அந்தரத்தில் தொங்குகிறது
நமக்கான ஒற்றையடிப் பாதை
எதிரெதிர் திசைகளில்
நமது இலக்குகள்!

ஏதேதோ புள்ளிகளில் பயணம் தொடங்கி
எதிரும் புதிருமாய்
நிற்கிறோம் இப்போது;
விலகவோ துளியும் இடமில்லை
இருபுறமும் அதல பாதாளம்
எப்படி அடைவது
அவரவர் இலக்கை.....?

சேர்ந்து நடக்கத் தொடங்குவோம்
வேறுவழி எதுவுமில்லை இருவருக்கும்;
உலகம் உருண்டை என்பது
உண்மையானால்
இருவர் இலக்கையுமே கடந்தும்
தொடரலாம் நம் பயணம்.....!

எங்கெங்கு சென்றாலும்
பிரமுகர்களைப் பார்க்கப் போகிறார்கள்
மரியாதை நிமித்தம்
மாலைகளுடனும் சால்வைகளுடனும்....

கோயில்களுக்குச் செல்கிறார்கள்
அனேக வேண்டுதல்களுடனும்
அர்ச்சகர்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கான
சில்லரைகளுடனும்....

சிறைக்கூடங்களுக்குச் செல்கிறார்கள்
சிற்றுண்டிகளுடனும்
சிதைந்த வாழ்க்கை சித்திரங்களுடனும்....

மருத்துவமனைகளுக்குப் போகிறார்கள்
ஆறுதல் மொழிகளுடனும்
ஆர்லிக்ஸ் மற்றும் பழங்களுடனும்.....

இழவு வீடுகளுக்குப் போகிறார்கள்
வலிமிகு இரணங்களுடனும்; சிலர்
வலிந்து வரவழைத்த கண்ணீருடனும்....

உறவுகளைத் தேடிப் போகிறார்கள்
குசல விசாரிப்புகளுடனும்
குழந்தைகளுக்கான தின்பண்டங்களுடனும்.....

நண்பர்களை நாடிப் போகிறார்கள்
பொங்கிப் பெருகும் நினைவுகளுடனும்
பொசுங்கிய கனவுகளுடனும்.....

தெப்பக் குளங்களுக்குப் போகிறார்கள்
குளிக்கும் ஆவலுடனும்; சிலர்
மீன்களுக்கான பொரிகளுடனும்.....

தெரு நாய்களைத் தாண்டிப் போகிறார்கள்
பயமும் பதுங்கலுமாய்
திருடர்களும் உயிர்களை நேசிக்கும் சிலரும்
வீசிப் போகிறார்கள்
கொஞ்சம் பிஸ்கட்டுகளையும்....

இறந்த பின்பும் சுமந்து போகிறார்கள்
நிறைய பாவங்களையும்
நிறைவேறா ஆசைகளையும்; சிலர் மட்டும்
உதிர்கிறார்கள் ஒரு பூவைப் போல்
உரமாகிறார்கள் வேரடி மண்ணிற்கே....!

சோ.சுப்புராஜ் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It