nature protectionமிதக்கும் தக்கைகளில்
உள்ளே முள் வைத்து
ஊண் முலாம் பூசி
உலையேற்றும்
தோரணையோடு
தொங்கிக் கொண்டிருக்கும்
இரை நாக்குகளே
தெளிந்த நீர்த் திவலைகளை
இனியாகிலும் தீட்டாக்க வேண்டாம்

கனவுகளின் மீன் குஞ்சுகளை
உங்கள் பசிப் பாசி “சத்து”க்கு
பந்தி வைத்து பலி பீடமேற்றி
ஆங்காங்கே அசுரர்களாய்
அவர்களின் நதிகளை
தூர் வாரி நீங்கள்
துப்பரவு செய்ததாய்
கூவங்களில் வீசிய
கொடுமை போதும்

உடையும் பொம்மை கண்டாலே
உதிர்ந்து விழும் பூ மனசுகளை
வேரோடு சாய்த்துவிடும்
வெறித்தனம் வேண்டாம் இனி..

புலர்வின் வெளிச்சங்கள் சுமந்த
விடிவெள்ளிகளை
உலுக்கி உதிர்த்து உயிர் பலியாக்காது
அவர்களின்
வதிவிடங்களில் வாழவிடுங்கள்

மின் வேட்டுகளையோ
இடி முழக்கங்களையோ இறக்கி
பெருவெள்ளத்தை துவக்கி வைக்காமல்
நட்சத்திரங்களின் வானத்தை
சிதைத்து விடாமல்
சன்னலைத் திறந்துவிடுங்கள்
தூறும் மழை ரசித்து
துள்ளி மகிழட்டும்
அந்த குழந்தை மீன் கூட்டங்கள்

இலைகளை உலுக்கி விடாதீர்கள்
கனவுகள் உடைந்து விடும்
பட்டாம் பூச்சிகளின் வெளி
அலாதியான உலகம்.

- ரோஷான் ஏ.ஜிப்ரி

Pin It