இது கார்கால மழைக் காலம்
கண்டிப்பாய் நனைந்தாக வேண்டும்
நாம் நடந்த வீதிகளில்
இன்று மீண்டும் நான் நடக்கத் தொடங்கினேன்

தனிமையில்
நடையில் வேகத்திற்கேற்ப
தூறல் என்னை நனைக்கத் தொடங்கிற்று
துவட்டிக் கொள்ளத் துணிந்தவனாய்
கை வீசி நடக்கிறேன்.

தெருக் கோடி மூலையில் உன் உருவம்
மழைச் சாரலில் மின்னல் வெளிச்சத்தில்
சட்டென மறைந்து போனது
ஒரு வேளை
என் கண்ணிலிருந்து மறைக்கப்பட்டிருக்கலாம்

ஊரார் தூற்றுவது மெல்ல
என் காதில் பெரும் இடி சத்தத்தின் ஊடாக
ஒலிக்கிறது.
நீ என்னுள்
பேயாய் குடி கொள்ளத் தொடங்கி விட்டாய்

ஆடித் தீர்ந்த பின்
நினைவு தட்டி மீண்டெழுகிறேன்
உடல் குளிரில் நடுங்கத் தொடங்கிற்று.

ஓடுகிறது வெள்ளம் தடையற்று.
அடித்துச் செல்கிறது என்னையும்
அணை போட யாருமில்லை.
அழுது தீர்க்கிறேன்
அடை மழையோடும்
ஆனந்தக் கூத்தோடும்
யாருக்கும் தெரியாமல்.

Pin It