அமெரிக்க நாட்டு மியாமி பல்கலைக்கழத்தின் சாதனை!

அமெரிக்க நாட்டில் மதத்தினைப் புறந்தள்ளும் போக்கு அதிகரித்து வரும் நிலையில் மியாமி பல்கலைக்கழகம் ஓர் உயராய்வு இருக்கையினை ஏற் படுத்தியுள்ளது. உலகிலேயே நாத்திகம், மனிதநேயம் மற்றும் மதச்சார்பின்னை கல்வி உயராய்வு இருக்கையாக (Study Chair Atheist) அது ஏற்படுத்தப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.

அமெரிக்க நாட்டில் புளோரிடாவில் வசித்து வரும் 83 வயதினை எட்டியுள்ள ஓய்வு பெற்ற வணிகரும், பார்பிசன் பன்னாட்டு மாதிரிப் பள்ளியின் மேனாள் தலைவரும், சீரிய நாத்திகருமான லூயிஸ் ஜே. அப்பிக் னானி கொடையாக அளித்த 22 மில்லியன் டாலர் நிதி ஆதாரத்துடன், நாத்திக உயராய்வு இருக்கை நிறுவப் பட்டுள்ளது. பல்வேறு மனிதநேய, மதச்சார்பற்ற பணி களுக்கு நன்கொடை வழங்குவதை வாடிக்கையாக அப்பிக்னானி கொண்டிருப்பவர்.

நாத்திகர்கள் சமுதாயத்தில் வேறுபடுத்தப்பட்டு பார்க் கப்படுவதை களைவதின் நோக்கமே தம்மை நாத்திக உயராய்வு இருக்கைக்கு நன்கொடை வழங்கிட வைத்து தமது கொடை, நாத்திகம் முறையான, சட்டப்படியான வாழ்வியல் பண்பாக போற்றப்படுவதற்கான ஒரு சிறு முயற்சியே என அப்பிக்னானி கூறுகிறார்.

மியாமி பல்கலைக்கழகத்தில் நாத்திக உயராய்வு இருக்கையின் அங்கமாகச் செயல்படுவதற்கு, சான்றோர் பெருமக்களைத் தெரிவு செய்வதற்காக ஒரு குழுவினை நியமித்து, உயராய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ள முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

பெரும்பான்மையான கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் மதம் பற்றிய துறைகள் மற்றும் மதம் சார்ந்த கல்வி புகட்டும் பேராசிரியர்கள் செயல் படுவது ஒரு வாடிக்கையாக உள்ளது. தேவாலயங்கள் அளித்து வரும் நிதி மற்றும் பொருளுதவிகளால் அவை செயல்பட்டு வருகின்றன. தற்பொழுது நாத்திகம் மற்றும் மதச்சார்பின்மை படிப்பு ஏற்றுக்கொள்ளப்படும் கல்விக் களமாக மாறி வருகிறது. ஆராய்ச்சி, கொள்கைகள், கல்வி மாநாடுகள், பயிற்சி அளித்தல் என்ற நிலை யினை அடுத்து நாத்திகத்திற்கான உயராய்வு இருக்கை இப்பொழுது முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

“மியாமி பல்கலைக்கழகம் எடுத்திட்ட ஒரு துணிச்ச லான செயல்” என “கடவுள் ஒரு பொய் நம்பிக்கை (The God Delusion) நூலாசிரியரும், பரிணாமவியல் உயிரியலாளரும் நாத்திகப் பெருந்தகையுமான ரிச்சர்டு டாக்கின்ஸ் பாராட்டியுள்ளார். மற்ற பல்கலைக்கழகங் களும் இப்படி நாத்திகப் படிப்பை அளித்திட முன்வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“மத விலங்கினை உடைத்திடும்” நோக்கத்தில் நாத்திக உயராய்வு இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது அதி முக்கியத்துவம் வாய்ந்தது’ எனவும் ரிச்சர்டு டாக் கின்ஸ் பிரிட்டனிலிருந்து தொலைபேசி வாயிலாக செவ்வி மூலம் தெரிவித்துள்ளார்.

