பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய ‘The Buddha and his Dhamma’ என்ற ஆங்கில நூலைத் தமிழுக்கு மொழிபெயர்த்த பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள், அந்நூலின் முன்னுரையில், மொழி ஆக்கம் குறித்துத் தெரிவித்து உள்ள கருத்துகள்:

1985 டிசம்பரில் ஏதோ ஒரு நாள். மேல்நாட்டுச் சுற்றுப்பயணம் முடிந்து நான் சென்னை திரும்பி கொஞ்ச நாட்களே ஆகி இருந்தன. அன்று விடிவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் மிச்சம் இருந்தது.

கடுங்குளிரில், தேநீர்க் கடை வாயிலில், நானும், எக்ஸ்ரே மாணிக்கம் அவர்களும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தோம்.

வழக்கம்போல், பாபா சாகேப் அம்பேத்கர் பற்றிய எங்கள் பேச்சு ஒரு கட்டத்தில் அவருடைய தி புத்தா அன்ட் ஹிஸ் தம்மா (The Buddha and his Dhamma) பற்றிய செய்திக்குத் திரும்பியது. பாபா சாகேப் அம்பேத்கரின் இறுதி நூலான

அந்நூல் பற்றிய தனிச் சிறப்புகளை, அவர் அடுக்கிக் கொண்டே போனார்.

பேராசிரியரான நான் மாணவன் ஆனேன். எக்ஸ்ரே மாணிக்கம் ஆசிரியர் ஆனார். இருவரும் தேநீர் அருந்தவும் மறந்து போனோம். இமைக்கவும் மறந்தவனாய், இரு காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டு, அவர் சொன்னவைகளை, மனதில் பதித்துக்

கொண்டே இருந்தேன்.

அந்தக் குளிர்கால அதிகாலையில், என் நெஞ்சில் வைத்த ஆர்வத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அடுத்த நாள் சென்னை வ.உ.சி. நகர் தோழர் செல்வராஜைத் தேடிச்சென்று, அவரிடம் இருந்த அந்த நூலை, இரவல் பெற்று வந்தேன். மிகுந்த

ஆர்வத்தோடும், அளவிலா ஈடுபாட்டோடும், அதீதமான இரசனையோடும், அந்த அற்புத நூலைப் பயின்றேன். மகிழ்ந்தேன்.

சில நாட்களுக்குப் பின் என்னைச் சந்திக்க வந்த எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் இருவரிடமும், அந்த நூலின் சில பகுதிகளின் சிறப்பை, இரசனையோடு விவரித்தேன்.

அந்த அற்புத நூலின் அழகிய வசனங்களில் சிலவற்றை மேற்கோள்களாகத் தமிழில் நான் விவரித்தபோது, வியந்து பாராட்டிய அவ்விருவரும், ‘பேராசிரியர் இந்த நூலை, முழுமையாகத் தமிழாக்க முயற்சி செய்யுங்களேன்’ என்றார்கள்.

இந்தத் தமிழ் ஆக்கத்திற்கான விதைத் தெளிப்பு இப்படித்தான் நடந்தது; இவர்களால்தான் நடந்தது.

என் பல வேலைகளுக்கு இடையில், அவ்வப்போது ஓய்வும்-உணர்வும் ஒத்துப் போகும்போதெல்லாம் இந்நூலின் பகுதிகளைத் தமிழ் ஆக்கம் செய்து தொகுத்து வந்தேன்.

அதில் ஓரிரு அத்தியாயங்களை, அரக்கோணம் தோழர் பெருமாள் உதவியுடன் சிறு வெளியீடாகவும் கொண்டு வந்தேன். பாபா சாகேப் அம்பேத்கரின் இறுதி நூலான இதன் தமிழாக்கம் பற்றிய செய்தி எனது கட்டுரை வடிவில், சாவி வார இதழில் (19.9.90)

வெளியானது.

இதைப் படித்த அறிவு வழி இணை ஆசிரியர் தோழர் மு.பா. எழிலரசு, இவ்வரிய நூலின் தமிழ் ஆக்கத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டும் எனவும், என்னைப் பார்க்கும்போதெல்லாம்

வற்புறுத்தி வந்தார். அவருடைய பெருமுயற்சியால், புத்தரும் அவர் தம்மமும் தமிழ் ஆக்க நூல் வெளியீட்டுக்குழு அமைக்கப்பட்டது.

