அறிமுகம்

எனது எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் இவ் வேளையில் என்னைப் பற்றியும் நான் சார்ந்துள்ள அரசியல், அமைப்புகள் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். 45 வயதைக் கடந்த நான் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெண்கள் இயக்கங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். கூடுதலாக, ஒருபால் உறவில் உள்ளவர்கள், மாற்றுப் பாலினத்தவர், அரவானிகள், நடுவண் பாலினத்தவர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவ ரோடும் அவர்கள் சார்ந்து இயங்கும் அமைப்புகளோடும் செயல்பட்டு வருகிறேன். இவ்வனுபவங்களையும் எனது எண்ண ஓட்டத்தையும் இணைத்துச் சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் பெண்ணிய இயக்கங்கள் கடந்து வந்த பாதைகளில் காலூன்றியும் சகதோழிகளின் அரசியல் முயற்சிகள் சாதித்தவற்றைப் பற்றிக் கொண்டே இவ்விவாதத்தை முன் எடுத்துச் செல்கிறேன்.

பெண்ணிய இயக்கங்களின், பெண்ணியத்தின் தனித்தன்மையை கோடிட்டுக் காட்டியே எனது வாதங்களை முன் வைக்க விரும்பு கிறேன் (பெண்ணியலாளர்கள், இயக்கங்கள் என்று நான் குறிப்பிடும் போது வெவ்வேறு அரசியல் நிலைப்பாடு உடையவர் களை குறிப்பிடுவதாகவே கொள்ள வேண்டும். மார்க்சிய பெண்ணியம், தலித் பெண்ணியம், சோசலிச பெண்ணியம், வெறும் பெண்ணியம் என்று பல்வேறு அரசியல் நிலைகளில் நிற்கும் பெண்களை, இயக்கங்களை இச்சொற்கள் கொண்டு சுட்டுகிறேன்.) பாலினம், சாதி, சமயம், வர்க்கம், இனம் ஆகியன இணைந்தும் ஒன்றை மற்றொன்று சார்ந்தும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டும் நம்மை, நமது சுயங்களை கட்டியமைகின்றன என்ற போதிலும், இவை அனைத்தும் சந்திக்கும் முரண்படும் புள்ளிகளையும் தருவாய்களையும் இனங்காணவும் ஆராயவும் எல்லா அரசியல், சமுதாய இயக்கங்களும் முன்வருவதில்லை. எடுத்துக் காட்டாக, தொழிலார் இயக்கங்கள், சாதி-எதிர்ப்பு இயக்கங்கள் போன்றவை சமூக இயக்கங்களாக செயல்படுன்றன என்றாலும் அவை தங்களுக்கான குறிப்பிட்ட பிரச்சனைகளாக சிலவற்றை அடையாளபடுத்தி, அவற்றின் ஒரு பகுதியாகவே பெண்கள் பிரச்சனையை அணுகுகின்றன. மாறாகப் பெண்ணிய அரசியலோ, இந்தப் பல்வேறு விதமான அடையாளங்கள் இணையும் மாறுபடும், முரண்படும் இடங்களையும் தருணங்களையும் புரிந்துணர்ந்து செயல்பட விழைகிறது.

பெண்ணிய இயக்கங்களின் இவ்விழைவு, எல்லா நேரங்களிலும் செயலாக, அரசியல் நிலைப்பாடாக வெளிப்பாடு காண்பதில்லை தான். மேலும், பாலினம், பாலியல்பு தொடர்பான இவ்வியக்கங் களின் நுண்மையான அரசியல், சாதி-எதிர்ப்பு, வர்க்க முரண்பாடுகள் ஆகியனவற்றுக்குப் போதுமான முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற விமர்சனமும் உண்டு. இவ்விமர்சனத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. அதாவது, பாலினம், பாலினப் பாகுபாடு ஆகியவற்றுக் கும் மற்ற சமுதாய அடையாளங்களுக்கும் இடையிலான உறவுகளை ஆராய, அறிய, விமர்சிக்க பெண்ணியலாளர்கள் தயாராகவே உள்ளனர். ஒடுக்கப்பட்டப் பெண்களின் பிரத்யேக பிரச்சனைகளைக் கருத்தில் கொள்ள வேண்டியதன் தேவையை பெண்ணியலாளர்கள் முக்கி முனகி, காலதாமதமாகவேனும் ஏற்றுக் கொண்டு செயல்பட முயற்சித்து வருகின்றனர் என்பதையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இது போலவே, நிர்பந்திக்கப்பட்ட பாலுறவுகளை கடந்த உறவுகளில் வாழ்பவர்கள், ஆண், பெண் அடையாளங்களை தவிர்த்த வேறு பாலின அடையாளங்களை ஏற்றுள்ளவர்கள் ஆகியோரின் தேர்வுகளில் பொதிந்துள்ள அரசியலின் நியாயத்தைப் பெண்ணிய லாளர்கள் படிப்படியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால்தான், பெண்ணிய அறிவு மரபுகள், அரசியல் ஆகியன, பாலியல் தொடர்பான அரசியல் செயல்பாடுகளில் இறங்கியுள்ளோருக்கு ஆதர்சமானவையாக உள்ளன என்கிறார் பெண்ணிய சிந்தனையாளர் சயானிகா ஷா.

