிறாள். அப்படி தலை புழுத்து செத்தவர்கள் யாரும் ஊரில் கிடையாது என்றாலும் எதற்கு வம்பென்றார்கள் தைரியசாலிப் பெண்கள்.

‘கோட்டான் ஏன் சபிக்க வேண்டும்?’ என்று யாரும் கேட்கவில்லை என்றாலும் காரணத்தை ராமாயிக் கிழவியே சொல்வாள்: கிணற்று பொந்துகளில் கோட்டான்கள் ஆணும் பெண்ணுமாய் கூடி சந்தோசமாய் இருக்கும்போது யாராவது தண்ணீர் சேந்தினால்; தோண்டியின் சத்தம் கேட்டு பயந்து ஆண் கோட்டான் செத்துப் போகும், பெண் கோட்டான் கிணற்றுக்கு மேல் கிளம்பி பறக்கும். அந்தக் கோட்டான் நிழல் சாபத்தினால் கறுப்பாய் இருக்கும். அந்த நிழல் பட்டால் சாவுதான். இதை நாளுக்கு இரு முறை சொல்வாள் கிழவி.

மனிதர்களைப் போலவே எல்லா நாளுமே கிணற்றுக் கோட்டான்கள் ராத்திரியில் புருஷன் பொஞ்சாதியாய் சந்தோசமாகத்தான் இருக்குமா? இப்படி புஷ்பாவுக்கு சந்தேகம் வந்தது. ஆனால் ராமாயிக் கிழவியிடம் கேட்க அதைரியப்பட்டாள். நம்பத்தகாத அசிங்கமான இன்னொரு விதமான புனைகதை சொன்ன ராமாயிக் கிழவியை எதிர்கேள்வி கேட்டதற்காக பரஞ்சோதியைப் பற்றி ராமாயி விட்ட கதை இவளுக்கு வந்து வந்து பயமுறுத்தியது. “தொளையில்லாத புத்துலேயும் பாம்பிருக்கும் பாத்துப் போ...’ன்னு பாக்கு மத்தன்; சும்மாவா சொன்னான்...” என்று கன்னத்தில் கை வைத்து, சமையாத பெண்கள் குறித்து அதிசயமாய் பேசுவாள் ராமாயிக் கிழவி. மேற்படி தத்துவம் சொன்ன ‘பாக்கு மத்தன்’ என்பவன் ஏதோ சித்த புருஷனல்ல, ராமாயிக் கிழவியின் செத்த புருசன்தான்.

அதே பாக்கு மத்தன், கட்டுவிரியன் பாம்பு உலாத்தும் புதர்க்காட்டில், பெயர் தெரியாதவர்களோடு ஒதுங்கும் செவத்தாளைப் பார்த்து, ‘ஊருக்கு ஒரு கிணறு... அதற்கேழு ராட்டினமாம்!’ என்று ஒரு பாட்டும் பாடியதாக ராமாயிக் கிழவி சொல்வாள். முழுப் பாடலும் கிழவிக்கு தெரியாது என்றாலும் பொதுக் கிணறு என்பது செவத்தாளைப் போல யார் முதலில் பிடிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் சொந்தம் என்று சட்டம் பாடுவாள். மத்தன் பாடியது போலவே நிஜ கிணற்றுக்கும் மொத்தம் ஏழு ராட்டிணங்கள் இருந்தது. கிணறும் ராட்டிணமும் ஊருக்குப் பொது. முதலில் பிடிப்பவர்களுக்கு அது சொந்தம். தேவையான அளவு நீர் இறைத்தபின் அடுத்தவர் கைக்கு ராட்டிணம் வரும். ராட்டிணம் மட்டும் தான் பொது, அதில் மாட்டப்படும் கயிறும் கயிற்றில் கட்டப்படும் தோண்டியும் அவரவர் கொண்டு வரவேண்டும். யாருக்கும் யாரும் கடன் தர மாட்டார்கள்.

