மிச்சக் கவிதைக்குள்
கொஞ்சம் மழை கொஞ்சம் வெயில்
மிச்ச மழையென
மிச்ச வெயிலென
கொஞ்சம் நான் கொஞ்சம் நீ...

*****

குறுக்கும் நெடுக்குமாக பூனை
கனத்த யோசனையோடு நாய்
பசிக்குதோ இல்லையோ
கத்தி வைக்கும் மாடு
ஒரு வீதி மூன்று விதி

*****

சோளக்காடு பிளாட் ஆகி விட்டது
நிலா சாட்சியாய்
காட்டில் புணர்ந்து கிடந்த காலம்
எந்த வீட்டில்
புதையப்பட்டிருக்கிறதோ....

*****

மீன்கள் நீந்த மறந்து
சற்று ஆசுவாசமடையும் போது
நீந்திப் பார்க்கின்றன கண்கள்

*****

பெருங்கனவை திறந்து கொண்டு
வெளிவருகையில்
சற்று புரண்டு படுக்க நேரிடுகிறது

*****

பாதிக் கவிதையை
வைத்துக் கொண்டு இரவைக்
கடப்பது கடினம்
மீதிக் கவிதையோடு பகலைக்
கடப்பது பெருங்கடினம்

*****

எப்போதாவது தான்
வாய்க்கிறது
இதழ் மறந்த முத்தம்

*****

- கவிஜி

Pin It