என் தமிழ் ஆக்கம் அச்சாவதற்கு முன்பு, எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் இருவராலும் முழுமையாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். இக்கருத்தை, வெளியீட்டுக்கு குழு மகிழ்ச்சியுடன் ஆமோதித்தது. இந்தச் சுமை

மிகுந்த வேலையை, அவர்கள் இருவரும் மனமுவந்து ஏற்றார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம், நாங்கள் மூவரும் தமிழ் ஆக்கப் பரிசீலனைக்காகப் பல மணி நேரங்கள் செலவழித்தோம்.

பரிசீலனை தொடங்கிய சில நாட்களிலேயே, என் தமிழ் ஆக்கத்தில் நான் செய்ய வேண்டிய அடிப்படை மாற்றங்கள் ஏராளம் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

அதுவரை, உலக சமயத் தத்துவம் பற்றிய என் ஆய்வு அறிவு, அதில் பவுத்தம் பற்றிய என் பொது அறிவு, ஆங்கில அறிவு, தமிழ் இலக்கிய அறிவு ஆகியவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இப்பெருநூலைத் தமிழ் ஆக்கம் செய்து இருந்த நான்,

இந்நூலின் தமிழ் ஆக்கத்திற்கு இவை மட்டும் போதாது என்று புரிந்து கொண்டேன்.

பவுத்தத்தை பாபா சாகேப் அம்பேத்கரின் பார்வையில் நான் புரிந்து கொள்ள, எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் இருவரும் பெரிதும் உதவினர்.

ஒவ்வொரு பரிசீலனையின் போதும், இந்தப் புதிய நோக்கில், புதிய தமிழ் ஆக்கம் செய்து இருந்த நான், இந்நூலின் தமிழ் ஆக்கத்திற்கு இவை மட்டும் போதாது என்று புரிந்து கொண்டேன். புதுப்புது வார்த்தைகளைப் பிரசவித்தேன்.

பல்வேறு பணிகளுக்கு இடையில், இப்பணியைச் செய்ய நேரிட்டதால், தமிழ் ஆக்கமும், பரிசீலனையும் மிகமிகத் தாமதமாயிற்று.

வெளியீட்டுக் குழு அமைக்கப்பட்டபோது, ‘இதோ தமிழாக்கம் தயார்’ என்று நான் செய்த அறிவிப்பின்படி நடந்து கொள்ளாமல் போய்விட்டது.

இத் தமிழ் ஆக்கத்திற்காக, பாபா சாகேப் அவர்களின் மூல நூலைப் பயிலப்பயில, நான் பவுத்தத்தில் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டு இருந்தேன்.

இதற்கு இடையில், எக்ஸ்ரே-எரிமலை இருவரின் அழைப்பின் பேரில், 1991 இல் நாக்பூர் தீக்ஷா பூமிக்குச் சென்று வந்தேன். பாபா சாகேப்போடு பவுத்தம் ஏற்ற பெரியவர் எம்.டி. பஞ்ச்பாய் போன்றோரைச் சந்தித்து பவுத்த விளக்கம் பெற்றேன்.

அந்த உந்துதலின் அடிப்படையில், 1991 ஜூலையில், முறைப்படி தீக்ஷா பெற்று பவுத்தனாகி, என் இயற்பெயரை, ‘வீ. சித்தார்த்தன்’ என மாற்றிக் கொண்டேன். தமிழ் நாடு அரசு இதழிலும் (கெசட்) இச்செய்தி பதிவு ஆகி வெளியானது.

மீண்டும் 1992 இல் நாக்பூர் சென்று, இந்தோரா பவுத்த விஹார் தலைமைப் பிக்கு சஹாய் அவர்களைச் சந்தித்து, இந்நூல் குறித்துச் சில விளக்கங்களைப் பெற்று வந்தேன்.

இவ்விதமான மொழி ஆக்கத் தாமதத்திற்கு முதற்காரணமும், முழுக்காரணமும் நானே; என் ஓய்வு இன்மையே. என் தமிழ் ஆக்கத்தைச் செழுமைப்படுத்த எனக்குத் தேவைப்பட்ட கால அவகாசமே!