பி இ டபிள்யூ (PEW)) ஆராய்ச்சி மய்யம் நடத்திய ஆய்வின் மூலம், அமெரிக்காவில் மதச்சார்பற்றோர் என வெளிப்படுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை அண்மைக்கால குறுகிய இடைவெளியில் மிகவும் அதிக மாக உயர்ந்துள்ளது எனத் தெரிய வருகிறது. அமெரிக் காவின் மொத்த மக்கள் தொகையில் மதச் சார்பற் றோரின் எண்ணிக்கை 2007ஆம் ஆண்டில் 16 விழுக் காடு என இருந்த நிலை, 2014 ஆம் ஆண்டில் 23 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இளையோரில் பலர் மதநம்பிக்கையில் ஆர்வம் அற்றவர்களாக உள்ளனர். புத்தாயிரம் ஆண்டு அறிபருவர் (adult)) எண்ணிக்கை யினரில் 35 விழுக்காட்டினர் தம்மை நாத்திகர், கடவுள் கவலையிலார் அல்லது மத நம்பிக்கை அற்றோர் எனத் தெரியப்படுத்தியுள்ளனர்.

‘மதச்சார்பற்ற அமெரிக்கர்கள் (Secular Americans)’ எனும் மனிதநேய அமைப்பினர், அரசியல் பாதையில் பயணிக்க முடிவெடுத்துள்ளனர். அடுத்த மாதத்தில் அமெரிக்காவில் கடவுள் நம்பிக்கையற்றோர், தலைநகர் வாசிங்டனில் உள்ள லிங்கன் நினைவிடத் தில் பகுத்தறிவுப் பேரணி (Rally of Reason) ஒன்றை நடத்தித் தமது எண்ணிக்கை வலிமையினை அமெரிக்க காங்கிரசுக்குக் காட்டி, அரசையும் மதத்தையும் (கிறிஸ்தவ மதம்) பிரிக்கக்கோருவதாக உள்ளனர்.

‘நாத்திக உயராய்வுப் படிப்பு’, என்பதற்கான வித்து 15 ஆண்டுகளுக்கு முன்பு முளைத்திட ஆரம்பித்தது ‘மியாமி பல்கலைக்கழத்தின் தத்துவப் பேராசிரியர் ஹார்வி சீகல் (Harvey Siegel), நாத்திகக் கொடையாளர் லூயிஸ் அப்பிக்னானியும் கலந்து பேசி அன்றே முடிவெடுத்தனர். அமெரிக்க மக்கள் மத்தியில் நாத்திகம் பற்றிய ஒருவித அவமதிக்கும் பார்வையும், இழித் துரைக்கும் போக்கும் நிலவிடும் நிலையில், பல் கலைக்கழக உயராய்வு இருக்கைக்கு ‘நாத்திகம்’ எனும் பெயர் வைத்திருவதில் அதிகார நிலையாளர் களுக்குத் தயக்கம் நிலவிய சூழலில், தத்துவப் பேராசிரியர் ஹார்வி சீகல் தான் நாத்திகம் பற்றி எடுத்துரைத்து, விளக்கிச் சொல்லி ‘நாத்திக உயராய்வு இருக்கை’ என பெயர் ஏற்பட காரண மாக இருந்தார்.

