தமிழ் இலக்கிய உலகில் நாவல் வடிவம் என்பது ஒரு நூற்றாண்டைக் கடந்து இயங்கி வருவதான ஒரு வகை இலக்கியம். இவ்விலக்கியம் தனிமனிதன் மற்றும் சமூகத்தோடு கொண்டுள்ள உறவுகளை ஆராயும் நோக்கில் படைப்பாளரின் பல்வேறு முயற்சிகளையும் ஆக்கங்களையும் உடைய தாகப் புதிய பரிமாணங்களைக் கண்டடைவதாக உள்ளது.

சமூக நிறுவனங்களான சமயம், அரசியல், பொருளாதாரம், குடும்பம், முதலான அனைத்தையும் நாவல்கள் வழி அறிய முடியும் என்பதால் இச்சமூக நிறுவனங்களில் அடிப்படை நிறுவனமான குடும்பம் பற்றிய தேடலும் அதற்கான இடமும் எத்தகையது என்பதை நோக்கமாகக் கொண்டு ஆசிரியரின் ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட நூலாகும்.

குடும்ப நாவல் என்பது குடும்பத்தின் எல்லைக் குள்ளேயே அடங்கிய நிகழ்ச்சிகளை மையக் கருத்தாகக்கொண்டு எழுதுவது என்றாலும் இதைச் சமூக நாவல்களுக்குள் அடக்கிவிடுவதும் உண்டு என்பதால் இதற்கான வேறுபாடுகளைத் தமிழறிஞர் கி.வ.ஜகந்நாதன் குடும்ப நாவல், சமூக நாவல் எனப் பிரித்தறியச் சொல்கிறார்.

குடும்ப நாவல்களில் வெவ்வேறு சூழ்நிலைகளும் நில வேறுபாடுகளும் மிகுதியாக இல்லாமலிருந்தாலும் வெவ்வேறு மன இயல்புகளும் அதனால் விளையக்கூடிய சிக்கல்களும் இருக்கும் என்பதான ஒரு தனிவரையறை குடும்ப நாவலுக்கு வகுக்கப் பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமுதாயத்தின் சிறிய அமைப்பாகிய குடும்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை மையக் கருத்தாகக் கொண்டு இலக்கிய உணர்வோடு கதைகள் புனைந் தவர்கள் அநேகர் என்று ஆய்வுலக இரட்டையர் களாக அறியப்பட்ட சிட்டியும் சிவபாத சுந்தரமும் நாவலில் குடும்பப் பதிவுகள் பற்றிக் குறிப்பிடு கின்றனர். புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ என்ற குறுநாவல் தொடங்கி, பல நாவல்கள் குடும்பத்தை மையமாகக் கொண்ட பதிவுகளே என்று நூலில் குறிப்பிடுகிறார்.

தமிழின் முதல் நாவலாக வேதநாயகரின் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ அறியப்படுகிறது. நாவல் உலகில் வேதநாயகம் முன்னோடியாக அறியப்பட்டாலும் அவர் காலத்தில் நாவல் படைப் பதற்கு என்று நிறுவப்பட்ட வரையறைகளோ ஒழுங்குகளோ கிடையாது என்பதால் மக்களுக்குப் பொழுதுபோக்கினையும், அறக்கருத்துகளைப் போதிப்பதையும் தனது இரு நோக்கங்களாகக் கொண்டிருந்ததாலும் செறிவான அமைப்பை அவரது நாவல்கள் பெறவில்லை என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது.

பிரதாப முதலியார் சரித்திரத்திற்குப் பிறகு ஏழாண்டுக் கால இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த இராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம் அதன் பிறகு வந்த மாதவய்யாவின் பத்மாவதி சரித்திரம் ஆகிய நாவல்களில் குடும்ப அமைப்புகளும் அதில் ஏற்படும் சிக்கல்களும் பதிவாகியுள்ளதாகக் குறிப் பிடுகிறார்.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்திற்குப் பிறகு எழுதி வந்த மு.வரதராசனார், அகிலன், நா.பார்த்தசாரதி, தொ.மு.சி. ரகுநாதன், சி.சு.செல்லப்பா போன்ற எழுத்தாளர்கள் குடும்ப அமைப்பிற்குள் நிகழும் பல்வேறு சிக்கல்களை நாவல்களாகப் படைத்துள்ளனர்.

