கடந்துசெல்லும் காலங்களின் ஊடாக
திறக்கப்பட்ட
கதவுகள் மூடப்பட்டும்
மூடப்பட்ட கதவுகள்
மறுபடி திறக்கப்பட்டும்
சிலவேளைகளில் மட்டும்
காற்று வருமென்ற
எண்ணங்களோடுதான்
காத்திருப்பு தொடர்கிறது எங்களுக்கு...!

எங்களின் எதிர்காலம் குறித்த
பேச்சுக்களை விட்டால்
நிகழ்காலம் குறித்த
நாற்காலிகளின் கனவுகள்
வெறும்...
கனவாகவே போய்விடும் அவர்களுக்கு...!

இதனால்தான்
அன்போடு பேசலாமென
அக்கறையோடு அவர்கள்
இடைக்கிடையே வருவார்கள்...!

வாருங்கள்
ஊரெல்லாம் ஓடித்திரியலாமென
அழைத்துப்போவார்கள்
சுமக்கமுடியாத சுமைகளைஎல்லாம்
நெஞ்சிலே சுமந்துகொண்டு
அவர்களின் பின்னாலே ஓடித்திரிவோம்

கடைசியாகக்கூட அவர்கள்
ஒன்றிலிருந்து ஆறுதடவைகள்
நாடுநாடாய் அழைத்துப்போனார்கள்.
இருப்பினும்...
ஒரே ஒரு அதிருப்திதான்
அவர்களிகன்மீது எங்களுக்கு...!

ஆறுதடவைகள் பேசலாமென
எங்கெங்கோ அழைத்துப்போனவர்கள்
ஒரு தடவையாவது பேசியிருக்கலாம்...!!! 

த.சரீஷ், பாரீஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It