சிட்டுக்குருவிகள் சேர்வதை
பார்த்திருக்கலாம் நீங்கள்
அணில்கள் கூடுவதும்
எப்பொழுதாவது கண்ணில் பட்டிருக்கலாம்

பூனைகள் போகிப்பது கொஞ்சம்
பகிரங்கமானது
ஜீவராசிகள் புணர்வது
சாலவும் இயல்பானது

பின்னே எப்படி
நவீன கவிதையில் இல்லாது
போயிற்று?

கடைதிறப்பு படிக்காது
கவிதை எழுதுகிறார்கள்
ஆண்டாள் பாசுரம் அறியாது
பாலியல் பேசுகிறார்கள்
சங்கம் தெரியாது
இலக்கியம் செய்கிறார்கள்?

என்னேடா என்னேடா
இலண்டனும் பாரிஸ§மா
தமிழ்க் கலைஞன் லட்சியம்!

மானஸரோவர் இருக்கிறது
தேக்கடி இருக்கிறது
மைசூர்க் காடுகள்
முக்கடல் சங்கமம்
இன்னும் நிறையவே
இவை காணாமல்
என்ன எழுதுவாய்?

கண்டதும் கொஞ்சம்
கேட்டதும் குறைவு
கற்றதும் சிறிது
கவனிப்பதும் அபூர்வம்
பின்னே எப்படி எழுத வரும்?

ஸ்தல புராணக் கதைகள்
அளவுக்குக்கூட
சொல்ல முடியாது நவீன
இலக்கியத்தை
சொலவடைகளின் கவித்துவத்துக்கு
கிட்டே வராது இன்றைய கவிதை
தென்னாட்டுப் பழங்கதைகளே
தாழ்விலை
நவீன சிறுகதைகளைவிடவும்
தினத்தந்தியில் காணும் தமிழ்
வாழ்வுகூட
சமகால எழுத்தில் இல்லாமல்
போனதேன்?

கொஞ்சமாய் விளைந்து
கொட்டாரம் நிறையாது
கணிசமாய் இருப்பதுதான்
கருவூலம்
சித்தத்தைக் கடந்தவன்தான்
சித்தன்
எழுத்தை ஆள்பவனே
எழுத்தாளன்
சும்மா சும்மா பிலுக்காமல் சிறியதாய்
செய்யப் பாருங்கள் நண்பர்களே...?
Pin It