கு.சின்னப்பபாரதியின் ‘சங்கம்’, பொன்னீலனின் ‘கரிசல்’ போன்ற நாவல்கள் தொழிலாளர்களின் தொழில் சார்ந்த அவலங்களையும் அவர்களின் குடும்ப நிலைப்பாடுகளும், குடும்ப இயக்கத்தைப் பாதிக்கின்ற வகையில் ஏற்படுகின்ற கூலித் தொழி லாளிகள், முதலாளிகள் இவர்களிடையே ஏற்படு கின்ற முரண்பாடுகள் போராட்டங்கள் பற்றியும் பேசுவதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

பண்பாடும் நாகரிகமும் வளர்ந்த குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, இன்னொரு சாராரிடம் வறுமை பொருளாதாரத் தேவை களுக்காக ஏற்படுகின்ற சிக்கல்களும் குடும்பத்தைப் பாதிக்கின்றன. இதற்கான அனுபவத்திற்கும், புரிதலுக்கும் ஏற்ப படைப்புப் பொருளாக நாவல் உருவாக்கப்படுவதும் உள்ளது. நாவல்கள் சமூகப் புரிதல்களுக்கான ஊடகமாக உள்ளது. ஹெப்சிபா ஜேசுதாஸ், வை.மு.கோதை நாயகி அம்மாள் போன்ற பெண் படைப்பாளர்கள் நாவல் உலகில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் குடும்பத்திற்குள் பெண்கள் படும் இன்னல்களையும் பணிச்சுமை, பெண் மீதான சமூகப் புறக்கணிப்புகள் பற்றியும் தம் நாவல்களில் படைத்துள்ளதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அறுபதுகளுக்குப் பிறகு ஜெயகாந்தனின் நாவல்களில் குடும்பத்திற்குள் பெண் முன்னெடுத்துச் செல்லும் உரிமை சார்ந்த சிக்கல்கள், பெண்ணின் முற்போக்கான செயற் பாடுகள் பெண்ணுக்கு ஏற்படும் பாலியல் விபத்துக்கள், பாலியல் நடத்தைகள் ஆகியவற்றின் காரணமாகக் குடும்பத்திற்குள் ஏற்படும் சிக்கல்கள், குடும்பச் சிதைவுகள் நாவல்களில் முன்வைக்கப்பட்டுள்ள தையும் எண்பதுகளுக்குப் பிறகு குடும்பம் தொடர்பான பதிவுகள் தமிழ் நாவல்களில் படைக்கப்பட்டிருப் பதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

குடும்பம் பற்றிய சில பொது வரையறை களைக் கூறிச் செல்லும் போது, “குடும்பம் என்பது தலைமுறை தலைமுறையாகப் பண்பாட்டு மரபு உரிமையைக் கொண்டு செல்லும் ஒரு செயலி’ என்று சுட்டப்படுவதைக் குறிப்பிடுகிறார்.

குடும்பம் பற்றிய மார்க்சியர்களின் வரை யறுப்புகள் வேறுபட்ட கருத்தாக்கங்களை உடைய தாகவும் குடும்பம் என்பது சமுதாயச் சாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது தவிர வேறில்லை என்பதும் வர்க்க சமுதாயத்தில் குடும்பம் ஒரு வர்க்கத் தன்மையைப் பெறுவதாக ஒரு கருத்தும் நூலில் விளக்கப்படுகிறது.

குடும்பத்தின் மூலத்தோற்றம் ஆராயப்படும் வகையில் ‘மனிதனின் கூட்டு வாழ்க்கை என்பது மனித இனத்தின் கட்டாயத் தேவையாக இருக்கின்ற போது மனிதன் தன் தேடலின் காரணமாகத் தங்கள் இனத்துக்கான சில விதிமுறைகளுடன் தோற்று விக்கப்பட்டதுதான் குடும்பம்’ என்பதான மானிட வியலாளரின் ஆய்ந்தறிந்த கூற்றின் மூலம் நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.

புராதன மக்கள் கூட்டத்தில் குடும்ப அமைப்பு இல்லாமலிருந்ததும், தாய்வழிச் சமுதாயத்தில் குழுத் தன்மை கொண்டதாகவும் காலப்போக்கில் நிலைத்த உறவுகளுக்கிடையே வாரிசுரிமை, குடும்ப நெறிமுறைகள் வழியே வலுவான குடும்ப அமைப்பு ஏற்படுவதும் நூலில் விளக்கப்பட்டுள்ளது.

