வானத்தினழகும்,
வசந்தகால
வனாந்தரங்களின்
பசுமையும்,
வானவில் வர்ணங்களும்,
வண்ணத்துப் பூச்சிச்
செட்டையின்
மென்மையும்;
இந்தக் கண்ணாடி விம்பத்திடம்
தோற்றுத்தான் போகுமென
சொல்லிக் கொண்டிருந்தேன்!

எங்கிருந்து வந்தாய்...?
என் கனவுகளில்
தீப்பிடிக்கச் செய்தாய்;
எனது பாடல்களை
ஒப்பாரியாக்கி,
எனது தேடல்களை
விழிநீரில் கரைத்து
வழியனுப்பச் செய்யுமுன்
சந்தர்ப்பவாதத்தை
எந்தக் கரங்களில்
ஏந்தி வந்தாய்...?

என் தோழனா நீ...?
நட்பென்ற கண்ணாடியை
உடைத்துப் பார்த்ததன்
வேரைத் தேடினாய்; - இன்று
கீறல்களையொட்டி
புதுமெருகு
பூசமுடியாதென்பதை
புரிந்துகொண்டாயா...?

என் எதிரியா நீ...?
எங்கிருந்து வந்தாய்...?
என் தலை கோதிக் கோதி
ஓங்கிக் குட்டுமுன்
சூட்சுமக் கரங்களோடு
எங்கிருந்து வந்தாய் நீ...?

போதுமுன் சுயநலத்தை
இத்தோடு
நிறுத்திக்கொள்;
தலைகோதுமுன்
துரோகத்தை
கொத்தோடு
தூக்கியெறி!

ஓர்
அந்தகாரக் காரிருளில்
என் நிழல்தேடி
நான் சோர்ந்த வேளை,
உன் விரல் தீண்டித்
திரை அகன்று,
புதுவெளிச்சம்
பாய்ந்தென்
பூஞ்சோலை
பூத்ததென்பேனோ
இனிமேலும்...?


எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It