‘நாத்திகம்’ பெயர் பற்றி முடிவெடுக்கையில், பல் கலைக்கழகத்தினரை ஒத்துக்கொள்ள வைத்திட மதம் சார்ந்த படிப்புகளில் கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறை யினையே பல்கலைக்கழகம் மேற்கொள்ளலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டது. மதம் சார்ந்த படிப்புகளில் எந்த ஒரு மதத்தினையும் வலியுறுத்தும் வகையில் படிப்பு முறை இல்லாதது போலவே-நாத்திகப் படிப்பி லும், நாத்திகக் கொள்கையினை வலியுறுத்திடும் தன்மை இல்லாதவாறு நாத்திக உயராய்வு இருக்கை அமைக் கப்படலாம் எனப்பரிந்துரை வழங்கப்பட்டது. “நாத்திகம்” பெயர் கொண்டு உயராய்வு இருக்கை ஏற்படுத்தப் படுவதற்கு நாத்திகக் கொள்கையாளர்கள் எடுத்திட்ட முயற்சி போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.

அமெரிக்காவில் நாத்திகம், மதச்சார்பின்மை, அய்யுறவியல் (skepticism) பற்றிய புரிதல் மற்றும் போற்றுதல் மக்களிடையே குறிப்பாகக் கல்வி நிலையங்களில் அதிகரித்து வருகிறது.

தென் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பிட்சர் கல்லூரியில் அய்ந்து ஆண்டுகளுக்கு முன்னரே ஆயிரம் மாணவர்களைக் கொண்டு திறந்த சிந்தனைக் கலைப் பள்ளியினை நடத்தி வருகின்றனர். இந்தப் பள்ளியில் பில் சக்கர்மேன் (Phil Zuckerman) எனும் மதம் பற்றிய சமூகவியலாளர் மற்றும் மதச்சார்பின்மை பற்றிய ஆறு பேராசிரியர்கள் நான்கு பாடப் படிப்பினை நடத்தியுள்ள னர். இத்தகைய பாடப்படிப்புகளுக்கு மாணவர்களி டையே ஆர்வம் பெருகி வருகிறது.

சென்ற ஆண்டு நடைபெற்ற ‘மதச்சார்பின்மை & அய்யுறவியல்’ பாட வகுப்பில் சேர வந்த மாணவர்களில் பெரும்பாலா னோரை, அடிப்படைக் கட்டமைப்பு வசதி இல்லாத காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்ட நிலை இருந்தது. நாத்திகச் சான்றோர் சிலர் மதமின்மை மற்றும் மதச் சார்பின்மை ஆராய்ச்சித் தொடர்பகம் எனும் அமைப் பின் கீழ் தங்களது நான்காவது மாநாட்டினை ஜூரிச் நகரில் நடத்திட உள்ளனர். ‘மதச்சார்பின்மை மற்றும் மதமின்மை’ எனும் ஆராய்ச்சி இதழினையும் அவர்கள் நடத்தி வருவது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

சமூகவியலாளர் சக்கர் மேன் மதச்சார்பற்ற படிப் பிற்கான உண்மையான தேவை ஏற்பட்டுள்ளது எனக் கூறுகிறார். மேலும் ‘மதச்சார்பின்மைப் பண்பு அதி கரிப்பது தொடரும் நிலையில், அமெரிக்காவில் மட்டு மின்றி, உலகில் அனைத்து நாடுகளிலும் உள்ள மதச் சார்ப்பற்ற மக்கள், மதச்சார்பற்ற பண்பாடு, மதச்சார்ப் பின்மை ஆகியவைகளை ஒருங்கிணைத்து கொள்கை சார்ந்த அரசியல் அமைப்பு தொடங்கிட வேண்டும்’ எனும் கருத்தினையும் அவர் தெரிவித்து உள்ளார்.

உலகம் முழுவதிலும் நாத்திகம், மதச்சார்பின்மை, மதமின்மை கருத்துடனான வாழ்வியல் பண்பாடு பெருகி வருகிறது என்பதற்கு “நியூயார்க் டைம்ஸ்” இதழில் வெளிவந்த மேற்குறிப்பிட்ட செய்திகளே சான் றாக அமைந்துள்ளன. வருங்காலம் நாத்திகம் தழைத்துச் செழித்தோங்கும்-மனிதநேயம் போற்றப்படும் காலமாக உருவாகும் என்பது உறுதியாகி வருகிறது.

Pin It