தைரியமுள்ளவர்கள் மட்டுமே வெரும் குடத்தோடு வந்து யாரிடமாவது கயிறு கடன் கேட்பார்கள். கொஞ்சமேனும் நெஞ்சில் கூச்சமிருந்தால்; நீர் இல்லாமல் போனாலும் போவார்களேயன்றி தவறியும் கடன் கேட்கமாட்டார்கள்; கேட்டாலும் ராமாயிக் கிழவியிடம் மட்டும் கேட்கவே மாட்டார்கள். ஒருமுறை புஷ்பாவின் அம்மா கயிறு கடன் கேட்டு, ராமாயிக் கிழவியிடம் பட்ட பாடு ஊரறிந்த சிரிப்பு. அப்பொழுதுதான் நல்லம்பள்ளி சந்தையில் புதுக் கயிறு வாங்கி வந்திருந்த அந்த ராமாயிக் கிழவியிடம் அவள் தெரியாத்தனமாக கடன் கேட்டுவிட்டாள். அதற்கு ராமாயிக் கிழவி பதறிப்போய், “ஐயோ ஆத்தா! நீ நல்லா இருப்பே... நேத்து தானே இந்த கயித்த புதுசா வாங்கினேன். இத கேக்கறியே... எம் புருசன் வீட்டுல சும்மாதான் இருக்கான், அவன வேணா கேளு. ரெண்டு நாளு ராத்திரி அனுப்பி வெக்கிறேன். என் கயித்தை மட்டும் கேக்காத ஆத்தா!” என்றாள். மொத்த கிணறும் சுத்தி நின்று சிரித்தது. ஒரு நாளைக்கு கடனாக கயிறு கொடு என்று கேட்டால் வயிறு பெருத்தக் கிழவனோடு இரு நாளைக்கு இருக்கச் சொன்ன கிழவிக்கு பதில் சொல்;லமுடியாத அவமானத்தோடு உட்கார்ந்துவிட்டாள் புஷ்பா அம்மா. அவளை முன் ஏராக வைத்துக்கொண்டு ஊரில் எவரும் யாரிடமும் கையேந்தி கயிரு கேட்பதில்லை. கேட்டால் கயிறுள்ளவளின் புருசன் என்ன கதியாக இருப்பானோ.

இந்த கூத்து நடந்து ஒரே வாரத்தில் சம்மந்தப்பட்ட கிழவன் செத்துப் போனான். மீண்டும் ஊரே வயிறு வலிக்க சிரித்தது. ஒரு சாவுக்கு அந்த ஊர் சிரித்தது அதுதான் முதல்முறை. ராமாயிக் கிழவி தன்னை கடன் கொடுத்துடுவான்னு பயந்துதான் கிழவன் செத்துப்போனான் என்று எக்காளமிட்டு சிரித்தார்கள் பல்லுள்ள வாய்க்கு சொந்தக்காரிகள். தள்ளாட்டத்தில் சாகும்போது கிழவனுக்கு வயது எழுபதுக்கும் மேல். அதன் பிறகு அரசல் புரசலாக ஒரு பலமொழி உருவாகி ஊரில் நடமாடியது அந்த ஊரில்... ‘யானை ஒன்னு மாப்பிளைதேடி காட்டுக்குப் போச்சாம். அங்க ஒரு சுண்டெலி சுருக்கு மாட்டி செத்துப் போச்சாம்’ கிழவனின் ஒல்லி உடம்புக்கும், புஷ்பா அம்மாவின் பருத்த உடம்புக்குமாய் இட்டுக்கட்டி எழுப்பிய கதை அது.

இப்படியொரு சரித்திரக் கதைக்கு சொந்தக்காரியான புஷ்பா அம்மா தன் பருத்த உடம்போடு குடங்களைச் சுமந்தபடி வானம் வெளுக்கும் நேரத்திற்கு கிணற்றடிக்கு வந்து சேர்ந்தாள். மறக்காமல் கயிற்றையும், தோண்டியையும் கூட எடுத்து வந்தாள். அதுவும் புதுக் கயிறுதான். நல்லம்பள்ளி சந்தையில் கோழி முட்டையை விற்று வந்த காசில் வாங்கியிருந்தாள் கயிற்றை. தோண்டியைக்கூட போன வாரம்தான் மூட்டை அளவுக்கு அடுப்புக் கரி கொடுத்து கொல்லன்பட்டறையில் செய்திருந்தாள்.

சுளீர் என்ற வெயில் அடிப்பதற்கு கொஞ்சம் முன்பாகவே அவர்களுக்கு ஒரு ராட்டிணம் கிடைத்துவிட்டது. அம்மா சந்தோசமாய் கயிற்றில் தோண்டியைக் கட்டி கிணற்றில் இறக்கினாள்... ‘கிரி... கிரி... கிரி...’ சப்தமெழுப்ப தோண்டி கிணற்றில் போனது. ‘தளும், தொளும்’ சத்தமெழுப்ப நீர் நிரம்பியது. ‘கிரி... கிரி... கிரி...’ சத்தமெழுப்ப மேலே வந்தது. மொத்தக் குடமும் நிரப்ப எத்தனையோ ‘கிரி, கிரி’ இழுக்க வேண்டுமோ என்று புஷ்பாவின் அம்மா கொஞ்சம் பதட்டப்பட்டதால் வேகத்தை அதிகப்படுத்தினாள். விளைவு, கயிற்றின் கடை நுனியை பிடிக்க முடியாமல் கயிறும் தோண்டியும் ஒரு சேரக் கிணற்றில் விழுந்தது: ‘கிரி... கிரி... தொபீர்.’

