ஹெட்கேவர் தலைமை (துவக்கமும் பின்னணியும்)

1925-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி! அது ஒரு விஜயதசமி நாள்! அன்றுதான் 'ராஷ்டிரிய சுயம் சேவக்சங்' என்ற நஞ்சு பிறப்பெடுத்தது! 'Hinduism is our Natinalism' 'இந்துயிசமே எங்கள் தேசியம்' என்ற பிரகடனத்தோடு உருவானது அந்த அமைப்பு!

வகுப்புவாதப் பிரச்சனைக்கு காந்தியார் காட்டிய 'சமரப் பாதை'யை பின்பற்றுவதுதான் சரியான வழி என்ற எண்ண ஓட்டம் அன்றைய சூழ்நிலையில் மக்களிடையே நிலவியது! இந்து - முஸ்லீம்களிடையே குறைந்தபட்ச ஒற்றுமையை உருவாக்கி அகிம்சைமுறை ஒத்துழையாமை இயக்கங்கள் மூலம் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடும் காந்திய முறைக்கு மக்களிடையே செல்வாக்குப் பெருகியது.   ஆனால், இந்துக்களே போராடி இந்த நாட்டை இந்துக்களின் நாடாக்க வேண்டும் என்று துடித்த பார்ப்பனர்கள்; காந்தியாரின் இந்த வழி, தங்கள் நோக்கத்தையே சிதைத்துவிடும் என அஞ்சினார்கள். வெள்ளைக்காரர்கள் எதிர்ப்பு என்பதைவிட, முஸ்லீம்கள் எதிர்ப்பு என்பதிலேதான் அவர்களுக்கு ஆர்வமும் கவனமும் இருந்தது.

ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியத்தை - அதன் முதல் தலைவரான 'ஹெட்கேவர்' இவ்வாறு கூறுகிறார்;

"காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கத்தின் விளைவால் நாட்டில் எழுச்சி குறைந்து வருகிறது. அதன் காரணமாக தீய சக்திகள் கொடூரமாக தலைவிரித்தாடுகின்றன. தேசிய போராட்டம் உச்ச கட்டத்திற்கு வரவேண்டிய நேரத்தில், ஒருவருக்கொருவர் பொறாமை வளர்ச்சிகள் வளர்ந்துக் கொண்டிருக்கின்றன. எல்லா துறைகளிலும் தனிப்பட்ட தகராறுகளே இருக்கின்றன. பல்வேறு சங்கங்களிடையே மோதல்கள் ஆரம்பித்துவிட்டன. பார்ப்பனர் - பார்ப்பனல்லாதவர் போராட்டம் நடப்பது கண்கூடாகத் தெரிகிறது. 'யாவான் விஷநாகங்கள்' (முஸ்லீம்களை இப்படிக் குறிப்பிடுகிறார்.) ஒத்துழையாமை இயக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, நாடெங்கும் கலவரங்களைத் துவக்கி விஷத்தைக் கக்கி படமெடுத்தாடி வருகின்றன." (ஆதாரம்: சி.பி. பிஷிகார் எழுதிய 'கஷேவ் சன்ங் நிர்மதா' இந்தி நூல்.)

ஹெட்கேவரின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் காந்தியாரை எதிர்க்கவும், முஸ்லீம்களை எதிர்க்கவும், பார்ப்பனர்களை பாதுகாக்கவுமே ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்டது என்ற உண்மையை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.   (1925-ல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து வகுப்புவாரி உரிமைக் கேட்டு தந்தை பெரியார் போர்க் கொடி உயர்த்துகிறார். அதே 1925-ம் ஆண்டில் நாட்டில் பார்ப்பனர் - -பார்ப்பனல்லாதவர் போராட்டம் நடப்பதாக ஹெட்கேவர் கூறுவதையும் வாசகர்கள் கவனத்தில் வைக்க வேண்டும்.)