1991 அக்டோபர் தொடங்கி, ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் உருண்டு ஓடிய பின், 1993 மே முதல் நாள்தான், முழுத் தமிழ் ஆக்கத்தையும் என்னால் வெளியீட்டுக் குழுவிடம் ஒப்படைக்க முடிந்தது.

இந்தியர் அனைவரையும் சமத்துவ நெறியாளராய், சமதர்மச் சிந்தனையாளராய் ஆக்கக்கூடிய இவ்வரிய பெரிய ஆங்கில நூலை, தமிழ் ஆக்கம் செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பு என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப் பெரும்பேறு.

இவ்வரிய நூலின் தமிழ் ஆக்கம் என்னால் செய்யப்பட்டு, எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் இருவராலும், இரவு பகலாய்ப் பரிசீலிக்கப்பட்டது.

எங்கள் பரிசீலனை முறை இதுதான்...

ஆங்கில மூலத்தை ஒவ்வொரு வசனமாய் எரிமலை இரத்தினம் படிப்பார். உடனே, அதற்கு உரிய என் தமிழ் ஆக்கத்தை நான் படிப்பேன். இரண்டையும் கூர்ந்து கவனிப்பார் எக்ஸ்ரே மாணிக்கம்.

பின்னர், கருத்து மயக்கமோ, மொழி ஆக்கத் தடுமாற்றமோ இல்லாமல், தமிழ் ஆக்கம் சிறப்பாக உள்ளதா என அவர்கள் இருவரும் மிகக் கூர்மையாகக் கவனிப்பார்கள். செழுமைப்படுத்தப்பட வேண்டியது இருப்பின், சுட்டிக் காட்டுவார்கள். விவாதம்

மேற்கொள்ளப்பட்டு, தேவை இருப்பின் திருத்தம் செய்வோம்.

சில நேரங்களில் ஒரு வசனத்தைச் சரி பார்க்க ஒரு ஒரு மணி நேரம் கூட ஆகும்.

இந்தப் பரிசீலனையில், நாங்கள் எதிர்கொண்ட பல சிக்கல்களையும், ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளையும் இங்கே நினைவு கூர்கிறேன்.

கடவுள் இருப்பு, தேவர்கள் இருப்பு, ஆன்மா இருப்பு, சொர்க்கம்-நரகம் ஆகியவற்றை, ஒட்டுமொத்தமாய் நிராகரித்தவர் புத்தர். அதே கருத்து உடையவர் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்.

இதை நன்கு உணர்ந்த நாங்கள், மூல நூலில் பக்கம் 4 இல், 4-2 ஆம் வசனத்தில், ....the gods over the space of the sky என வரும் இடத்தைத் தமிழ் ஆக்கம் செய்வதில் பெரும் விவாதத்தை மேற்கொள்ள நேர்ந்தது.

நேரடியாக இதன் தமிழ் ஆக்கம் இதுதான்: ‘வான் மேல் வாழும் கடவுளர்.’

ஆனால், கடவுள் மறுப்பாளரான புத்தரின் தம்ம விளக்க நூலில் இது எப்படி வரும்?

இங்கே கடவுள் என்பது, உயர்நிலை அடைந்தோரை உணர்த்துவது.

பெரும் விவாதத்திற்குப்பின், இந்த வசனத்தை இப்படி மொழிபெயர்த்தேன்.

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வான்புகழ் எய்தியவர்கள்.’

புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சியைக் கூறும் இப்பகுதியை, பவுத்தத் தத்துவத்தையோ, பாபா சாகேப்பின் கருத்தையோ காயப்படுத்தாமல், திருக்குறள் உதவியோடு, தமிழ் ஆக்கிவிட்ட, திருப்தியில் தொடர்ந்தோம். செலவு ஒரு மணி நேரம்; வரவு கடல்

அளவு மகிழ்ச்சி.

மூல நூலில் வேறு மதங்களைக் குறிக்கவும் Religion என்ற சொல் வரும். பவுத்தத்தைக் குறிக்கும் சில இடங்களிலும் Religion என்ற சொல் வரும். Religion வேறு, Dhamma வேறு என்று விளக்க ஒரு தனி அதிகாரமே இந்நூலில்

எழுதி உள்ள பாபா சாகேப்பின் கருத்துக்கு மாறாகி விடாமல், இச்சொல்லைத் தமிழ் ஆக்கம் செய்ய விவாதித்தோம்.

