மஞ்சள் அறையில்
மெல்லத் திறக்கும்
ஒற்றைக் கண் சிறகு
சிறகு முளைத்த மறுகணம்
மடமடவென உடல் பூட்டி
கழுத்து நிரம்ப
தலைக்குத்தான் சற்று நேரம்
எடுத்தது
தலையும் பூட்டி தகதகவென
மின்னும்
வண்ணம் பூசி
அசைய விடுகையில்
அத்தனை ஆனந்தம்
மெய்நிகர் பூரிப்பில்
மேல் தோலில் புள்ளி புள்ளி
கோலமிட்டு புது வகைமையில்
பார்த்த போது யாவும் புதிதாய்
தோன்றியது
பின்,
அறையிலிருந்து ஜன்னல் வழியே
பறந்து போனது
பறவையா? நானா?
- கவிஜி
அடை மழை
வேலையில்லை
திரும்பி வந்தார்
அப்பா
பாத்திரம் முழுவதும்
பரப்பி வைத்தும்
பாதி வீடு நனைந்தன
கவலையுடன்
அம்மா
சோறாக்க பானையில்ல
கூறத் தயாராகும் அக்கா
குளித்து வந்து
மாற்று துணியில்லாமல்
மழையில் நனையும்
தங்கை
நனைந்த
புத்தக ஏடுகளை
பிரித்தெடுத்து
அடுப்பு சூட்டில்
காயவைக்கும்
தம்பி
எதையும்
கண்டுக் கொள்ளாமல்
ஏதோ சிந்தனையில்
நோய் வாய்ப்பட்ட
அண்ணன்
இடியோடு
கூட்டணி நடத்தின
தாத்தாவின்
இருமல் சத்தம்
நான் பரிசு
கிடைக்கும் என
எழுதிக் கொண்டிருந்தேன்
மழையை வர்ணித்து
கவிதைகளை!!
இரா.மே.இராமமூர்த்தி
RSS feed for comments to this post