அது மட்டுமல்ல; ஆர்.எஸ்.எஸ். அதிகார பூர்வமாகவே, முஸ்லீம்களுக்கு எதிரான யுத்தத்தை பிரகடனப்படுத்துகிறது.  "நாட்டில் முஸ்லீம்கள் கலவரம் நடத்துகிறார்கள். ஒவ்வொரு கலவரத்தையும் முஸ்லீம்களே துவக்கி நடத்துகிறார்கள். அவர்களே குற்றவாளிகள்." என்று கோல்வாக்கர் (இவர் ஹெட்கேவரின் வாரிசாக ஆர்.எஸ்.எஸ். தலைவரானவர்.) 'The man and his mission' என்ற நூலில் பக்கம் 24-25-ல் குறிப்பிடுகிறார். கலவரத்தை அவர் இந்து - முஸ்லீம் கலவரம் என்று குறிப்பிடவில்லை. முஸ்லீம்கள் கலவரம் என்றே குறிப்பிடுகிறார்! கோல்வார் பிரகடனம் இத்தோடு நின்றுவிடவில்லை.  ஒளிவு மறைவு இல்லாமல் திட்டவட்டமாகவே அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். "பாரத தேசம் என்பது இந்துக்களின் தேசம். ராஷ்டிரம் என்பது இந்துக்களின் ராஷ்டிரமே இந்த அரசியல் உண்மையை உணராமல் பலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நடிப்புகளின் கற்பனையில் சிக்குவதற்கு டாக்டர் ஹெட்கேவர் தயாராக இல்லை. இதுதான் உண்மை. உண்மையை வெளிப்படையாக சொல்கிறோம். இந்துக்கள் மட்டுமே இந்துஸ்தானை விடுவிக்க முடியும். இந்துக்களின் சக்தி மட்டுமே இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும். இந்த உண்மையிலிருந்து யாரையும் திசை திருப்பிவிட முடியாது. எனவே இந்து இளைஞர்கள் ஒன்று திரட்டப்படவேண்டும். வேறு வழியில்லை. ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்டது இதற்குத்தான். அந்தப் புனித நாள் 1925 விஜய தசமி நாள். (குரு கோல்வாக்கர் அதே நூலில் பக்கம் 25)

எனவே, முஸ்லீம்களுக்கு எதிராக பிரகடனப்படுத்தப்பட்டு அதையே, நோக்கமாகக் கொண்டு உருவானது- -தான் ஆர்.எஸ்.எஸ். என்பதற்கு அவர்களின் வாக்கு மூலங்களே சான்றுகளாகும். 'நாங்கள் முஸ்லீம்களுக்கு விரோதிகள் அல்ல' என்று இவர்கள் நடத்தும் பிரச்சாரம், உண்மைக்கே தொடர்புடையது அல்ல.  25-9-1925-ல் நாக்பூரில் ஹெட்கேவர் இல்லத்தில் 5 முக்கிய புள்ளிகள் கூடி ஆலோசனை செய்து திட்டம் ஒன்றை வகுத்தார்கள். இந்த '5' நபர்கள் யார் யார் என்பதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு! இந்த 5 நபர்களின் பெயர்களை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெளியிடுவதே இல்லை. ஆர்.எஸ்.எஸ் காரர்களின் வெளியீடுகள் எல்லாவற்றிலும், 'அய்வர் குழு' என்றுதான் குறிப்பிடுகிறார்களே தவிர, இதுவரை அந்த 'அய்வர் யார்?' என்பதை அவர்கள் வெளியிட்டதே இல்லை!

அந்த அய்வர் யார்?

1.டாக்டர் பி.எஸ். மூஞ்சி.
2. டாக்டர் எல்.வி. பாராஞ்சிபே.
3. டாக்டர் கே.பி. ஹெட்கேவர்.
4. டாக்டர் தோல்கார்.
5. டாக்டர் பாபாராவ் சர்க்கார்.

இதுதான் ஹெட்கேவர் வீட்டில் ஆர்.எஸ்.எஸ். துவக்கிய நாளில் கூடிய அய்வர் குழு. இந்தப் பெயர்கள் ஆர்.எஸ்.எஸ். வெளியீடுகள் அனைத்திலும் மறைக்கப்பட்டிருப்பதன் மர்மம் என்ன? வேறு ஒன்றுமில்லை; இவர்கள் காந்தியாரைக் கொலை செய்த இந்து மகாசபை என்ற அமைப்பின் தலைவர்கள். அனைவருமே மராட்டிய பார்ப்பனர்கள்.

காந்தியார் கொலைக்கும் தங்களுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்று சாதித்துக் கொண்டிருக்கும் கூட்டம் ஆர்.எஸ்.எஸ். அல்லவா?  ஆர்.எஸ்.எஸ். மூலகர்த்தாக்கள்தாளே காந்தியாரை கொலை செய்த அமைப்பைச் சார்ந்தவர்கள்தான் என்ற உண்மை வெளியாகிவிட்டால், அவர்கள் முகத்திரை கிழிந்துவிடும் அல்லவா? எனவேதான் இந்த இருட்டடிப்பு சூழ்ச்சி!