எனவே, வேறு மதங்களைக் குறிக்கும் இடத்தில் Religion என்பதை மதம் என்றும், பவுத்தத்தைத் குறிக்கும் இடத்தில் Religion என்பதை, சமயம் என்றும் மொழிபெயர்த்தேன். எக்ஸ்ரே-எரிமலை இருவரும் மகிழ்ச்சியுற்றார்கள்.

Rely - சார்ந்திரு என்னும் சொல்லைப் பகுதியாய்க் கொண்ட Religion மதம் என்பது, பவுத்தத்திற்குப் பொருந்தாது. அமைத்தல், உருவாக்கல், சமைத்தல் என்பதைப் பகுதியாகக் கொண்ட, ‘சமயம்’ என்பதே பவுத்தத்திற்குப் பொருந்தும் என

முடிவு எடுத்தோம்.

Nibbana என்பதை, நிர்வாணம் எனத் தமிழில் ஆக்கி இருந்தேன். ‘நிர்வாணம்’ வேறு, ‘நிப்பானம்’ வேறு என விளக்கினார் எக்ஸ்ரே மாணிக்கம். நூல் முழுதும் ‘நிப்பானம்’ என மாற்றினோம்.

Low and Lowly என்பதன் நேரடித் தமிழ் ஆக்கம், ‘தாழ்ந்தவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும்’ என வரும். இதைக் காரணத்தோடு மாற்றச் சொன்னார் எரிமலை இரத்தினம். எனவே, ‘உரிமை மறுக்கப்பட்டவர்களும்,

உதாசீனப்படுத்தப்பட்டவர்களும்’ எனத் தமிழ் ஆக்கம் செய்தோம்.

இந்து மத உயிர்ப்பலிச் சடங்கும், ஆங்கிலத்தில் Sacrifice என்றே குறிக்கப்படுகிறது. தன்னலம் அற்ற, தன்னை அர்ப்பணித்தல் என்னும் பவுத்த நெறியும், ஆங்கிலத்தில் Sacrifice என்றே குறிக்கப்படுகிறது. முன்னதை ‘யாகம்’ என்றும்,

பின்னதைத் ‘தியாகம்’ என்றும் தமிழில் ஆக்கி இருந்தேன். பரிசீலனைக் குழுவின் பாராட்டுக் கிடைத்தது.

மூல நூலின் 190 ஆம் பக்கத்தில், புத்தரின் கூற்றாக, ஒரு அருமையான ஆங்கிலக் கவிதையை அமைத்து உள்ளார் அறிஞரில் பேரறிஞர், இலக்கியச் செம்மல் பாபா சாகேப் அம்பேத்கர்.

புத்தரின் தத்துவப் பிழிவாய், பாபா சாகேப் அம்பேத்கரால் அளிக்கப்பட்டு உள்ள இவ்வாங்கிலக் கவிதையை, கவிதையாகவே தமிழ் ஆக்கம் செய்தேன்.

பரிசீலனையில் தோழர் எரிமலை இரத்தினம், ‘கண்கொத்திப் பாம்பு’ என்பார்களே, அப்படி ஆகி விட்டார். ஆங்கிலத்தில் வந்து உள்ள எல்லாச் சொற்களும் கருத்துகளும் தமிழில் வந்து உள்ளதா? அதில் வராத சொல்லோ, கருத்தோ வந்து

விடவில்லையே என, வரிவரியாய்- ஏன் வார்த்தை வார்த்தையாய் கவனித்துக் கொண்டு இருந்தார்.

இறுகிய அவர் முகத்தையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தேன். அரை மணி நேரம் கழித்து மெல்லத் தலை அசைத்தார். மிக மெல்லப் புன்னகைத்தார். அவர் உடன்பாட்டின் அடையாளங்கள் இவை.

படுகூர்மையாய்க் கவனித்துக் கொண்டு இருந்த எக்ஸ்ரே மாணிக்கம், பாய்ந்து வந்து கை கொடுத்துப் பாராட்டினார்.

அக்கவிதை, இந்நூலில் பதிவு ஆகி உள்ளது.

இவ்வரிய நூலின் தமிழ் ஆக்கத்தைச் செம்மைப்படுத்துவதில் பரிசீலனைக் குழுவினர் காட்டிய அக்கறை, செலவழித்த நேரம், கொண்டு இருந்த கவனம் ஆகியவற்றை, ஒரு சிறிதேனும் எடுத்துக்காட்டவே இவ்வளவும் எழுதினேன்.

