Manஓர் அமைதியான
இடம் தேடி
தவித்துக் கொண்டிருந்தேன்

ஆறுதலாய் அழைத்தது
உன் கதவு

வரவேற்று அமரவைத்து
உள்ளறைக்குச் சென்றாய்

என் சட்டைப் பையில்
துழாவ ஆரம்பித்தான்
உன் மகன்

முடிக்கற்றையை கத்திரியால்
சீர்படுத்தினாள் மகள்

என்னை முன்னிறுத்தி
நிகழ்ந்த
சமையலறைச் சண்டை
கேட்காவண்ணம்
காதைக் கழற்றி
வைத்தேன் தனியே

ரொம்ப நேரம் கழித்து வந்து
குவளை நீட்டிக் கேட்டாய்
‘தனிமை கிடைத்ததா?’

‘உலகின் இரைச்சலான இடம்
ஒரு குடும்பம்’ என்கிற கசப்பு
உன் காபியின் அடியிலேயே
பதிலாய்த் தங்கியிருந்ததை
அறிந்திருக்கவில்லை நீ.

மாறன்
Pin It