முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் அணுஉலை, மணிப்பூரில் இராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம், காஷ்மீர் தேசிய இன பிரச்சனை, வடகிழக்கு மாகாணங்களில் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, தெலுங்கான பிரச்சனை, போன்றவை சமீபகாலமாக, காங்கிரசு அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளுக்கான உதாரணங்கள். ஆனால் காங்கிரசு அரசின் இந்தக் கோர முகம் என்பது ஏதோ இடையில் ஏற்பட்டதல்ல. காங்கிரசு இயக்கத்தின் துவக்கம் முதலே துரோகங்களும், தரகுதேசிய முதலாளிகளின் நலன்களும் தான் அடங்கியுள்ளன என்பதை நாம் உணர வேண்டும். வெள்ளைக்காரர்களிடமிருந்து, விடுதலைப் பெறுவதற்கு வெள்ளைக்காரர் களால் உருவாக்கப்பட்ட அமைப்பே "காங்கிரசு' எனப்படும் பேராயக் கட்சி. இந்த வரலாற்றுப் பொய்யை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நமது மாணவர்கள் பாடநூலில் படிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் அவர்களிடம் இருந்து சலுகைகளைப் பெறவும், தங்களது வணிக நலனை மேம் படுத்திக் கொள்ளவும், பார்ப்பன பனியா, பார்சி, மேட்டுக் குடிகளுக்காக உருவாக்கப்பட்ட இயக்கமே காங்கிரசுக் கட்சி. இந்த தரகு தேசிய முதலாளிகள் கோரிக்கை வைப்பதற்கு ஏதுவான ஒரு அமைப்பாக "காங்கிரசு' என்னும் இயக்கத்தினை "ஆலன் ஆக்டன் வியூம்' என்கிற வெள்ளைக்காரர் உருவக்கினார். இன்று இந்தியாவின் அடையாளங்களாக காட்டப்படும் ரிலையன்ஸ் அம்பானி, பஜாஜ், சுந்தரம் அய்யங்கார் போன்றோர்களின் முன்னோர்கள் தான் பிரிட்டிஷ் இந்தியாவிலும் முக்கியத்துவம் வாய்ந்த தொழிலதிபர்களாக இருந்தனர். வெள்ளைக்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து தரகு வேலை பார்த்த இந்தத் தொழிலதிபர்கள் அனைவரும் காங்கிரசின் முக்கிய பிரமுகர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அடிப்படையில் வணிகச் சமூகமான மார்வாடிகள் ஆளும் பிரிட்டிஷ் வணிகர்களுக்குச் சந்தை விரிக்கப் பேருதவியாக இருந்தனர். "சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும்' மன்மோகன் அக்கட்சியின் துவக்ககால முன்னோடிகளின் தொடர்ச்சி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை இந்தக் காங்கிரசு வணிகர்களுக்கு "உபரி' மட்டுமே தெரியுமேயன்றி, உழைக்கும் மக்களின் உணர்வுகளோ, வாழ்வியலோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

manmohan_singh_2501944 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரசு "இந்தியாவிற்குச் சுதந்திரம் வேண்டும்' என்கிற கோரிக்கையை முன்வைக்கவில்லை. இரண்டாம் உலகப்போரில் செருமன் உள்ளிட்ட நாடுகள் வெற்றிடையப் போகிறது, இட்லரின் தலைமையின் கீழ் இந்தியா வரப்போகிறது என்று ஆருடம் கணித்த காங்கிரசு காந்தியின் தலைமையில் "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை நடத்தியது. (இரண்டாம் உலகப் போரில் செருமன் குண்டு வீச்சின் தாக்குதலுக்கு உள்ளாகியும் சேதமடையாமல் வரலாற்று சாட்சியமாக சென்னையின் பாரீஸ் கார்னரில் "ஈச்ணூஞு ஏணிதண்ஞு' என்கிற கட்டிடம் இன்றும் இருக்கிறது). விடுதலைப் போராட்ட உணர்வுடன் காங்கிரசு தோற்றுவிக்கப்படமில்லை. அதன் செயல்பாடு களும் போராட்டக் குணங்களுடன் இருந்ததில்லை. வெள்ளையர்களுக்குத் தரகு தேசிய வேலைபார்க்கும் நிறுவனமாகவே காங்கிரசு செயல்பட்டு வந்தது. எனவே, அந்நிறுவனத்தின் ஊழியர்களான காங்கிரசுத் தலைவர்களுக்கு வியாபாரிகளுக்குரிய குணமே இருக்கும். அவர்களிடம் மக்கள் நலத்திட்டங்களை எதிர்ப்பார்ப்பது மக்களின் பேதைமைத்தனம்.