இன்னொரு காரணமும் உண்டு.  ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பை உருவாக்கிய பெருமை ஹெட்கேவருக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்; மற்றவர்களுக்கு அந்தப் பெருமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பது மற்றொரு நோக்கம். தலைவரைப் பெருமைப் படுத்த வேண்டும் என்பதற்காக, இல்லாத பெருமைகளை ஏற்றிச் சொல்வது இவர்களது வாடிக்கை.  ஆனால், இரும்புத் திரைகளைப் போட்டு மறைத்தாலும் உண்மைகள் வெளிவராமல் போய் விடுமா?

காந்தியாரைக் கொலை செய்த 'கோட்சே' ஒரு இந்து மகா சபைக்காரர் என்றவுடன், தங்களுக்கும் இந்து மகா சபைக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்று அறிவித்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர்களே, இந்து மகா சபைத் தலைவர்கள்தான்!  ஆர்.எஸ்.எஸ். துவக்க நாளில் ஹெட்கேவர் இல்லத்தில் கூடிய அந்த '5 பேர்' யார் என்ற முகவரிகள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தன? அந்த அய்வர் குழுவிலே ஒருவரான, எல்.வி. பராஞ்சிபே ஒரு கட்டுரையில் சுழலவிடுகிறார்.  ஆர்.எஸ்.எஸ். துவக்கிய நாளில் கூடிய அந்த அய்ந்து பேர்கள் பெயர்களையும் அவரே குறிப்பிட்டு ஒரு கட்டுரையைத் தீட்டிவிட்டார். அந்தக் கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். மூலவர்களாக விளங்கிய இந்து மகாசபைத் தலைவர்கள் 5 பேர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு விட்டன. (இந்தக் கட்டுரை 'கேசரி' என்ற நாளேட்டில் ஜூலை 5, 1940-ல் வெளிவந்திருக்கிறது.)

அது மட்டுமல்ல , இன்னொரு திடுக்கிடும் செய்தி! 1930-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.தலைவர் ஹெட்கேவர் சிறைச்சாலையில் இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பதவியான 'சங்சலாக்' பதவியை ஏற்று ஆர்.எஸ்.எஸ்சையே வழிநடத்திச் சென்றவர் யார் தெரியுமா? எல்.வி. பராஞ்சிபே என்ற, அய்வர் குழுவில் ஒருவராக இருந்த, அதே இந்து மகாசபைத் தலைவர்தான்! பின்னர் 1945-ம் ஆண்டு 'காஷிநாத் பாந்த்லிமாயி' (இவர் அப்போது மராட்டிய மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவர்) பாபாராவ் சவர்க்கார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு கட்டுரை எழுதினார். இந்த பாபாராவ் சவர்க்கார் என்ற இந்து மகாசபைத் தலைவரும், ஆர்.எஸ்.எஸ்சை துவக்கிய அய்வர் குழுவில் ஒருவர் என்ற உண்மையை இந்த இரங்கல் கட்டுரையில், அந்த மராட்டிய ஆர்.எஸ்.எஸ். காரர் வெளியிட்டிருக்கிறார். அவர்களையும் அறியாமல் உண்மைகள் வெளிவந்துவிட்டன! (இந்தக் கட்டுரை வெளியான பத்திரிக்கை 'விக்ரம்' என்ற மராட்டிய வார ஏடு - மார்ச் 31, 1945)

இந்து மகாசபைக்கும் ஆர்.எஸ்.எஸ்சுக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது; இரண்டும் ஒரே அமைப்புகளாகவே ஒன்றுபட்டு நின்றிருக்கின்றன. ஆனால் இதைச் சொல்வதற்கு ஆர்.எஸ்.எஸ்காரார்கள் வெட்கப்படுகிறார்கள்; காந்தியாரைக் கொன்ற அதே கூட்டம்தான் என்ற உண்மை அனலாக கொதித்து தங்களை சுட்டெரித்துவிடும் என்ற அச்சத்தால்தான், இந்த பெயர் இருட்டடிப்பை அவர்கள் திட்டமிட்டு நடத்தி வருகின்றார்கள்! ஆனாலும், அவர்களையும் அறியாமல் உண்மைகள் வெளி வந்துவிட்டன.

