எவனாவது வந்து என்னை வாங்குங்கடா..?
எனத்தினமும் அங்கலாய்ப்பார் கடவுள்
இப்படியும் அப்படியுமாய்
சாலை கடக்கும் என்னிடம்.

கலைப்பொருள் விற்பனையகத்துக்
கண்ணாடிச்சிறையில்
ரொம்ப நாளாய்
அடைந்திருந்த
"டேஷ்" கடவுளின் சிலையொன்றை
இன்று காணோம்.

கல்லா மனிதர், கடவுளுக்கு
இருபதாயிரம் ரூபாய் விலை
சொன்னது நினைவுக்கு வந்தது.
ஏன் இவ்வளவு எனக் கேட்டதற்கு
"முழுக்க வெண்கலம்" எனச் சொன்னதும்.

ஆர்வமிகுதியால் யார் வாங்கியது
எனக்கேட்டேன்.

"இன்று காலை
கடையைத் திறந்ததும்
கடவுள் மாதிரி ஒருத்தர் வந்து வாங்கினார்"
எனச் சொன்னார்.

Pin It