ஊழல் காங்கிரசின் பிறப்புரிமை:

மக்கள் போராட்ட உணர்வினை மழுங்கடிப்பதற்காகவே பல்வேறு ஒப்பந்தங்களைக் காங்கிரசு வெள்ளைக்கார அரசுடன் செய்தது. பகத்சிங் மரணம், நேதாஜி தலைமறைவு, எனப் பல்வேறு தலைவர்கள் மீது பிரிட்டிஷ் அரசு தொடுத்த வன்கொடுமைகளை மௌனமாக பார்த்து கொண்டிருந்தது. இன்னும் சொல்லப் போனால், இது போன்ற தருணங்களில் பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளுக்குக் காங்கிரசு துணைநின்றது. அரசியலில் ஊழல், மாற்றுக்கட்சியினரை விலை பேசுதல் போன்ற வாக்கு அரசியலின் "கழிசடை' செயல்பாடுகளை இந்தியாவிற்கு முதன்முறையாக அறிமுகப்படுத்திய பெருமை "காங்கிரசு' பேரியகத்திற்கே உண்டு.

1947 பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு, இந்தியா காங்கிரசிலிருந்த பார்ப்பனபனியா மேட்டுக்குடிகளின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பிரிட்டிஷ் ஆளுமைக்குட்பட்ட பிரதேசங்களையும் சேர்த்துத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஆசைப்பட்டது காங்கிரசு. அதற்காக, சுதேசி சமஸ்தான மன்னர்கள் பலபேருக்குக் "கையூட்டு' கொடுத்து அப்பகுதிகளை "இந்தியா' என்கிற மாயவலைக்குள் இழுத்தது. இந்த மக்கள் விரோதச் செயலை செய்தவர் "இரும்பு மனிதர்' என்று வல்லாதிக்க இந்தியாவால் அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் ஆவார். இவ்வாறாக இந்த சுதந்திர இந்தியாவை காங்கிரசு கட்டமைத்ததே "ஊழல்' மூலமாகத்தான். சென்னை மகாணத்தின் 1920 முதல் 1927 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் வீற்றிருந்தது. 1927ம் ஆண்டு "சுப்பராயன்' என்பவரை நீதிக்கட்சியிலிருந்து வெளியே கொண்டு வருவதற்"கான முயற்சியில் காங்கிரசு வெற்றி கண்டது. 1952இல் காங்கிரசு கட்சிதான் முதன்முதலில் வாக்குக்குப் பணம் கொடுக்கும் முறையைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது.

1984இல் ராஜீவ் பிரதமராக இருந்த காலத்தில் வி.பி.சிங் நிதியமைச்சராக இருந்தார். அப்போது, வரிஏய்ப்பு செய்து உலகை ஏமாற்றியவர்களான, திருபாய் அம்பானி மற்றும் இந்தி சினிமா நடிகர் அமிதாப்பச்சன் அவர்களின் மீது வி.பி.சிங் கடுமையான நடவடிக்கை எடுத்தார். இரண்டு ஊழல் பெருச்சாளிகளின் மீது நடவடிக்கை எடுத்தார் என்கிற காரணத்திற்காக அப்போதைய பிரதமர் வி.பி.சிங் காங்கிரசு கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். அதன் பிறகு ராஜீவ் காந்தியின் "போபர்ஸ் ஊழல்' உலகம் அறிந்ததே. இப்போது காங்கிரசின் ஊழல் நடவடிக்கைகள் எல்லாம் கட்சியின் கடந்த கால ஊழல் மரபின் தொடர்ச்சியே.

காங்கிரசும் இட ஒதுக்கீடு மறுப்பும்:

காங்கிரசுக் கட்சி ஆரம்ப காலத்திலிருந்தே இட ஒதுக்கீட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் முஸ்லீம் பிரதிநிதிகளும், தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதிகளும் விகிதாச்சாரா அடிப்படையில் தங்களுக்கு இடஒதுக்கீட்டை அளிக்குமாறு கோõரிக்கை விடுத்தனர். 1907ஆம் ஆண்டு மிண்டோ மார்லி அவர்களின் முயற்சியால் அதற்கான வேலை நடைபெற்றது.

ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கும், முஸ்லீம்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு கிடைப்பதைத் தடுக்க காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்கள் பல்வேறு இடையூறுகளைச் செய்தனர். இடஒதுக்கீட்டிற்காக முஸ்லீம் லீக் மற்றும் அயோத்திதாசரின் செயல்பாடுகள் அந்த காலகட்டத்தில் (1907) முக்கியத்துவம் வாய்ந்தவை. 1934லிருந்து விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு பெற்று வந்த இசுலாமியர்கள், 1947க்குப் பிறகு பிரிட்டிஷார் வெளியேறிய பிறகு, முழுமையாகத் தங்களது இடஒதுக்கீடு உரிமையை இழந்தனர்.

அதன் பிறகு, இப்போது பார்பனரல்லாத மக்களுக்கு கிடைத்திருக்கும் இடஒதுக்கீட்டிற்கு பெரியாரின் உழைப்பு அதிகம். 1930 இல் பிரிட்டிஷ் அரசு கொடுப்பதற்குத் தயாராக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இரட்டை வாக்குரிமையைக் "காந்தி' உண்ணா நிலை இருந்து பறித்துக் கொண்டார். 90களில் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்குக் காங்கிரசு உட்பட தேசிய கட்சிகளிடம் படாத பாடுபட்டார் என்பது வரலாறு.

அமெரிக்க அடாவடியும், காங்கிரசு அடிபணிவும்:

அமெரிக்க, இசுரேலிய, யூதஇன வெறியும் இணைந்து, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. யூதர்கள் "கடவுளிடம் வரம் பெற்றவர்கள்' என்கிற "பழைய ஏற்பாடு' நம்பிக்கையும், உலகம் முழுவதும் தனக்கான சந்தையாக வேண்டும் என்கிற அமெரிக்காவின் வல்லாதிக்க வெறியும் மூன்றாம் உலக நாடுகளைப் பந்தாடுகின்றன. 1992 ஆம் ஆண்டு முதல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசு அரசு இசுரேலை தனது நட்பு நாடாக அங்கீகரித்து வருகிறது. காங்கிரசு அரசில் இசுரேலின் போலிஸ் துறைத் தலைவர் "யாகோவ் லாபிடோட்' இந்தியாவில் நடைப்பெற்ற அனைத்துலக போலீஸ் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

2008 செப்டம்பர் 10ஆம் நாள், இசுரேலின் உயர் இராணுவ அதிகாரியான ஜெனரல் அலி மிர்ஸாஹி, இந்தியாவிற்கு வருகை தந்து, இந்தியாவின் முப்படை அதிகாரிகளைச் சந்தித்து, காஷ்மீர் தேசிய இனப் போராளிகளை ஒடுக்குவதற்கான வழிமுறைகளைப் பற்றி கலந்தாலோசித்துள்ளார். இசுரேலுடன், காங்கிரசு அரசு காட்டும் நெருக்கம் உலக அளவில் பாலஸ்தீனிய தேசிய இனப் போராளிகளுக்கு எதிராக இந்தியாவை அடையாளம் காட்டுகிறது. மேலும் அமெரிக்க இசுரேல் யூத இனவெறி அரசியலுக்குத் துணையாக நிற்பதன் மூலம் சிறுபான்மை அரசியலுக்கு எதிரான மனநிலையை காங்கிரசு கொண்டிருப்பது புலனாகிறது.