அதிர்ந்து போன அவள் எட்டாத கிணற்றை எட்டிப் பார்த்தாள் ‘ஐயோ’வென்ற ஆழம். ஐந்து ஆள் அளவுக்கு நீர் இருக்கும் கிணற்றில். எங்கே எட்டிப் பார்த்த அவள் உள்ளே விழுந்து வாயில் நுழைந்த கொசுவாகிவிடுவாளோ என்று பயந்து பக்கத்தில இருந்தவர்கள் அவளை தடுத்து பின் தள்ளி நிறுத்தினார்கள். தன் புதுக் கயிறும் புதுத் தோண்டியும் இப்படி ஆழக் கிணற்றில் அழகு காண்பித்து மூழ்கிப் போனால் யாருக்குத்தான் வயிறு பற்றி எரியாது. போதாதற்கு ஊர்க்காரிகள் வேறு கொல்லென்று சிரித்து வைத்தார்கள். குலம் மொத்தத்திற்கும் அவமானம் வந்ததைப்போல அம்மா திகைத்து வெயிலில் வியர்வை வடிய நின்றாள்.

ஊர்க் கிணற்றில் தோண்டி விழுவது பாம்பு வாயில் விழுந்த மாணிக்கக் கல் போல அத்தனை அதிசயமான விசயம் இல்லைதான். ஆனாலும், சுடுகாட்டுக் குழியில் விழுவது சாதாரணம்தானே என்று செத்த பிணத்திடம் யாராவது தத்துவம் சொல்லமுடியுமா? செத்தவளுக்குத்தானே கேட்கும் சாவு மணியின் கிடீர் ஓசை. அம்மா செய்வது அறியாமல் நிற்க ராமாயிக் கிழவிதான் “போயி பாதாள கொலுசை வாங்கியாந்து அதை எடுடியம்மா... இப்படி நிக்காத. பயமா இருக்கு!” என்றாள்.

அவள் சொன்ன அந்த பாதாள கொலுசென்பது பலப்பல கொக்கிகளை உடைய, கிணு கிணுவென்று சத்தமெழுப்பும்; கொக்கிகளின் கொத்து. உள்ளே விழுந்த தோண்டியை கொத்தாக கயிற்றோடு அள்ளி வரும் அது. எலிப் பொந்தில் பாம்பு நுழைந்துவிட்டால் அதை புகை போட்டு வெளியே கொண்டு வரவும், அதை ஈட்டியால் குத்தி சாகடிக்கவும் ஆண்கள் பட்டாளம் ஊரில் உண்டு. அவர்கள் உடையை இடுப்பு வரை கீழிறுந்து மேலாக ஏற்றிக் கட்டிக்கொண்டு தொடை தட்டி வருவார்கள். ஆனால் ஒரு கயிறு கிணற்றில் விழுந்துவிட்டால் போட்டவளேதான் எடுக்க வேண்டும் இந்த ஊரில்.

பாம்பு ஈட்டி வைத்திருக்கும் கூத்தனிடமேதான் பாதாள கொலுசும் இருக்கிறது. பாம்பு ஈட்டி கேட்டு கூத்தனிடம் போனால், அவன் வாயில் புகையிலையை அடக்கிக் கொண்டு தானே ஈட்டியை எடுத்துவந்து பாம்பைக் கொல்வான். பாதாள கொழுசுக்கு அவன் வரமாட்டான்; சும்மாவும் தரமாட்டான். ஒரு வெங்கலச் சொம்போ, இல்லை வெங்கல குத்துவிளக்கோ அடமானத்திற்கு கொடுத்து விட்டு பாதாளக் கொலுசை வாங்கி வரவேண்டும். பிறகு திருப்பித் தரும்போது அடமானப் பொருளை அவன் தந்துவிடுவான். காசு கேட்பதில்லை உபகாரம்தான். புஷ்பாவின் வீட்டிலோ ஒரு வெங்கலத் டம்ளர்கூட கிடையாது

அம்மாவுக்கும் கூத்தனுக்கும் சொல்லமுடியாத ஒரு விசயத்திற்காக வாய்த் தகறாரு இருப்பதால் கொலுசு வாங்க தன் மகளை வெங்கலத் டம்ளரோடு அனுப்பினாள். அந்த வெங்கள டம்ளர் பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் கெஞ்சி கடனாக வாங்கினாள். பாதாள கொலுசு கேட்கப்போன புஷ்பாவிடம் “அடமானத்திற்கு என்ன இருக்கு?” என்று கேட்டான் கூத்தன். பதாளக் கொலுசு கேட்பவள் வெங்கலச் சிலைபோல இருப்பதால் அவளையே அடமானமாக வைத்துக்கொள்ள கூத்தனுக்கு விருப்பம்தான் ஆனாலும் அவள் அம்மா உச்சந்தலை கோழி மயிற்றை கொத்தாக பிடுங்கிவிடுவாள்.

