வீட்டைக் கூட்டிச்
சுத்தம் செய்து
கொண்டிருக்கும் பொழுது சூன்யத்தின் அடி விழுகின்றது..
நாளை திரைப்படம் செல்லலாம் என்பதற்குக் கிடைத்த
மறுப்பாகவோ,
முகநூலில் கண்ட
நா.முத்துக்குமாரின்
மரணச் செய்தியாகவோ,
பெருவாரியாய் உதிர்ந்து கிடக்கும் தலைமுடிகளோடு
பிசுபிசுத்திருக்கும் ஆப்பிளின் விதையுற்ற மிச்சமோ,
நேற்று வாங்கி வந்த
குறுந்தகடு உறைக்குள்
அட்டைப் படத்தில்
இல்லாத படமோ,
பசியின் போது
தேங்காய்த் சில்லுகளை எடுக்கும் மேசைத் தட்டுகளோ,
நல்ல பாடலொன்று
திரையில் ஒளிக்க
அணைந்துவிடும் மின்விசிறியோ
என எல்லாம் ஓரிடத்தில் குவிய
ஒரு புதிய பையில் மொத்தமாய் அள்ளி வைத்துவிட்டு,
இனி கண்டதையும் கண்டு விமர்சிக்கும் பண்டிதனாவதில்லை எனும் முடிவிற்கு வருகிறது துடைப்பம்.....

- புலமி

Pin It