கலைஞன் பதிப்பகம் தன் 60 ஆம் ஆண்டு பதிப்புப் பணியை முன்னிட்டு 60 நூல்களை மலேசியா கோலாலம்பூரில் வெளியிட்டது. அதில் என் சிறுகதைத் தொகுப்பு ‘குகைகளின் நிழலில்' ஒன்று.  அதில் 50 பேர் தமிழக எழுத்தாளர்கள். பத்துப்பேர் மலேசியா சிங்கப்பூர் எழுத்தாளர்கள். 50 எழுத்தாளர்களையும் கலைஞன் பதிப்பகம் கோலாலம்பூருக்கு அழைத்துச் சென்றிருந்தது.

எனது தொகுப்பில் பல கதைகள் மலேசியா பின்னணிக்கதைகள் என்பதை விசேசமாகச் சொல்லலாம். 2012இல் மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவல் பட்டறை ஒன்றை நடத்த என்னை அழைத்திருந்தது. அதன்பின் மலேசிய பயண அனுபவம், நாவல் பட்டறை அனுபவம், படித்த மலேசியா எழுத்தாளர்கள் நூல்கள், சந்தித்த எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் என்று 25 கட்டுரைகள் எழுதியிருந்தேன். அது “ஓ.. மலேசியா" என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன். நூல் இன்னும் வெளியாகவில்லை.

மலேசியப் பின்னணி நாவல் ஒன்றையும் எழுதினேன் “மாலு" (உயிர்மை பதிப்பக வெளியீடு சென்னை). அதில் டூரிஸ்ட் விசாவில் கோலாலம்பூர் சென்று வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனின் தலைமறைவு வாழ்க்கை பற்றிச் சொல்லியிருக்கிறேன். அகிலன் மலேசியாவில் ஒரு மாதம் தங்கியிருந்து எழுதிய “பால் மரக்காட்டினிலே " நாவல்   மலேசியப் பின்னணி நாவல் ஆகும்.

“ஓ.. மலேசியா “மாலு" ஆகிய நூல்களில் இடம் பெறாத மலேசிய அனுபவங்களை  சில சிறுகதைகளாகவும் எழுதினேன். அந்தச் சிறுகதைகள் ‘"குகைகளின் நிழலில்" தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அந்தத் தொகுப்பில் பல கதைகள் மலேசியப் பின்னணிக்கதைகள் என்பதை விசேசமாகச் சொல்லலாம். ஆனால் முழுத்தொகுப் பையும் அப்படி அமைத்திருக்கலாம் என்று நினைத்தேன்.

கோலாலம்பூர் -அந்த விழாவில் தமிழகத்திலிருந்து சென்றவர்களில் மூத்த எழுத்தாளர்கள் கர்ணன், உதயை மு. வீரய்யன், ப.முத்துக்குமாரசாமி மற்றும் பத்திரிகைகளைச் சார்ந்த தினமலர் கவுதம சித்தார்த்தன், தினமணி இடைமருதூர் மஞ்சுளா, குமுதம் மணா, சங்கொலி அருணகிரி, தினமலர் மலர்வதி, தினகரன் பிரபு சங்கர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்த கமலாலயன், உதயசங்கர், உமர் பாரூக், ம.காமுத்துரை மற்றும் எஸ். சங்கரநாராயணன்.

சாருகேசி, பானுமதி பாஸ்கோ, ராகவன் தம்பி, உடுமலை ரவி, கவிப்பித்தன், பாரதி வசந்தன், சப்தரிஷி போன்றோரும் இடம் பெற்றிருந்தோம். வெளியிடப்பட்ட தங்கள் நூல்களின் அனுபவங்களை எழுத்தாளர்கள் பகிர்ந்துகொண்டார்கள். மலேசிய கல்வித்துறையைச் சார்ந்த கிருஷ்ணன் மணியம்,

குமரன், மன்னர் மன்னர், மணிவாசகம் போன்றோரின் உரைகளில் மலேசிய இலக்கியம் பற்றிய பல பரிமாணங் களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.  மலேசியா மலாக்கா எழுத்தாளர்களின் 50 கவிதைகளை மொழி பெயர்த்து தமிழில் செம்பருத்தி தாமரை சந்திப்பு என்ற தலைப்பில் நூலாய் வெளியிட்டதையும் குறிப்பிடலாம். கொங்கு நாட்டினரை விருந்தோம்பல், உபச்சாரத்திற்கு பெருமை கொள்ளும் விதமாய் சொல்வார்கள்.

மலேசியா அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது என்று சொல்லும் அளவு பலமான உபச்சாரம் இருந்தது.   அடுத்தத் தொகுப்பில் மலேசியா அனுபவ  முத்திரையை அழுத்தமாகப் பதிக்கவேண்டும் என்ற ஆசை பிறந்தது. “பால் மரக்காட்டினிலே  “மாலு" நாவல்கள் போல் 50 மலேசியப் பின்னணி நாவல்கள் வெளிவரவேண்டும் என்ற விருப்பத்தை அந்த மாநாட்டில் நான் தெரிவித்தேன்.

அடுத்த குதிரைப் பயணத்திற்கு  கலைஞன் பதிப்பகம் தயாராகி வருகிறது. அதன் 60 ஆம் ஆண்டு பதிப்புப் பணியை முன்னிட்டு 60 தமிழ்க்கவிஞர்கள் பற்றிய  நூல்களை இவ்வாண்டில்  வெளியிட ஆயத்தம் செய்து வருவதைக் குறிப்பிடலாம்.

Pin It