பெரும்பணியைச் சுமந்த உடலென்றும்
பெரும்புகழைச் சுமந்த உயிரென்றும்
பெரியாரைப் போற்றியவர் நம்ஐயா -
பெருஞ்சித்திர னாரென்றால் அதுபொய்யா ?
அருந்தமிழர் இனமீட்கத் தம்வாழ்வில்
ஒருநொடியும் ஓயாது உழைத்திறந்த
பெருமாந்தர் பெரியாரை இன்றுபலர்
புரியாமல் இகழ்கின்றார் இதுசரியா ?
குருடான ஒருபூனை விட்டத்திலே
மதியின்றித் தாவியதாம் ; அதுபோலே
பொருந்தாப்பல குற்றங்களைப் பெரியார்மேல்
புறங்கூறிப் பிதற்றுகிறார் இதுமுறையா ?
பெருமையுடன் செய்யுள்பல படைத்தளித்துப்
பேரளவில் இலக்கணங்கள் வடித்தளித்துப்
பெருகியுள புலவர்பலர் தமிழ்நாட்டில்
பெயருக்கு வாழந்தனரே தம்பாட்டில் !
பெரும்பேயாய்ப் பீடையென தமிழினத்தைப்
பிடித்தாட்டிப் பிழைப்புற்ற பார்ப்பனியம்
நொறுங்குறவே செயலாற்றி உயிர்விட்ட
நுண்மாந்தர் பெரியார்தான்; நினைவிலையா?
அருகிவந்த தமிழினத்தின் விடுதலைக்கே
அயராது தமைவருத்திப் பாடாற்றி -
குறுகுமன ஆரியரைக் குலுங்கவைத்த
கூர்மதியர் பெரியாரின் பணிதவறா ?
திருக்குறளைத் தமிழர்க்குப் புரிவித்தார்;
இறைப்பற்றுத் தமிழர்க்கும் நலம்விளைக்க
சிறைப்பட்டார் நம்பெரியார்; அதுபிழையா ?
செய்ந்நன்றி மறந்திடுதல் தமிழ்மறையா?