Kumbakonamஉனக்குப் பிடிச்ச
குட்டி கிளாஸையும்
முட்டை தட்டையும்
சாமி ரூமுக்கு
இடம் மாத்திட்டாங்க

நீ மறந்து விட்டுட்டுப்போன
வாட்டர்கேனைப் பார்த்து
அம்மா அழுதுக்கிட்டே கெடக்கு

என்கிட்டே நீ
அடம்பிடிச்சு வாங்கின
பொம்மை போட்ட கவுனை
அப்பா எனக்கே கொடுத்துட்டாரு

நீ ஓட்டின சைக்கிள்
இனிமே யாரும்
தொடக்கூடாதுன்னு
உத்தரவு போட்டுட்டாங்க

நேர்ல பார்க்க
நீ ஆசைப்பட்ட
நடிகருங்க எல்லாம்
நம்ம வீடுதேடி வர்றாங்க

கண்ணாமூச்சி ஆட
இனி யாரைக் கூப்பிடறதுன்னு
கேக்கறா
உன் தோழி சரசு

நானாவது
உசுரோட வேணும்னு
படிப்புக்கு என்னைய
முழுக்குப் போடச் சொல்லிட்டாங்க

அதெல்லாம் கிடக்கட்டும்...
ஸ்கூல் விட்டு வந்து
நீ எடுத்து விடறேன்னு
சொன்ன முள்ளு மட்டும்
உறுத்திக்கிட்டேதான் இருக்கு

(கும்பகோணம் தீ விபத்து அஞ்சலிக் கவிதை)


மாறன்

 

Pin It