புஷ்பா காட்டிய வெங்கல டம்ளரைப் பார்த்து “இது போதாது. இன்னும் பெரிசா வேணும். இவ்வளவு பெரிசு” என்று சிரித்தபடி ஒரு அளவு காண்பித்து புஷ்பாவை திருப்பி அனுப்பினான் அவன். அவள் கூசிக்கொண்டே வந்து தன் அம்மாவிடம் “இந்த அளவு பெரிசா அடமானத்துக்கு பாத்திரம் வேணுமாம்...” என்று தன் பிருஷ்டத்தை வட்டம் போட்டுக் காண்பித்தாள். அடமானத்திற்கு கூத்தன் அளவு காட்டிய இடத்தின் போக்கிரித்தனத்திற்காக அம்மாவுக்கு கோபமாக வந்தது. ஆனாலும் வேறு வழி இல்லை. டம்ளர் கடன் தந்த அதே பாட்டியிடம் ஒரு பெரிய வெங்கலக் குடத்தை இரவலாக வாங்கி பாதாளக் கொலுசை வாங்கி வாங்கிவரச் சொன்னாள். கூத்தன் “பரவாயில்லையே சொன்ன பெரிசு வாங்கிட்டு வந்துட்டியே” என்று வெங்கலக் குடத்தை தட்டிக்கொண்டே புஷ்பாவின் வேறெங்கோ பார்த்தான். புஷ்பா பாதாளக் கொழுசை பின்புறம் பிடித்தபடி வந்து சேர்ந்தாள்.

கொலுசு வந்துவிட்டது. கொலுசு மட்டும் வைத்துக்கொண்டு விழுந்ததை எடுக்க முடியாது. அதைக் கட்ட ஒரு கயிறு வேணும். என்ன செய்யவும் ஓடாமல் நின்றாள்; அம்மா. புருசன் செத்துப்போனதாலோ, இல்லை தன் கயிறு பழசாகிவிட்டதாலோ, எதனாலோ தெரியவில்லை... ராமாயிக் கிழவி பேச்சில்லாமல் “இந்தாடி ஆத்தா! இந்த கயித்தில கட்டி எடு.” என்று கயிற்றை மனசு வந்து தந்தாள். இன்றைக்கு உலகத்தில் எங்கு மழை பெய்தாலும் இதற்காகத்தான் சத்தியமாய் பெய்யும். வானத்தைப் பார்த்து கும்பிட்டுவிட்டு கிணற்றின் இடுப்பளவு கருங்கல் சுவற்றின் மீது ஏறி நின்று பாதாளக் கொலுசை உள்ளே விட்டாள் அம்மா.

முக்கால் கிணறு விட்டத்திற்கு கயிற்றைச் சுழற்றி, முடிந்தவரை தரை தட்டும் ஆழத்திற்கும் அதிகமாக கயிறு விட்டு துழாவித் தேடினாள் அவள். எதுவோ சிக்கியது போல இருந்ததும் சந்தோசமாக வெளியே எடுத்தாள். அதில் என்றைக்கோ விழுந்து மக்கிப் போயிருந்த பழம் பாவாடைதான் இருந்தது. இரண்டாம் முறையாக கொலுசை இன்னும் ஆழமாக விட்டு சுழற்றினாள். இந்த முறை எந்தப் பாவாடை வருமோ என்று பயந்தபடியேதான் வெளியே எடுத்தாள். ஆனால் எடுக்க முடியவில்லை. ஏதோ ஒரு பொந்தில் கொலுசு நன்றாக மாட்டிக்கொண்டது. ஆத்திரமாய் அதை இழுக்கப் போய் அவளே தடுமாறி கிணற்றுக்குள்ளே விழப் போனாள். உள்ளே விழாமல் சமாளிக்கத் தெரிந்தவளுக்கு கயிற்றையும் பத்திரமாகப் பிடிக்கத் தெரியவில்லை. அந்த கூத்தனின் பாதாளக் கொலுசோடு ராமாயிக் கிழவியின் கயிறும் ஆழக் கிணற்றில் விழுந்து தொலைத்தது.

பெருந்துக்கம் வந்து பேரழுகை அழுதாள் அம்மா. தானே எகிறி கிணற்றில் விழவும் முயற்சித்தாள். அவளை எல்லோரும் சமாதானப்படுத்தி உட்காரவைத்தார்கள். அவர்களுக்கு என்ன... சமாதானம் சொல்வார்கள். கிணற்றில் விழுந்த அந்த புதுத் தோண்டிக்கு யார் சொல்வார்கள் சமாதானம்? அதனோடு சேர்ந்து விழந்த கயிற்றுக்கு யார் சொல்வார்கள் சமாதானம்? அதை எடுக்க விழுந்த பாதாள கொலுசுக்கும், கூத்தனுக்கும் யார் சொல்வார்கள் சமாதானம்? அடமானமாக வாங்கிய வெங்கலக் குடத்துக்கும் அதன் சொந்தக்காரி கிழவிக்கும் யார் சொல்வார்கள் சமாதானம்? ராமாயிக் கிழவிக்கும், அவள் கயிற்றுக்கும், அவள் செத்த புருசனுக்கும் யார் சொல்வார்கள் சமாதானம்? தோண்டியும் போய், பாதாள கொலுசும் போய், அதற்கு அடமானமாய் வைத்த வெங்கலக் குடமும் போய், எல்லாம் போய், மானம் போய், மதிகெட்டு நின்றாள் புஷ்பாவின் அம்மா.

