அலட்சியமாய் களைந்த
ஆடைகளையெல்லாம்
பொறுக்கி எடுத்து ...
துவைத்து வைப்பாள்!

தன் வயிறு
காய்வதைப்பற்றி
கவலைப்படாமல் ...
துணிகளை காயவைப்பதில்
கவனமாய் இருப்பவள்!

மிச்சம் ஏதுமின்றி
தின்று வீசிய
பாத்திரங்களை ...
பத்திரமாய் பூசி விடுவாள் !

நாங்கள் வேண்டாமென்று
ஒதுக்கிய உணவுகள் ...
அவளுக்கு அமுதம் !

சொந்தக்குழந்தை
வீட்டில் அநாதையாய் இருக்க...
எங்கள் வீட்டுக்குழந்தைகளை
சொந்தமாக்குபவள்!

ஒருநாள் வராவிடினும் ...
வீட்டை கூவம் என்று அழைப்போம் !

இப்படி
விவரம் தெரிந்த நாள்முதல்
அறிவிக்கப்படாத உறவாக ..
வலம் வருபவள்!

இன்று காலைதான் செய்தி வந்தது:
என் வீட்டு
வேலைக்காரி இறந்துவிட்டாளாம்!
அய்யோ!
நாளை
தேங்கும் வேலையை
யார் செய்வதாம்?

ரசிகவ் ஞானியார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It