இந்தியா என்பது

பல்வேறு விலங்குகளை

அடைத்துவைத்திருக்கும் பட்டி!

இங்கு

மதவாதம், மார்க்சியம்

திராவிடம், தலித்தியம்

பெண்ணியம், பகுத்தறிவு

ஒருமைப்பாடு என்பனவெல்லாம்

வெறும்

வாக்குப் பொறுக்கும்

வசீகரச் சொற்களே!

ஒருவேளை அச்சொற்கள்

அதன் உண்மையான அர்த்தத்தில்

வேறெங்கேனும் செயல்படலாம்.

தமக்கென ‘ஒரு தேசத்தை’

உருவாக்கிக் கொள்ளத் தெரியாத

தந்தைகளும் அண்ணன்களுமே

அரசியல் கலைஞர்களாய்

அமைகிறார்கள் தமிழகத்திற்கு!

காஷ்மீர் சிக்கல் முதல்

காவிரிச் சிக்கல் வரை

தேர்தல் நோக்கிலேயே

தீர்க்க மறுக்கிறார்கள்!

நிலத்தின் தன்மைகேற்பஞு

ஓடும் நதிகளை

‘மாநிலங்கள்’ மடக்கிக் கொள்வது

மாபெரும் கொடுமை!

காவிரி, முல்லைப் பெரியாறு,

பாலாறு என

ஆறுகள்தோறும் கோளாறு!

ஒரு சிக்கலை

ஐம்பது, நூறு ஆண்டுகளானாலும்

தீர்க்கமுடியாத...மண்டுகளுக்கு

எதற்குப் பாராளுமன்றமும்

பக்கம்பக்கமாய்ச் சட்டப் புத்தகமும்?

இந்தியா என்ற ஒன்று

இருக்கும் வரை

அதற்குள் வாழும் மக்கள்

வெறும் வாக்களிக்கும்

‘ஜந்துக்களே!’

இந்திய அரசுகளின்

தலையாய நோக்கம்

“பிரச்சனைகளைத் தீர்ப்பதல்ல;

தீர்க்காமல் வைத்திருப்பதே!”

இந்தியச் சிதைக்குத்

தீ மூட்டும்வரை

விக்னேஷ்களின் நெருப்புக்கு

விடிவேயில்லை!

சரி, அது இருக்கட்டும்!

சினிமாவில் அடுத்த

சிறந்த நடிகர் யார்?

இயக்குநர் யார்? என்றறிந்து

உடனே

உங்கள் ஊருக்கு அழைத்துவந்து

ஒரு கூட்டம் போடுங்கள்!

‘கலையோ’, ’கரன்சியோ’

ஏதாவது ஒன்று

வளரட்டும்! வளரட்டும்!

Pin It