இனி, இழந்த அத்தனையையும் மீட்க ஊரில் ஒரே ஒரு கடவுளால்தான் முடியும். மாதேஸ்வரன் ஒருத்தனால்தான் எவ்வளவு நீர் இருக்கும் கிணற்றிலும் மூழ்கி மூக்குத்தி இருந்தாலும் எடுத்துவர முடியும். ஆனால் அவனிடமும் புஷ்பாவின் அம்மாவுக்கு சச்சரவு. அவனிடம் தன் மகளையும் அனுப்பமுடியாது. சச்சரவுக்கு காரணமே மகளைப் பார்த்த மாதேஸ்வரன் எழுமிச்சையை விளையாட்டாய் கிள்ளிவிட்டான் என்பதில்தான் ஆரம்பித்தது. அதற்காக மாதேஸ்வரனை சாவடிச் சந்தில் வைத்து, அவன் அம்மா, பாட்டி எல்லாம் அவுசாரிக் கும்பல் என்று வாய்க்கு வந்தபடி திட்டிய பிறகு அவனை எப்படி உதவிக்கு கூப்பிடுவது. கூப்பிட்டாலும் அவன் எடுத்துத் தர வருவானா தெரியாது.

எப்படியாவது அவனை கூப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஊரின் ஒரே ஒரு பாதாளக் கொலுசை கிணற்றில் போட்டுவிட்டு ஊரின் சாபத்தோடு சும்மா இருந்துவிட முடியாது. அதுவுமில்லாமல் பாதாளக் கொலுசு ஜாமீனுக்குப் போன வெங்கலக் குடம் அடமானத்தில் போயிற்று என்று தெரிந்தால் பக்கத்து வீட்டுப் பாட்டி செத்தாலும் செத்துப்போவாள். அந்த சாபம் வேறு கொசுறாக வந்து சேரும். வேறு வழியற்று, நெஞ்சில் இரண்டு கைகளையும் மறைத்தபடி வைத்துக்கொண்டு போய் மாதேஸ்வரனை கூட்டிவரும்படி புஷ்பாவை அனுப்பினாள் அம்மா. மகள் வந்ததும் ஒத்தடம் தரவேண்டும்.

அம்மா சொன்னது போல பத்திரமாக இரு கைகளையும் நெஞ்சில் கட்டிக்கொண்டு மாதேஸ்வரன் வீட்டில் போய் விசாரித்தாள். “உம் மாமன் இல்லையேடி... புளிய மரத்தடியில ஆடு புலி ஆட்டம் ஆடுறானா போயி பாரு...” என்று அத்தை சொன்னாள். புலியமரத்தடிக்குப் போய் பார்த்தாள.; அங்கே ஆடு புலி ஆட்டத்தை சில குரங்குகள் விளையாடிக்கொண்டிருந்ததே ஒளிய மாதேஸ்வரனைக் காணோம். இன்னமும் நெஞ்சில் கை வைத்தபடி “மாதேஸ் மாமன் எங்க?” என்று ஒரு குரங்கைக் கேட்டாள். அந்த குரங்கு “ஏன் என்னைய தேடிகிட்டு வரமாட்டியா?” என்று கேட்டது. எல்லா குரங்கும் சிரித்தது. இன்னொரு குரங்கு, “டேய்... அது உங்க சித்தி மகடா. நீ சும்மா இரு. எனக்குத்தான் அத்தை மக. நான் கேக்கறேன்” என்று சொல்லிவிட்டு இவளிடம் “நீ ரெண்டு கையையும் எடுத்துட்டு கேளு நாஞ் சொல்லறேன்” என்றது

அவள் கையை எடுத்துவிட்டு “மாமன் எங்கே?” என்றாள். அந்தக் குரங்கு சிரித்துக் கொண்டே “சுண்டு வெரல்ல மறைக்கிறததான் ரெண்டு கையால மறைச்சியா... போ, போ... எனக்கு தெரியாது. அவன் நேத்து சாயிந்தரமே புளியமரத்து உச்சியில தூக்குப் போட்டுகிட்டு செத்துப் போயிட்டான்” என்றது. பிறகு எல்லா குரங்குகளும் ஆடு புலி ஆட்டம் ஆட ஆரம்பித்துவிட்டது. அவளுக்கு அவமானம் பிய்த்துக்கொண்டது. ஏமாற்றத்தோடு திரும்பியவளை வாகுலன் என்று ஒரு சாதுக் குரங்கு நிறுத்தி சொன்னது, “பூமா சந்துல அவனை பாத்தேன். அங்க இருக்கானா பாரு. எதுக்கு தேடறே...?”