காங்கிரசும் காமெடி தலைவர்களும்

காமராசரை ஒழிப்பதையே தன் வாழ்நாள் பணியாக கொண்டவர் இராசாசி. திராவிட இயக்க பாரம்பரியமும், தமிழ்த்தேசிய உணர்வும் உடைய ஈ.வெ.கி.சம்பத் காங்கிரசுக் கட்சியின் தலைவரானது காலத்தின் விந்தை. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசை ஆரம்பிக்கும் போது சத்தியமூர்த்தி பவனில் சோனியாகாந்தி படத்தைச் செருப்பால் அடித்தவர்கள் அக்கட்சிக்காரர்கள். ஆனால் அவர்களும் இன்று காங்கிரசின் தவிர்க்க முடியாத அங்கமாக இருப்பது காங்கிரசின் விந்தை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி பறிக்கப்பட்டது கூடத் தெரியாமல் "நான் தான் தலைவர்' என்று பேட்டி கொடுக்கும் தங்கபாலு, இப்படியொரு கேவலமான கட்சிக்குத் தலைவராகப் பொறுப்பேற்றிருப்பதற்கு அடையாளமாக எப்போதும் "அசட்டு புன்னகையுடன்' இருக்கும் இந்நாள் தலைவர் "ஞான தேசிகன்' இவர்களைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் சற்று வலிமையாக இருக்கும் பகுதி தென் மாவட்டங்கள் தான். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசின் போக்கு அந்த மாவட்டங்களில் பெரும்பான்மையான வணிகச் சமூகமான நாடார்களைப் பாதித்திருக்கிறது. அது மட்டுமில்லாமல், இசுலாமிய வணிகர்களிடம் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஊழல், கருப்பு பண விவகாரத்தால் படித்த இளைஞர்களிடம் எதிர்ப்பு உள்ளது. ஈழப்படுகொலை, மீனவர் படுகொலை, போன்ற பிரச்சனைகளால் தமிழ் உணர்வாளர்களுக்குக் காங்கிரசின் மீது கடுமையான எதிர்ப்பு உணர்வு இருக்கிறது. கிட்டத்தட்ட காங்கிரசு என்றொரு கட்சி தமிழகத்தில் இல்லை என்பதே உண்மை நிலை. காமராசரின் மறைவிற்குப் பிறகு காங்கிரசின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகவே இருந்து வருகிறது. ஏனென்றால் அவருக்குப் பிறகு, காங்கிரசில் தலைவர்களே கிடையாது என்பது தான் நிதர்சனம். ஆரம்பத்தி லிருந்து காங்கிரசு அரசின் செயல் திட்டங்கள் அனைத்தும் பாசிசத் தன்மை உடையவை.

குலக்கல்வி திட்டம் (இராசாசி முதலமைச்சர்), இந்தித் திணிப்பு             (பக்தவச்சலம் முதலமைச்சர்), பாபர் மசூதியில் ராமர் சிலையை வைக்க அனுமதி (ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது), பாபர் மசூதி இடிப்பு (நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது), உலகமயமாக்கல் கொள்கை (நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது), அடக்கு முறைச்சட்டம் (மிசா) மற்றும் கச்சத்தீவு இழப்பு (இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது), தமிழின அழிப்பிற்குத் துணை போதல் ( ராஜீவ் காந்தி அமைதிப்படையை அனுப்புதல்)

123 அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் கூடங்குளம் அணு உலைத்திட்டம் (மன்மோகன் அரசு) போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாய்ச் சொல்லலாம்.

"இந்தியா' என்கிற நாடே கற்பிக்கப்பட்ட ஒன்று என்கிற உண்மை புரிந்தால் அந்த இந்தியாவைக் கட்டமைத்த காங்கிரசு ஒரு காலிக் கும்பல் என்பதை நாம் உணர முடியும். 67க்கு பிறகு தி.மு.க, அ.தி.மு.க தோள்களின் மீது ஏறிக்கொண்டு தன்னை உயரமாக காண்பித்துக் கொள்ளும் காங்கிரசு இப்போது தனித்து விடப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு தேர்தலில் தனித்து நின்றாலே, காங்கிரசு தமிழகத்தில் சுழியம் என்கிற உண்மை அனைவருக்கும் தெரிந்துவிடும்.

காங்கிரசிற்கு மாற்றாக தன்னைக் காட்டிக் கொள்ளும் "பாரதீய ஜனதா' தமிழகத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதிவு கூடப் பெறமுடியாத நிலையில் இருக்கிறது. ஆகவே, காங்கிரசை ஒழிப்பது மட்டுமே நம்முடைய முதல் பணி. அதை ஒழித்துவிட்டால், அது கட்டமைத்து வைத்திருக்கும் "ஏக இந்தியா' கற்பிதமும், இந்துத்துவ சிந்தனைகளும் வல்லாதிக்கக் கனவுகளும் இயல்பாகவே கலைந்துவிடும். சிறுபான்மை மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், தேசிய இனப் போராளிகளுக்கும் எதிராக நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் காங்கிரசைக் கருவறுக்க மனித உரிமை மீது நாட்டம் கொண்ட அனைவரும் களம் காணுவோம்.

Pin It