உன் விழிகளுக்குள்
பதிய இருக்கும்
நிழற்சாலையின் அழகை
இன்னும் ஆயிரம் தூரிகைகளால்
தீட்ட நினைக்கிறேன்!!!.
சிதறி ஓடிய மேகங்களை
உன் புருவம் கொண்டு கோர்க்கின்றாய்.
நீர்த் துளிகளால் ஒரு மாலை!.
நாகரீகம் கருதி பொய்யாய்
கண்மூடும் கதிரவன்!
உன் வருகைக்காக
நகரத்தை மெல்லிய குளிரினால்
போர்த்துகின்றது மேகம்!
அன்பின் மிகுதியால்
சாலையோர மரங்களை
அணைக்கின்றன சாரல்கள்!
புன்னகை தொலைத்த
வீரர்களின் முகங்களில்
மனிதம் தொலைத்த இறுக்கங்கள்...
அணிவகுத்து நிற்கும்
ராணுவ வீரர்களாய்..
நிழற்சாலைகளின் மரங்கள்.
உன் கண்களின் ஒளி வந்த
திசை பார்த்து காற்றில் இசைக்கிறது
இலைகளின் கைகள்!
நீ நடை பழகும் அழகை
கைதட்டி ரசிக்கிறது
கிழட்டு கடல் அலைகள்!!!.
மனசு முழுக்க
அன்பின் அடர்த்தி
மரங்களின் பச்சை இதழ்களிலும்
கசிகின்றது குளிர்ச்சியின்
வியர்வை!!!
 
எச்சில் உதடு குவித்து
மழலை மொழியில்
"ம்ம்மா" என்றாய்.
பொருமிய மேகங்கள்
இனியும் பொறுக்காமல்
அன்பின் மழையால் நனைக்கிறது
நகரத்தின் சாயங்காலப் பொழுதினை!!
 
இருள் ததும்பும் மின்னொளியில்
குளிர்காய்கின்றது நகரத்துவாசிகளின்
நிழற்சாலை!!.
மன்னிக்க வேண்டுகிறேன்
நடைபாதை வாசிகளே!!!.
உங்கள் இரவுத் தூக்கம் தொலைந்ததற்கு!
  
- மால்கம் X இராசகம்பீரத்தான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It