பேராசையினால்
பிரயாசைபடுகிறது
பறக்கும் விட்டில்
பூச்சி.. ஒன்று..

நிழலினை, தன்
நிஜத்தைவிடவும்
பிரம்மாண்டமாய்
நிலை நிறுத்திட

விளக்கை நோக்கி
விரைகின்ற போது
சுவர் முழுவதுமாய்
பரவும் அதன் நிழல்

சுட்டெரியும் அனுபவத்தை
சுகம் போல காட்டுகிறது
புகழ் எனும் நிழல் பார்த்து
அக ஒளிக்கு புறங்காட்டி

நாய் கடித்த எலும்பாய்
நாவிலே சுவைக்கும்
உதிரம் சுண்ட, நரம்பு
தளர, ஜீவனும் உதிர

விளக்கின் சூட்டிலே
விட்டிலாய் கருகிய
நேற்றாகி ஆட்டத்தில்
தோற்றதாகி, எரிமலை

குழம்பான கால வெள்ளத்தில்
சாம்பலாகும் மனிதப்பூச்சியின்
தோற்றமும், மறைவும் கூட பின்
தோன்றும் ஒரு கற்பனையாய்!

பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It