1.தூறல்:
......................
எப்போது திருமணம்
எனக்கேட்கிறார்கள்.
வரன் பார்த்துக்கொண்டிருப்பதாய்
வீட்டார் சொல்கிறார்கள்.
நம் ரகசியத் திருமணம்.
நெஞ்சில் கனமாய் பயமாய்.

2.இடி
..........................
"நம்ம சாதியில் உனக்கு
ஆம்பளையே கிடைக்கலியா.,,.?"
கேட்கிறார் அப்பா.
ஆண்கள் கிடைப்பார்கள்.
அவன் கிடைப்பானா..?

3.மின்னல்
............................................
கண்ணில் படும் இடத்தில்
கடிதத்தை வைக்கிறேன்.
கண்காணா இடத்துக்குக்
கிளம்பிய பொழுதில்.

4.அடைமழை
....................................................
நான் இறந்துவிட்டதாக
எல்லோரிடமும் உரக்கச்சொல்கிற
அம்மா
மனசுக்குள்
தீர்க்காயுசு இருக்கவேண்டுமென
வேண்டியும் கொள்கிறாள்.

5.வாடை
...........................................................
யாரையோ பார்க்க வந்ததாய்ப்
பொய் சொல்கிறாள் அம்மா.
வாசலில் நின்றுகொண்டு
வேறுபுறம் பார்க்கிறார்
அப்பா.
ரெண்டு பேரின் கண்களும்
தேடுவது
தூளியில் தூங்குகிறது.
Pin It