godபிரத்யேக புஷ்பக விமானமேறி
நேரடியாய் மூலஸ்தானத்திலேயே 
பிரசன்னமாவாரென 
கணிக்கப்பட்ட கடவுள்
கோவிலுக்கு வெளியிலேயே
கலங்கி நின்றிருந்தார்

ஆமை அல்லது நெருப்புக்கோழி போல
தானிட்ட முட்டை பொரிந்து
உருவானதில்லை இவ்வுலகென
கற்பூரம் அணைத்து
சத்தியம் செய்ததோடு
அங்கிங்கெனாதபடி எங்கும்
நிறைந்திருக்கும் பக்தர்களே
ஆக்கியோ அழித்தோ 
தனக்கு யாவற்றையும்
படைத்தளிப்பதாயும்
தானிதுவரை
படைத்ததும் அழித்ததும்
ஏதுமில்லையென்றும்
வாக்குமூலத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்

பரிதாபமாயிருந்த அவரை மன்னித்து 
டீக்கடைக்கு அழைத்துப்போனால் 
என்னொத்து அவரும்
சிரட்டையைக் கழுவியே
குடிக்க நேர்ந்த அவமானத்தில்
எதுவொன்றாயினும்
என்னையே பொறுப்பாக்கி சபிக்காமல்
இனியாவது கண்டடை
எதிரியை என்றார்

ஆமோதித்த நற்பொழுதில் 
இதுவரை சொல்லப்பட்டு
வந்த ஏழுவழிகளிலுமல்லாது
விகாரமாய் கொல்லப்பட்டிருந்தேன் 
கடவுளும்கூட குமைந்து
இறுகியிருந்தார் சிலையாக. 

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It