ஒரு சமயத்தில்
ஒன்றுக்கு மேற்பட்ட ஏணியில்
ஏறிடப் போவதில்லை.
ஒன்றுக்கு மேற்பட்ட தோணியில்
பயணித்திடப் போவதில்லை.
ஒன்றுக்கு மேற்பட்ட கேணியில்
இறைத்திடப் போவதில்லை.
ஆண்டாலும்
ஒன்றுக்கு மேற்பட்ட அவனியை
அள்ளிக் கொள்ளப் போவதில்லை.
மாண்டாலும்
ஒன்றுக்கு மேற்பட்ட துணியில்
புதைந்திடப் போவதில்லை.
ஒரேயொரு உயிர்க்கு
ஏன் எண்ணிலடங்கா
வேடமும் ஆட்டமும்!
வாழ்வதற்குத் தான் ஆயிரம் தேவைகள்.
நீத்தலுக்கு நீயே தேவை.
நீத்தப் பின் நீயும் தேவையில்லை.
ஏதாகிலும் ஒன்று விடேல்.
ஒன்றுக்கு மேலெனில்
பிறர்க்கென விடல்!
- அ.சீனிவாசன்