Faceகுளிர்ந்த தடாகத்து பூவுள் வாசமாக
மெல்ல ஆழ்கிறேன் சாந்தத்தில்
யார்மீதும் புகாரற்று விடிகிறது பொழுது
சேகேறிய மரத்தின் கிளைகளாய் விரிந்தோடி
பிரபஞ்சத்தையே தழுவ நீளும் என்கரங்களை
தோள்பட்டையிலிருந்து தசைகிழிய முறித்து
பின்புறமாய் நெறித்துக் கட்டிய
ஜென்மாந்திர எதிரிகளிடம் புன்னகைக்கிறேன்
ரோஷங்கெட்டவனென்று
கெக்கலிக்கின்றனர் அவர்கள்
இயல்பாய் புன்னகைப்பதும்
வலிந்து கெக்கலிப்பதும்
அனிச்சையாகிவிடுகிறது பகல் இரவுபோல
ரத்தமல்லாத வேறொன்றாய்
உள்ளிருந்து முடுக்கும் வன்முறையில்
அவர்களே
அவர்களுக்கு தளைபூட்டித்
தவித்த பின்னொரு நாளில்
மதில்தாண்டி விடுவிக்கப்போன என்னிடம்
புன்னகையோ கெக்கலிப்போ
மிஞ்சியிருக்கவில்லை
நானும் அவர்களும் இல்லாததைப்போலவே.

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It