சாதுக் குரங்கின் உபகாரத்திற்கு சந்தோசப்பட்டு, நின்று பதில் சொன்னாள்: “எங்கம்மாவோட தோண்டி கிணத்தில விழுந்திடுச்சி...” ஆடு புலியாட்டத்தை பொசுக்கென்று நிறுத்தி, “உங்கம்மாவோட தோண்டியா? உங்கம்மாவோட தோ...ண்டியே...வா? அது எவ்ளோ பெரிசு இருக்கும்...” என்று ஒரு குரங்கு கேட்க, எல்லா குரங்குகளும் சிரித்தது. “உங்கம்மா கிணத்தில விழுந்தா தண்ணி முழுசும் வெளிய வந்துடுமே... அப்ப தோண்டிய எடுத்துக்கலாமே. எதுக்கு மாதேஸ் வரணும்?” இன்னும் குரங்குகள் சிரித்தது. இறுகக் கட்டிய கைகளுக்குள் கோபப்பட்ட சிறுமார்பு துடித்துத் துள்ளியது அவளுக்கு. தான் ஒரு மீனாகி எல்லா ஆம்பள மீனையும் துண்டாக்கி திங்கணும்... ரெண்டு துண்டா இல்ல, நாலு துண்டா, எட்டு துண்டா, துண்டு துண்டா... ரத்தம் வர... அவள் ஆத்திரத்தோடு பூமா சந்திற்கு போனாள்.

அங்கே ப+மா சந்தில் ஒரு வீட்டின் சுவர் மீது ஒரு காலை பின்புறமாக தூக்கி வைத்து சாய்ந்து நின்றபடி பீடி பிடித்துக்கொண்டிருந்தான் மாதேஸ்வரன். சூரியன் உச்சியில் நின்று தோலை உறித்தெடுக்க அவளுக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. பட்ட அவமானத்தில் உடம்பு கொதித்துக்கொண்டிருந்தது. மாதேஸ்வரன் எதிர் வீட்டைப் பார்த்தபடி சுவற்றில் சாய்ந்திருக்க, இவள் போய் “மாமா, அம்மா உன்ன கூட்டியாரச் சொன்னா.” என்றாள். அவன் பீடியை கீழே போட்டு காலால் மிதித்தபடி “எதுக்காம்?” என்று கேட்டான். இவளை பார்க்காமல் எதிர் வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“என் அம்மாவோட தோண்டி... இல்ல, ஒரு தோண்டி கிணத்தில விழுந்திடுச்சி” என்றாள். “பாதாள கொழுசு போட்டு எடுங்க தாயி... நான் இப்ப வேலையா இருக்கேன்.” இவளுக்கு பொசுக்கென்று ஆனது. சுவற்று மேல் ஒன்றைக் காலை வைத்துக்கொண்டு பீடி பிடிப்பதை வேலை என்கிறானே. ஆனாலும் தன்னை அவன் தாயி என்று கூப்பிட்ட குரலில் ஒரு பாசம் இருந்ததால் தைரியம் பெற்றவளாக தன் நெஞ்சில் கட்டியிருந்த கையை எடுத்துவிட்டு அவன் முன்பாக போய் நின்று “பாதாள கொலுசும் உள்ளே விழுந்திடுச்சி, மாமா. நீங்க வந்துதான் எல்லாம் எடுக்கணும்” என்று கெஞ்சினாள்.

“பாதாளக் கொலுசும் விழுந்திடுச்சா...!?” அவன் அதிர்ச்சியாக கேட்டான் என்றாலும் இன்னும் முகம் பார்த்து பேசவில்லை. வேட்டியால் தன் முகத்து வேர்வையை அழுத்தித் துடைத்துக்கொண்டு, அதை சரியாக மடித்து கட்டிக்கொண்டு, இன்னொரு காலை மாற்றி சுவற்றில் வைத்து சாய்ந்து நின்றான். கால் வலிக்க வெகு நேரம் நிற்பது தெரிந்தது. “அம்மா அழறா, மாமா.” அவன் முறைத்தான். “தோண்டி விழுந்ததுக்கு ஒரு பொம்பள அழுவாளா... பீடை. அவ தோண்டிய போட்டதுமே நான் வந்து எடுத்து தரணுமா?” அவன் எரிந்து விழுந்தான். அப்பொழுதுதான் அவள் முகத்தைப் பார்த்தான். அவள் பொசுக்கென்று தன் கையை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டாள். அவள் நெஞ்சுக்கு கை கட்டும் வேகத்தைக் கண்ட அவன் அவமானத்தோடு தன் முகத்தை இரு கையாலும் அழுத்தி தேய்த்துக்கொண்டே தலையை இல்லை என்பது போல ஆட்டினான். பிறகு, “நீ போ தாயி, நாளைக்கு எடுத்துக்கலான்னு சொல்லு.” என்று சொல்லிவிட்டு எதிர் வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தான்.

