குப்பையை தொட்டியில் போட
குனிந்த போது தென்பட்டது
குட்டி பூனையாய்,அழகாய் தன்
குறுகுறு கண்ணால் சிரித்தது

சின்னப்பூனை பாவம்,வீதியில்
சிக்கிவிடக்கூடாதே வண்டி
சக்கரத்தில் என்றெண்ணினேன்
அக்கறை வந்தது அறியாமல்

பார்த்துக்கொண்டே இருக்கிறாய்
பேசு ஏதாவது எனும் அர்த்தத்தில்
பூனை தன் மொழியில் மியாவ் என்று
புன்னகைத்து, நட்பான பார்வையில்

என்னைப்பற்றி கவலைப்படாதே நீ
எச்சரிக்கையாய் இரு பாதையில்
எந்த தப்பும் செய்யாதே வேலையில்
எவரிடமும் திட்டு வாங்காமல் உன்

நாளை முடி என கண்ணால் பேசியது
நல்லது கெட்டது பூனைக்கு இல்லை
நழுவி ஜன்னல் கம்பி கடந்து வீட்டில்
நாசூக்காய் பால் குடிக்கும், எலியை

ஒரே நொடியில் ஓடிப்பிடிக்கும் பூனை
ஒன்பது உயிர் கொண்டு, விழுந்தாலும்
ஒருநாளும் நான்கு கால்களும் தரையை
ஒன்று சேர தொடத் தவறுவதில்லை

இந்த பூனையும் பால் குடிக்குமா என
சொந்த முகம் கொண்ட மனிதர் கூட
எந்த பாவமும் செய்யத் தயங்காமல்
வந்த வழிமாறி விலை போகின்றார்!


பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It