வானளவு வளர்ந்து நிற்கும்
உன் அதிகாரத்தால்
பூக்களுக்கு கட்டளையிடுகிறாய்
மொட்டுக்கள்
கட்டவிழ மறுக்கின்றன..!

காதல்
ஒரு குழந்தையைப்போல
காற்றாய் தவழ்கிறது..!

பிரம்புக்குச்சியால் பேசும்
ஒரு ஆசிரியைப் போல
அன்பற்ற வார்த்தைகளால்
தோற்றுப் போகிறாய்..!

முத்தங்களால் திறக்க வேண்டிய
முடிச்சுக்களை எல்லாம்
உன் சாவிக்கொத்தால்
திறந்து பார்க்கிறாய்..!
மனசுக்குள்
மாட்டிக்கொண்ட பூட்டுக்கள்
திறக்க மறுக்கின்றன..!

உன் தெய்வத்தை
கோபாவேசத்தின்
குட்டிப்பாம்புகளுக்கு
தின்னக் கொடுத்தாய்..!

மழையாக வேண்டிய..
உன் மேகங்களை எல்லாம்
பெரும் காற்றாகி துரத்தி விட்டாய்..!

புயலாக
நீ போன திசையெங்கும்
அமைதியை இழந்து நிற்கிறது..!

நீ வந்து போன
மனதின் சுவடுகளை
காலம் ஒரு நாள்
கலைத்து விடும்..!

முன்பொரு நாள்
அன்பினால் கசிந்துருகிய
உன் கண்ணீர்த் துளிகளை
எப்போதும் காய்ந்து விடாமல்
ஒரு புன்னகையால் வசீகரித்த
புகைப்படம் போல..
இப்போதும் எனக்குள்
பத்திரமாய் பாதுகாக்கிறேன்..!

- அமீர் அப்பாஸ்

Pin It