Humilityகாலத்தின் வெளியில் இங்கே
கருகிக் கிடக்கும் பூக்களின்
மரண விசாரணையை யார் நடத்துவார்?
உலகத்தின் கண்களில் கறுப்புமணிக்
கண்ணாடி போடப்பட்டதால்
மனித உரிமைகள் எல்லாம்
மனுக்களோடு மரணிக்கின்றன்...
மண்ணில்
பிஞ்சுக்கால்கள் பதியும் முன்னர்
இரும்புக் கலங்களின் வேட்டுக்களில்
தும்பாய்ப் போன துயரங்களைப் பாட
மானிடக் கவிஞர்களில் யார் வருவார்?
மானிடம் இங்கே இருந்தால்
மனித உரிமையின் காவலர்களும் இங்கே வருக
செங்கம்பளம் விரித்து உங்களை வரவேற்போம்
செங்கம்பளம் எங்கள் செங்குருதி என்பதை
நீங்கள் உணர்வீர்களா?
நல்ல மனிதம் இங்கே இருந்தால்
நல்ல வார்த்தைகள் இருந்தால்
நல்ல அன்பின் இதயங்கள் இருந்தால்
எழுந்து உண்மைக் கீற்றாய் இந்தக்
கீற்றில் எழுதுங்கள் இந்தத் துயரங்களை...
உதயக் கீற்றாய் எங்கள் தமிழர் வாழ்வு
எழுகின்ற நேரம் நல்ல
மானிடர் வாழ்வோடு சங்கமிப்போம்
எங்களின் மனிதத்தை எல்லோருக்கும்
பகிர்ந்து கொள்வோம்.

ஆல்பர்ட் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It