நான்
இறந்த பிறகு - என் பிள்ளைகள்
வழக்கு போடுவதற்காய்
ஊருக்கு ஒதுக்குபுறத்தில்
கட்டி முடித்தாகிவிட்டது
ஒரு வீடு

ஊரில்
பிரபலமான ஒருவரின்
மகளுக்கு மாப்பிள்ளையாய்
என் மகன்

100 பவுன் இலவசமாய்
கொடுத்ததால்
சந்தோஷமாய்
என் மகளை
வாங்கிச் சென்றுவிட்டார்
மாப்பிள்ளை

பரந்து கிடக்கும்
என் வீட்டில்
இப்போது
நானும் என் மனைவியும் மட்டும்

காலையில்
காபி கொடுக்கையில்
மெலிதாய் சிரித்தால்
அதே
பழைய புன்னகை

மெதுவாய்
கன்னம் கிள்ளினேன்
அதே
பழைய வெட்கம்

என்னையறியாமல்
உள்ளுக்குள்
ஒரு சந்தோஷம்
இனிமேலாவது
வாழலாம் என்பதில்...

பாலகிருஷ்ணன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It