இவள் திரும்பி அந்த எதிர் வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்குள் ஜன்னல் படீர் என்று அறைந்து சாத்தப்பட்டது. கொஞ்ச நேரத்திலேயே காலுக்கு உபயோகப்படும் ஒரு பொருள் பறந்து வந்து மாஸே;வரன் மீது விழுந்தது. அது பெண்களின் கால் செருப்பு. அவன் முகம் கறுத்துப் போயிற்று. செருப்பை தன் கால்களால் புரட்டித் தள்ளியபடி யோசித்தான். பிறகு “சரி வா தாயி, போவோம்” என்றான் அந்த ஜன்னலையே பார்த்தபடி. வரும்போழுது அவன் வாய் முணு முணுப்பது கேட்டது. “மாதேஸ் எத்தினி நல்லவன,; எத்தினி பாசமா இருந்தான்னு நாளைக்கு தெரிஞ்சிப்பே நீ...” அவன் யாரிடம் பேசுகிறான்? செருப்பு வீசிய பெண்ணிடமா, இல்லை தன்னிடமா? புஷ்பா புரியாமல் வந்தாள்.

பொதுக் கிணற்றுக்கு வந்த மாதேஸ் தன் உடைகளை அவிழ்த்துவிட்டு இடுப்பில் சிறு துண்டோடு ஒரு கயிற்றின் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கினான். எப்பொழுதாவது ஒரு முறைதான் அவன் கிணற்றுக்குள் இறங்குவான். அவனைப் போல மூச்சு பிடித்து தண்ணீருக்கடியில் இருக்கும் வீரன் யாரும் கிடையாது இந்த ஊரில். அவன் நீருக்கு உள்ளே போனால் கேட்ட பொருள் மட்டும் இல்லாமல் எப்பொழுதோ விழுந்த அலுமினிய டேக்சா, சிறு சொம்பு, கிலுகிலுப்பை, மரபொம்மை, கல் சொப்புக்கள் எல்லாவற்றையும் ஆய்ந்து வெளியே எடுத்துவிடுவான். அம்மாவுக்கு இப்பொழுதுதான் உயிரே வந்தது. அத்தனை பொருளும் வெளியே வந்துவிடும்.

எல்லோரும் இடுப்புயர கிணற்றுச் சுவர்மீது வயிறு வைத்து குனிந்து எக்கியபடி கிணற்றின் நீர்ப் பரப்பையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். உள்ளே மதேஸ் மூழ்கிவிட்டான். நீரின் தளும்பல் குறைந்தது. பிறகு குமில் குமிழாக உள்ளே இருந்து காற்று வந்தது. வெகு நேரம் ஆயிற்று. அவன் எத்தனை நேரம் வேண்டுமானாலும் மூச்சு பிடித்து தேடுவான். பொருள் கிடைத்ததும் குபுக்கென்று மேலே வந்து, சிரித்து மூச்சு வாங்கியபடி பொருளைக் காண்பிப்பான்.

ஆனாலும் இத்தனை நேரமா அவனால் இருக்க முடியும்? பெண்களுக்கு கொஞ்சமாய் சந்தேகம் எழுந்தது... அவன் கிணற்றுச் சேற்றில் மாட்டிக்கொண்டிருப்பான் என்று பெருங் கூப்பாடு போட்டு கத்தினார்கள் அவர்கள். மற்ற ஆண்கள் ஓடி வந்தார்கள். அவர்களில் யாரும் கிணற்றில் முங்கும் வீரப் பையன்கள் கிடையாது. கை பிசைந்துகொண்டு கிணற்றைச் சுற்றி நின்றார்கள். வெகுநேரம் ஆகிவிட்டது. சூரியன் மேற்கில் போய் செத்து விழுந்துவிட்டான். இனி மாதேஸ{ம் உயிரோடு இருப்பது சாத்தியமில்லை. பிறகு ஒரு டீசல் என்ஜின் வைத்து உள்ளே இருக்கும் நீரை எல்லாம் இறைத்தார்கள். நீர் மெல்ல மெல்ல குறைய, நடுக் கிணற்றில்; மாதேஸின் உச்சந் தலை முதலில் தெரிந்தது. பிறகு தோள், பிறகு கை. நீர் பேரளவு வடிந்தது. அவன் நடுக் கிணற்றில் சப்பணமிட்டு உட்கார்ந்தபடி இருந்தான். அவன் கையில், என்றைக்கோ ஆகாது என்று போட்ட ஒரு சிதிலமான கருங்கல் நந்தி இருந்தது. எல்லோரும் பயந்து போனார்கள். உயிரோடுதான் அவன் உட்கார்ந்திருக்கிறான் என்று நினைத்து ஆளாளுக்கு மாதேஸ் என்று கத்தினார்கள.; நீர் முழுதும் வற்றியபின் அவன் மல்லாந்து விழுந்தான்.

