Mother and childஎன் பிஞ்சு விரல்கள்
பற்றிக்கொண்டு
என் தலைமுடி கோதியபடியே
நீ சொல்லும் குட்டிக் குட்டி
கதைகளில் எனை மறந்து
உறங்கிப்போவேனே
அதற்காகவேனும்..

உன்னுடன்
சமையலறையில் உட்கார்ந்து
கொண்டு
துண்டுத் தேங்காய்,
உப்பு சரிபார்க்கும் ரசம்,
என்று நீ தரும்
உணவுகளை சுவைப்பேனே
அதற்காகவேனும்...

தெருச் சிறுவர்களுடன்
போடுகின்ற சண்டையில்
கிழிந்த சட்டைப் பையை
மறைத்தபடியே உன்
அருகில் வந்ததும்
அடிப்பாயோ என்று
சிறிதும் கலங்காமல்
உன் கால்கள் கட்டிக்கொண்டு
என் மேல்தப்பில்லமா என்பேனே
அதற்காகவேனும்..

மீண்டும் சிறுவனாய்
மாறுகின்ற வழி
இருக்கிறதா என்றுதான்
கேட்பேனம்மா
கடவுளே வந்து வரம்
தந்தாலும்!


நிலாரசிகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It