தட்டுங்கள் திறக்கப்படும்
திறவுகோலில்லா கதவுகள்
வாழ் நாள் முழுவதும்
கம்பி எண்ணும் சன்னல் கதவுகள்
திறக்காதா என்று ஏங்க வைக்கும்
கோவில் கதவுகள்
உடைத்த ஆசாரியின் வீட்டுக் குழந்தையை
தாங்கும் தொட்டிலாக உருமாறிய கதவுகள்
குழந்தையின் முதல் நிற்றலுக்கு
பிடிமானமாக இருந்த கதவுகள்
அவன் வளர வளர
பிரிவை உணரும் கதவுகள்
அவனின் துக்கத்தைப் பகிர்ந்து
சாய உதவும் தோழமைக் கதவுகள்
இரவு காற்றில் க்ரீச்சிட்டு
பயமுறுத்தும் பேய்க் கதவுகள்
முதலிரவன்று கண்களை
மூடிக் கொண்ட கதவுகள்
மழைச் சாரலை ஏற்று
அலைந்தாடும் ஓலைக் கதவுகள்
வெளி சத்தம் அத்தனையையும் விழுங்கி
சாத்தியதும் அமைதி பரப்பும் கதவுகள்
போல இல்லை தற்கொலைக்காக
தாழிடப்பட்டு இடித்தும் திறவா கதவுகள்
பிணத்தையே வெறித்தவாறு
கதறிக் கொண்டிருக்கும் வாசல் கதவுகள்
அந்தக் கதவுகளை திறந்து விடுங்கள்
அழுது தொலைக்கட்டும்
- குமரகுரு
உங்கள் கவிதையில் ஈர்க்கப்பட்டு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Variety of Doors என்ற தலைப்பில் poemhunter.com ல் உங்கள் கவிதையையும், உங்கள் பெயரையும் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறேன்.
கீழேயுள்ள இணைப்பில் வாசித்துக் கருத்தளிக்க வேண்டுகிறேன்.
poemhunter.com/.../...
அன்புடன்,
வ.க.கன்னியப்பன்
RSS feed for comments to this post