நெஞ்சின் மீது கருங்கல் நந்தி பாரமாய் அழுந்திக் கிடக்க அவன் செத்துப் படுத்திருந்தான். அவன் நந்திக் கல்லை இறுகப் பற்றியபடி கிணற்றில் மூழ்கி மூச்சுத் திணறி செத்துவிட்டான் என்று சிலர் சொன்னார்கள். மூச்சு முட்டினா கல்லை விட்டுட்டு மேல வந்திட மாட்டானா, அவன் மேல நந்திக்கல் விழுந்துதான் செத்துப்போனான் என்று சிலர் பேசிக்கொண்டார்கள். அவன் சித்தன் ஆகிவிட்டான், அதனால் நடுக் கிணற்றில் அவன் நந்தியோடு தவம் செய்தபடி செத்துப்போனதாகக்கூட சிலர் பேசிக்கொண்டார்கள். நல்லவேளை கிணற்றுக் கோட்டான் சாபத்தால் செத்ததாக யாரும் சொல்லவில்லை. மாதேஸ் எப்படி செத்தான், எதற்காக செத்தான் என்பது ஊரில் யாருக்குமே புரிபடவில்லை.

மாதேஸின் பிணம் எடுத்தபின் கிணற்றுக்குள் ஊற்று நீர் ஊறி, உள்ளே இருந்த தோண்டியை, கயிற்றை, பாதாளக் கொலுசை, சிதிலமான நந்திக் கல்லை எல்லாம் மூழ்கடித்தது. இன்று எவரும் உபயோகிக்காத, கருஞ்சந்தின் பிசுபிசுப்பில் நீர் ஊறிய அந்த பாழ்பட்டக் கிணற்றில் எடுக்கப்படாத பாதாளக் கொலுசும், பாதாள நந்தியும் இருப்பதுதான் ஊருக்குத் தெரியும். ஆனால் அதில் இரண்டு தங்க மீன் விளையாடியதோ, ஆண் மீனை பெண் மீன் துண்டாக்கி விழுங்கியதோ யாருக்கும் தெரியாது. அது புஷ்பாவுக்கு மட்டும்தான் தெரியும். பூமா சந்தில் அவன் ஒற்றைக் காலோடு நிற்கும்போது அவன் காலடியில் காலியான ஒரு பூச்சிமருந்து பாட்டிலை அவள் பார்த்தாள். மாதேஸ் கிணற்றில் மூழ்கி செத்தவனில்லை, செத்து கிணற்றில் மூழ்கியவன். அவன் பற்றியிருந்தது சிதிலமான நந்தியை இல்லை, தன் மரணத்தை. புஷ்பா அன்றைக்கு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் ஊருக்கு. இவன் மருந்து குடித்துவிட்டு கிணற்றில் இறங்குகிறான் என்று. ஆனால் விழுந்த செருப்பு... அது எப்படி சமாதானமாகும் அவனுக்கு. அதைவிட உள்ளே விழுந்த தோண்டியை அவன் இல்லாவிட்டால் யார் எடுத்துத் தருவார்கள். சுயத்திற்காக வாய்மூடி சும்மாயிருந்துவிட்டாள் புஷ்பா.

அவன் நந்தி பிடித்து நீருக்கடியில் செத்துப்போன அன்றிரவே புஷ்பாவுக்கு துயரமான துண்டு பட்ட ஒரு ஆண் மீன் கனவில் வந்தது. மறுநாள் அதிகாலையிலேயே அவள் ருதுவாகி பச்சை ஓலைக்கடியில் பல்லாங்குழி ஆட ஆரம்பித்தாள். ஆளற்ற பொழுதில் அவன் கிள்ளிய இடத்தை அவள் மெல்லத் தடவி வெட்கப்படவும் செய்தாள். ஒரு ஆண் என்ன ரூபத்தில் வந்து பெண்ணை வதைப்பான், வாட்டுவான், கிளர்த்துவான், மலர்த்துவான் என்று எந்த பெண்ணுக்கும் தெரியாது; பெண்கள் குறித்து ஆணுக்கு தெரியாதது போலவே. அந்த புதிர்தான் அவளின் பல்லாங்குழியின் விளையாட்டாக விளையாடியது அன்று. சிதிலமான உபயோகமற்ற நந்திக் கல்லைப்போல கணத்து அசைவற்று இருக்கிறது சில பெண்களுக்குள் சில ஆண்களின் நினைவுகள். அப்படித்தான் புஷ்பாவுக்குள்ளும் ஒரு நந்திக்கல் கணத்துக் கிடக்கிறது வெகு வெகு காலமாக.

- எழில் வரதன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It