Kiss1. என் இடது கண்ணுக்கும்
வலது கண்ணுக்கும்கூட
அடிக்கடி சண்டை வந்து விடுகிறது
உன்னை
யார் முதலில் தொடுவதென்று.

2. பூங்காவில்
உன் முகம் நோக்கி
பறந்து வரும்
பட்டாம்பூச்சிகளை விரட்டும்
என் வேலைக்குச் சம்பளமா
அன்றைய எதிர்பாரா முத்தம்?

3. கர்ப்ப காலத்திற்குப் பிறகு
உனைக் கண்டதிலிருந்து
மீண்டும் இதயம்
வளரத் துவங்கியுள்ளதாகத்
தோன்றுகிறது.

4. தினமும் இரவுகளில்
உன் போர்வைக்குள்
கனவுத் திருடர்கள்
புகுந்து கொள்வதாகச்
சொல்கிறாய்...
நம் இப்போதைய சந்திப்பே
என் பகல் கனவில்தான்
நடைபெற்றுக் கொண்டிருப்பது
தெரியாமல்.

5. சொர்க்கத்தில் ஓடும்
பாலாற்றங்கரையில் திரண்ட
வெண்ணெய்க் குவியலில்
எழுந்த காற்றுக் குமிழி,
மயிலிறகினால் உடைபடும்
ஓசையுடன் சிரிக்கிறாய்.
நரகத்தில் வெடித்த
எரிமலைக் குழம்பில் எழும்
புகையினைப் போல் என் மூச்சில்
அனல்.

பூங்காற்று தனசேகர்
Pin It