பெண் கற்பு என்ற கருத்தாக்கம் தாய்வழிச் சமூகம் மறைந்து தந்தை வழிச் சமுதாயத்தில்தான் ஏற்பட்டது. தாய் தந்தையர்கள் தங்கள் குழந்தை களைப் பேணுவதும் வாரிசுரிமை வழங்குவதும் குறிப்பாக குடும்பச் சொத்தை முன்னிறுத்திய செயலாகவே உள்ளது.

நிலவுடைமைச் சமுதாயத்தில் ஆண் தலைமையின் கீழ்க் குடும்ப அமைப்பின் இயக்கம் அமைந்ததால் நிலவுடைமை ஆதிக்கத்தையும் முதலாளித்துவத்தையும் கட்டிக் காப்பதற்கேற்ற வாய்ப்புச் சூழல்கள் மிகுதியாக அமைந்ததையும் அதன் காரணமாகவே ஆதிக்க சக்திகள் குடும்பம் என்ற அமைப்பை மிகவும் கவனமாகக் கட்டிக் காத்து வந்ததையும் குடும்ப அமைப்புகளின் வழியே அறியமுடிவதாகக் கூறுகிறார்.

குடும்ப அமைப்பு என்பது இடைக்காலத்தில் வேளாண், கைத்தொழில், பொருளுற்பத்தி, பதப் படுத்துதல் என்று குடும்ப உறுப்பினர்களிடையே வளமான இயக்கமாக இயங்கி வந்தது. ஆனால், தற்கால சமூகச் சூழல்கள் பல அறிவியல் மற்றும் புதிய தொழில்நுட்பக் காரணங்களால் மாறியுள்ளன. கல்வி, பொருளாதாரம் இவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் குடும்ப அமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நிலவுடைமைச் சமுதாயத்தில் பெண்களால் செய்யப்பட்டு வந்த குடும்ப அலுவல்கள் இன்று பல்வேறு செயலிகளாலும் நிறுவனங்களாலும் புரியப்படுவதை நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தியா முழுவதும் இந்துப் பண்பாட்டின் ஆதிக்கமும் செல்வாக்கும் இருந்தாலும் இந்துப் பண்பாடு தன் வலுவான நெறிமுறைகளால் இந்தியக் குடும்பங்களைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தாலும் மாறி வருகின்ற புதிய சமூக மாற்றச் சூழலுக்கேற்ப அவை தகர்க்கப்பட்டு வருவதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

குடும்ப அமைப்பு சிதைவடையக் காரணமான அகக்காரணிகள், புறக்காரணிகள் நூலில் விரிவாகக் காணப்படுகின்றன.

குடும்பம் சமுதாயத்தின் முக்கியமான அங்கமாக இருப்பதால் குடும்பமும் பொருளாதாரத்தையே முதன்மையாகக் கொண்டு இயங்க வேண்டியுள்ளது. இதன் பொருட்டு மார்க்சியர்கள் பொருளாதாரமே சமூகத்தின் அடித்தளம் என்று வலியுறுத்துவதும் நூலில் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் அனைத்து வகைத் தேவைகளுக்கும் பணமே முதற்காரணியாக இருப்பதால் அதைத் தேடிய வாழ்க்கைப் போராட்டமும் பணப்பற்றாக்குறை அல்லது பணமின்மை போன்ற காரணங்களால் குடும்பம் எதிர்கொள்கின்ற சிக்கல்களையும் சிதைவு களையும் சமூகவியலாளர்கள் பதிவு செய்தாலும் படைப்பாளர்கள் நாவல்கள் வழி அவற்றைச் சித்திரிப்பதும் உள்ளது. எழுபதுகளிலும் அதற்குப் பிறகுமான காலத்தில் பொருளாதாரச் சிக்கல் களால் குடும்பம் எதிர்கொண்ட சிதைவுகளை அறியும் ஆதாரங்களாக வேள்வித்தீ, கடல்புரம் போன்ற நாவல்களை நூலாசிரியர் எடுத்துக் காட்டுவது உணரத்தக்கது.