இந்தியாவில் மூட நம்பிக்கை வெறி அடங்கி, சமத்துவ சமதர்ம ஆட்சி முறை அமைய, பகுத்தறிவு மலர, உண்மை மதச் சார்பு இன்மை ஓங்க, பவுத்தம் பரவ வேண்டும். அதற்கு, பாபா சாகேப் அம்பேத்கரின் The Buddha and His Dhamma

பயிலப்பட வேண்டும்.

இந்த வாய்ப்பு, தமிழர்களுக்குக் கிடைத்திட வேண்டும் என்பதற்கான என் எளிய முயற்சியே இத்தமிழ் ஆக்கம்.

இவ்விதமாக, என் மொழி ஆக்கப் பணி முற்றிலுமாய் முடிவுற்ற பின்னர், இத்தமிழ் ஆக்கம் பாபா சாகேப் எழுதியது எழுதியவாறே, உள்ளது உள்ளபடியே, பதவுரை, பொழிப்புரை, கருத்துரை அனைத்தும் கொண்டதாய், நடை இனிமையும், மூல நூலோடு

நல்லிணக்கமும் கொண்டதாய் உள்ளது என இந்நூலைப் பரிசீலித்த எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் இருவரும் ஒப்புக் கொண்ட பின்தான், இந்நூல் அச்சுக்கு அளிக்கப்பட்டது. இந்நூலுக்கு விதை தெளித்த அவர்கள் இருவரும்தான், நான் கனி

பறிக்கவும் காரணம் ஆனார்கள். அவர்கள் இருவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி.

இதன் மூல நூலில் பாகம், பகுதி, பிரிவு, அத்தியாயம் என்ற வகையில் பகுப்புகள் செய்யப்பட்டு உள்ளன. அதற்கான வசன எண்கள், ஒவ்வொரு அத்தியாயத்தோடும் முடிவுறும். அதனால் ஒரு வசனத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்வது மிகச் சிரமம். ஆனால்,

இத்தமிழ் ஆக்கத்தைப் பயில்கையில், எந்த ஒரு வசனத்தையும் உடனே இனங்கண்டு எடுத்தாள உதவியாக ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நூல் தொடக்கம் முதல் முடிவு வரை, அனைத்து வசனங்களுக்கும் தொடர் வரிசை எண் வழங்கப்பட்டு

உள்ளது.

சுருக்கமாகச் சொன்னால்....

பவுத்தத்தில் சாமி இல்லை; சடங்கு இல்லை; சாதி இல்லை; மாயம் இல்லை; மந்திரம் இல்லை; பூஜை இல்லை; பிரார்த்தனை இல்லை; எல்லாவற்றுக்கும் மேலாய் தனி உடைமைச் சுரண்டல் இல்லை; இவைகளில் எதுவொன்று இருப்பதும் பவுத்தம்

இல்லை.

பவுத்தத்தில் அன்பு உண்டு, அறிவு உண்டு, சமத்துவம் உண்டு, சமதர்மம் உண்டு, ஒழுக்கம் உண்டு, இரக்கம் உண்டு, வீரம் உண்டு, விவேகம் உண்டு, இவைகளில் எதுவொன்று இல்லாததும் பவுத்தம் இல்லை.

பவுத்தத்தில் உள்ளது இவைகளே; இல்லாதது இவைகளே என்று ஆதாரபூவர்மாய் உலகுக்கு விளக்க, உலகப் பேரறிஞர் டாக்டர் அம்பேத்கர் படைத்து அளித்த மாபெரும் நூலே, புத்தரும் அவர் தம்மமும்.

அறிவுபூர்வச் சிந்தனைக்கு முழுப்பெயர் பவுத்தம்
நேர்மையான வாழ்வுக்கு வழிகாட்டும் நெறிக்குப் பெயர் பவுத்தம்
சமத்துவத்திற்கு வழிநடத்தும் தத்துவத்திற்குப் பெயர் பவுத்தம்
பரவுக பவுத்த நெறி
ஓங்குக பாபா சாகேப் புகழ்

தோழமையுடன்,

வீ. சித்தார்த்தா

(பெரியார் தாசன்)

அனுப்பி உதவியவர்: அருணகிரி

Pin It