முட்செடிகளும் புற்களும்
முளைத்துக் கிடக்கும்
அந்த வெற்றுநிலத்தில்தான்
குடைவிரித்து மலரப்போகும்
காலங்களுக்காகக்
காத்துக் கிடக்கின்றன
காளான்கள்,
வித்துக்களாய்

வறண்டு இறுகி
வெடித்துக்கிடக்கும்
இறந்த காலத்துக்
குளங்களில்தான்
சுழன்று சுழன்று
நீந்திக் களிக்கப் போகும்
பொழுதுகளுக்காகக்
காத்துக் கிடக்கின்றன
மீன்கள்,
முட்டைகளாய்

வெப்பத்தில் ஆவியாகி
மடிகனத்துச் சூல்கொண்டு
மென்காற்றில் சிலிர்ப்புண்டு
பரந்த கடல்நோக்கி
ஒளிரப்போகும்
எதிர்காலக் கனவுகளோடு,
சிப்பிகளின் இதழ்நுழைய
சரம்சரமாய் வீழ்கின்றன
முத்துக்கள்,
மழைத்துளியாய்

உள்ளியங்கும் இயக்கமே
உயிர்வாழ்வின் அடையாளம்

இருப்பே சிதைந்து
இருள் சூழ்ந்தாலும்
உள்ளியங்கும் இயக்கத்தால்
உருவாகும் எதிர்காலம்.

Pin It