கொடு
எல்லாம் கொடு

பொன் பொருள் பணம்
என்பவை மட்டுமல்ல

அன்பு கருணை மன்னிப்பு
என்பவையும் மட்டுமல்ல

உன்னிடம்
உள்ள எல்லாவற்றையும்
அப்படி அப்படியே
கொடு

யாருக்குக்
கொடுக்கப்போகிறாய்?

எங்கிருந்து பெற்றாயோ
அங்கேயேதான்
நீ கொடுக்கப்போகிறாய்

உன்னுடையதென்று
எதுவுமே இல்லை

எவருக்கும்
எவருடையதென்று
எதுவுமே இல்லை
தயக்கம் வேண்டாம்
கொடு

கோடுகள் வேண்டாம்
கொடு

கொள்கைகள் வேண்டாம்
கொடு

ஒன்றையும்
இழந்துவிடமாட்டாய்
கொடு

கொடுப்பதால் பெறுகிறாய்
நீ கெடவில்லை
கொடு

உன்னைப்போலவே
எல்லோரும் கொடுக்கக் கொடுக்க
எல்லோரும் பெறுகிறார்கள்
நீயும்தான் பெறுகிறாய்
கொடு

கொடுத்துக்கொண்டே
இரு

எதுவும் உனதில்லை
கொடு

எதுவும் நிரந்தரமில்லை
கொடு

எதுவும் தவறில்லை
கொடு

உனக்குக்
கொடுக்கப்பட்டதை மட்டுமே
எவருக்கும் உன்னால்
கொடுக்க முடியும்

பெற்றதையெல்லாம் நீ
கொடுக்கக் கொடுக்க
அடடா...
அந்தச் சொர்க்கத்தை
அப்படியே உன் கண்ணுக்குள்
சுகமாக ஓடவிட்டுப் பார்
அதுபோதும்.....

நீ
கொடுப்பாய்

புகாரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It