பழமையை உட்செறித்த சமுதாயம் புதிய தொழில்நுட்பத்துடன் போட்டி போட முடியாமல் சிதைந்து போவதை வண்ணநிலவனின் ‘கடல் புரம்’ எடுத்துக்காட்டுவதை நூலாசிரியர் குறிப் பிடுகிறார். குடும்பப் பொருளாதாரத்தில் இயற் கையும் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையின் மாறுபாட்டால் பல குடும்பங்கள் சிதைவதையும் நாவல்கள் படம் பிடிக்கின்றன. இவ்வகையில் வேள்வித்தீ, நைவேத்தியம் போன்ற குறிப்பிடத் தக்க நாவல்கள் இடம்பெறுகின்றன.

குடும்ப வறுமையின் காரணமாகப் பாலியல் தொழிலில் பெண் ஈடுபடும் போக்கையும் அத் தொழில் இழிதன்மையுடையதாகக் கருதப்படுவதால் குடும்பச் சிதைவு ஏற்படுவதைக் கண்ணதாசனின் ‘விளக்கு மட்டுமா சிவப்பு?’ நாவல் அடையாளம் காட்டுகிறது. தொழிலாளர் போராட்டங்களும் குடும்ப அமைப்புகளைப் பாதித்துச் சிதைத்ததை கு.சின்னப்பபாரதியின் ‘சங்கம்’ பாவண்ணனின் ‘சிதறல்கள்’ பொன்னீலனின் ‘புதிய தரிசனங்கள்’ போன்ற நாவல்கள் சித்திரிக்கின்றன.

மாறிவரும் உலகமய சூழலில் மனிதனின் நுகர்வு என்பது தனது அடிப்படைத் தேவைகளை விட இன்னபிற வசதிகளையும் இன்பங்களையும் அடையப் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மனிதனைக் கவர்ந்து வருகின்றன. குறிப்பாக இளைய தலைமுறைகள் புதிய தொழில்நுட்பங்களால் வெகுவாகக் கவரப்படுகின்றனர். ‘தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துக்கேற்ப சுரண்டப்படும் அளவும் கூடுகிறது’ என்ற கூற்றுக்கேற்ப உற்பத்திப் பண்ட நுகர்வால் நுகர்வோரின் உழைப்பும் வருவாயும் சுரண்டப்பட்டு அதன் காரணமாகக் குறைந்த வருமானமுள்ள அடித்தட்டு மக்களின் குடும்பங்கள் சிதையும் வாய்ப்புக்கள் உருவாகின்றன. வரதட்சணை, பெண் சிசுக் கொலைகளும் குடும்பச் சிதைவுக்குக் காரணங்களாயுள்ளன. திருமணத்துக்கு முன்னும் பின்னும் ஏற்படும் தற்கொலைகள், கொலைகள் போன்றவை பெரும்பாலும் வரதட்சணைக் காரணங் களாலேயே ஏற்படுகின்றன. இதன் போக்குகளை இராஜம் கிருஷ்ணனின் பல நாவல்கள் படம் பிடித்துள்ளதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். சமூகத்தில் விரைந்து பரவி வரும் நுகர்வுப் பண்பாடே வரதட்சணை என்னும் சமூக நோய் வளருவதற்கு மூல காரணமாக விளங்குகிறது என்னும் உண்மை ஆணித்தரமாகப் பல நாவல்கள் மூலம் விளக்கப் படுகின்றன.

பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் தவிர தனி மனிதரின் உளச்சிக்கல்களும் குடும்ப அமைப்பைப் பாதிக்கின்றன. கற்பு என்பது மனிதப் பண்பாடு களில் ஒன்றாகக் கருதப்படுவதும் இதற்குக் காரண மாகிறது. பண்பாடு என்பது மனிதனை இடை யறாது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கத் துணை புரிந்தாலும் அதையும் மீறிய பாலுணர்வு அவரை வழி நடத்துகிறது என்பதை ‘பெட்ராண்டு ரஸ்ஸல்’ கூறிய உண்மைக் கூற்றின் மூலம் ஆசிரியர் எடுத்தியம்புகிறார்.

பாலுணர்வு பற்றிய கண்ணோட்டங்களும், அதன் விளைவாக ஏற்படும் சமுதாயப் போக்குகளும், தனிமனிதப் பாதிப்புகளும், குடும்ப அமைப்பில் ஏற்படும் சிக்கல்களும் நாவல்களில் சித்திரிக்கப்படுகின்றன. ரகுநாதனின் ‘கன்னிகா’, எஸ்.சங்கர நாராயணனின் ‘மற்றவர்கள்’ ஐசக் அருமைராசனின் ‘வலிய வீடுகள்’ போன்ற நாவல்களை ஆசிரியர் குறிப்பிடுகிறார். எழுபதுகளுக்கு பிந்தைய நாவலான ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ எம்.வி.வெங்கட்ராமனின் ‘வேள்வித்தீ’ இவ்வகையில் ஆசிரியரால் ஆராயப்படும் நாவல்களாக உள்ளன.

