காலில் சிலம்பணிந்தவளை
கண்ணகியாகக் காட்டிய
உலகமின்று
காதில் செல்போன் வைத்திருப்பவளை
மாதவியென
அடையாளப்படுத்துகிறது...
அக்குள் தெரிந்தால் குற்றம்
தொப்புள் காட்டினால் ஆபாசம்....
வீதி வந்தால் கூட
வீட்டுக்கே போக வேண்டும்
கருவறை கட்டத்தெரிந்தவர்களுக்கு
கோயிலில்
கழிவறை கட்டத்தெரியவில்லை!
பெண்மையின் அடையாளங்களைப்
பெண்ணிடமே விட்டுவிட்டு
அவள் ஒழுக்கத்தை
அளவிடுகிற அளவுகோலை
ஆண்களிடம் கொடுத்தது யார்?
கர்ப்பப்பையை கழற்றிவிட்டால்
பெண்ணைப் பெண்ணாகக் கூடவல்ல
மனுஷியாகப் பார்க்கிற
பக்குவம்
மனிதர்களுக்கு உண்டா?
கலவியொரு
பெருவலியாய் இருக்கும் பட்சத்தில்
வாழ்க்கை தருவதாகவும்
வாரிசு தருவதாகவும் சொல்கிற
எத்தனை ஆண்கள்
பெண்களை நெருங்குவார்கள்?
- நாவிஷ் செந்தில்குமார்