அய்வர் குழு ஆலோசனைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். முதல் கூட்டம் எங்கு நடந்தது? அதில் கலந்துக் கொண்டவர்கள் எல்லாம் யார்? எந்த சூழ்நிலையில் உருவானது? இதுபற்றி 'பால்க்கார்' என்ற ஆராய்ச்சியாளர், தனது ஆய்வுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். "அவர்களின் முதல் கூட்டம் நாக்பூர் நகரத்தில், பார்ப்பனர்கள் அதிகமாக வாழ்க்கூடிய 'மொகைத்வாதே' (Mohait Wade) என்ற இடத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டவர்கள் எந்த ஜாதிக்காரர்கள் என்ற எண்ணிக்கையை ஆர்.எஸ்.எஸ்காரர்கள் வைத்திருக்கவில்லை என்றாலும், நான் பார்த்த ஆவணங்களில் இருந்து ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும். அப்போது இந்த அமைப்பில் இருந்த உறுப்பினர்கள் எல்லாம் பார்ப்பனர்களே." என்று எழுதியிருக்கிறார்.

இந்த அமைப்பு தோன்றுவதற்காக, அப்போது நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றையும் பால்க்கார் சுட்டிக் காட்டுகிறார்.

"நாக்பூர் பகுதி 'போன்ஸ்ஸி' என்ற அரசவம்ச ஆட்சிக்கு கீழே இருந்து வந்தது. அந்த அரசர்களின் ஆட்சியில் பார்ப்பனர்கள் மிக உயர்ந்த இடத்தில் மதிக்கப்பட்டனர். அவர்களின் பரம்பரைத் தொழிலிலே ஈடுபட்டு வந்தனர். மூன்றாவது ராகுஜி மன்னன் அப்போது அரசனாக இருந்தான். அவனுக்குப் பிறகு வாரிசு இல்லாததால், பிரிட்டிஷார் தங்களிடமிருந்த அதிகாரத்தை பயன்படுத்தி, பிரிட்டிஷாரின் நேரடியான ஆட்சிக்குக் கீழே அந்தப் பகுதியைக் கொண்டு வந்துவிட்டனர். இந்த ஆட்சி மாற்றத்தைக் கண்டு பார்ப்பனர்கள் அஞ்சினர்! தங்களுக்கு இருந்த உயர்ந்த இடம் பறிபோய்விடுமோ என்று பதைத்தனர்.  அப்போது உடன்கட்டை ஏறுதல் ஒழிப்புச் சட்டம், விதவைகள் மறுமணச் சட்டம் ஆகிய இந்துச் சட்டத் திருத்தங்கள் வந்திருந்தன. இவைகளைக் கண்டு பார்ப்பனர்கள் பதறி, இந்து தர்மமே அழியப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது நாக்பூரில் உள்ள ஜக்ருத்ரேஷ்வர் கோயில் சுவரில் ஒரு வாசகம் ஒட்டப்பட்டது. அதில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

நாக்பூரில் வாழும் எல்லா பிராமண புரோகிதர்களுக்கும் ஒரு முக்கியமான அறிவிப்பு! சாஸ்திரிகளானாலும், பண்டிட்களானாலும், அர்ச்சகர்களானாலும், நான்கு வேதங்களின் யஜ்னிக்குகளாக இருந்தாலும், அரசாங்கத்தைச் சார்ந்து இருப்பவர்களானாலும், எல்லா பிராமணர்களுக்கும் அறிவித்துக் கொள்கிறோம். இப்போது மிகப் பெரிய பதட்டம் ஏற்பட்டிருக்கிறது. 'இந்து' அரசு இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. எனவே, நாம் குறிப்பிட்ட நாளில், நமக்கு வந்துள்ள பேராபத்தைத் தடுக்க ஜகருத்ரேஷ்வர் கோயிலில், எல்லா நாக்பூர் பிராமணர்களும் திரள வேண்டும்; பகவானுக்கும் ருத்ராபிஷேகம் செய்து மந்திரங்கள் ஓதி, சடங்குகளை நடத்த வேண்டும்; இதை எந்த பிராமணராவது செய்யத் தவறினால், அவர்கள் பிராமணர்களே அல்ல என்று அறிவிக்கப்படும்."

இவ்வாறு பார்ப்பனர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து வந்ததை அவர்கள் பறைசாற்றினார்கள் என்று பால்க்கார் குறிப்பிடுகிறார்.  இந்த சூழ்நிலையில்தான் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். உதயமானது! இந்த உண்மைகளைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முதல் தலைவர், 'சர்சங்சாலக்' என்று ஏற்றிப் போற்றப்படும் அந்த 'கேஷவ பல்ராம் ஹெட்கேவர்' யார் என்ற விபரங்களை ஆராய்வோம்.

(தொடரும்..)

Pin It