‘மனிதனின் உணர்வு நாட்டங்களுக்கும் சமூகம் கட்டிக் காக்க விரும்பும் கட்டுக் கோப்புகளுக்கும் இடையே காணப்படும் முரண்கள் தவிர்க்கவியலாத சங்கடங்களை ஏற்படுத்துகின்றன’ என்ற உண்மை களைப் பல நாவல்கள் எடுத்தியம்புகின்றன. சமுதாயத்தில் குடும்ப அமைப்புகள் குலையாமல் காக்க எத்தனை விதமான எச்சரிக்கை முயற்சிகள் எடுத்தும் பயனில்லாமல் போவது தனிமனித உணர்வுகளின் நாட்டங்களைப் பொறுத்து என்பதை ஆசிரியர் மென்மேலும் எடுத்துரைப்பது புலனாகிறது.

சமூகத்தில் ஆணுக்கு வழங்கப்படுவதைப் போன்ற சலுகைகளும் வாய்ப்புகளும் பெண் களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆண் பெண்ணிடையே ஏற்றத்தாழ்வுகள் நிகழும்போதும், பெண் தனக் கான உரிமை கோரி முழங்கும்போதும் ஆணின் தன்முனைப்பு காரணமாகவும் குடும்பங்கள் சிதை வடைகின்றன. இந்தியக் குடும்பங்களில் கணவன் - மனைவியிடையே சமநிலையென்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் குடும்பத்தில் வேண்டாத போராட்ட உணர்வுகள் வெடித்துக் கிளம்புகின்றன. பெண் தன் உரிமையை நிலை நாட்ட முடியாதபோது அவமானமடைகிறாள். இதன் காரணமாக மணமுறிவுகள் ஏற்பட்டு மணவிலக்குகள் பெறப்படுகின்றன. இராஜம் கிருஷ்ணனின் ‘வீடு’ என்ற நாவல் இதனை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

பாலியல் உரிமை, பொருளாதார உரிமை குறித்த சிந்தனைகள் பெண்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. ஆயினும், இது ஓர் ஆணின் தகுதியைப் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்று எதிர் பார்க்கப்படுவதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டி யிருப்பது ஆணின் உரிமை என்பது பெண்ணை விட அதிக அளவில் சமுதாயத்தில் தன்மதிப்போடு இருப்பதையே காட்டுகிறது. ஆயினும், ஆசிரியர் நூல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நாவல்கள் அனைத்தும் ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமான பதிவுகளாகக் காண இயலாது என்கிறார். மனித சமூகம் என்பது பல சாதி மதப் பிரிவுகளை உடையது. தனிமனித ஆளுமைகள் குடும்ப அரசியலாக உருவெடுக்கிறது.

சமூகப் புறக்கணிப்புகள் ஏதுமின்றிக் குடும்பம் தன்னைத் தகுதியாக்கிக் கொள்வது அவசியமாகிறது. குடும்பம் என்ற அமைப்பு சமூக நிறுவனத்தைத் தாங்கும் தூணாக உள்ளது. சமூகக் கட்டுக்கோப்புகள் மாறிவரும் காலச் சூழலில் குடும்ப உறுப்பினர்களிடையேயும் குறிப்பாக இளைய தலைமுறைகளிடையேயும் மனவேறு பாட்டினை ஏற்படுத்துகிறது. நூலாசிரியர் தமிழ் நாவல்களை எடுத்துக்கொண்டு ஆய்வு நோக்கில் குடும்பச் சிதைவுக்கான உளவியல் காரணங்களையும், புறக்காரணங்களையும் பகுத்துக் கூறியுள்ளது ஆசிரியரின் முயற்சியாகவும் தேடலாகவும் உள்ளது. இத்தகைய ஆய்வுகள் தமிழ் நாவல்களிடையே வருவது சமுதாய நீரோட்டத்தில் ஒரு பொதுவான புரிதலில் மட்டுமல்லாமல் பல காரணிகளைத் தேடவும் வைக்கிறது.

தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள் - ஆய்வு நூல்

முனைவர் அ.குணசேகரன்

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்

Pin It