இன்றைய கலந்துரையாடலுக்கு பாலியல்பை நாம் விவாதப் பொருளாக எடுத்துள்ளோம். நம்முடைய புரிதலில் பாலியல்பு என்பதற்கு விரிந்த பொருள் உண்டு. பாலியல்பு என்பதை, இச்சை (நாம் விரும்பி ஏற்கும் ஒன்று), அந்நியோன்னியம் (நமது அந்தரங்கத்துக்குரியது), கூட்டுணர்வு (கூட்டுவாழ்க்கைக்கு ஆதராமாக இருக்கக்கூடியது)ஆகியவற்றுடன் தொடர்புடையதாக விளங்கிக் கொள்ளலாம். அதே சமயம், பாலியல்பு என்பது அதிகாரம் என்பதுடனும் தொடர்புடையதாகும் - வர்க்கம், ஜாதி, பாலின பாகுபாடு, இனம், குலம், சலுகை ஆகியவற்றைப் பொறுத்தே பாலியல்புக்கான இலக்கணம் கற்பிக்கப்படுகிறது. இங்கு சலுகை என்பதை குறித்து சில விளக்கங்களை முன்வைக்க விரும்புகிறேன். அதிகாரம் தரும் சலுகையைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதிகாரத்தில் இருப்போரின் எதேச்சதிகாரத்தை நியாயப்படுத்துவதாகவும் அதை இயல்பான தாகக் காட்டவும் அவர்களுக்கு வாய்த்துள்ள சலுகை - அது பிறப்புபாற்பட்டதாக இருக்கலாம், உடைமை தரும் மிடுக்காகவும் இருக்கலாம். பாலியல்பை பொறுத்த வரையில், சலுகை என்பது குறிப்பிட்ட வகையிலான உறவைப் பொறுத்தே அமைகிறது. இவ்வகையில், சமுதாயத்தில் "இயல்பான"தாக அறியப்படும் பாலுறவுகளுக்குக் குறிப்பாக ஆண்-பெண் உறவு, மணஉறவு என்பன போன்ற உறவுகளுக்கு - சில சலுகைகள் உண்டு. இத்தகைய உறவுகள் தான் "முறை"யானவையாக அறியப்படுகின்றன. அவையல்லாத உறவுகள் "முறையற்ற"வையாக ஒதுக்கப்படுகின்றன. "முறை"யான உறவுகளுக்கு எந்தளவு மதிப்பும் மரியாதையும் வழங்கப்படு கின்றதோ அந்தளவுக்கு அந்த இயல்புக்குள் வராத உறவுகள் தூற்றப்படுகின்றன, ஒடுக்கப்படுகின்றன. இது குறித்து நாம் அதிகம் பேசுவது கிடையாது. பெண் மீதான வன்முறை பற்றி பேசியுள்ள அளவுக்கு, ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களின் கையறு நிலை குறித்து வாதம் புரிந்த அளவுக்கு "இயல்பற்ற"வையாகவும் "முறையற்ற"வையாகவும் அறியப்படும் உறவுகளில் இருப்போரின் நிலைமை குறித்து நாம் பேசுவது கிடையாது. ஆனால் அவ்வாறு பேச வேண்டிய அவசியம் இருக்கிறது.

வட இந்திய கிராம சமுதாயங்களில் வழங்கும் திருமண வாழ்க்கைக் குறித்து ப்ரேம் சௌத்திரி என்பவர் ஆராய்ந்துள்ளார் - குடும்பம், குடும்ப உறவுகள், குறிப்பாக கொள்வினை கொடுப்பினை உறவுகள், சாதி, சமுதாயம் ஆகியவற்றின் பின்னணியில் இவ்வாய்வினை அவர் மேற்கொண்டுள்ளார். திருமண உறவுக்குள்ள வரம்புகள், கட்டுப்பாடுகள், விதிகள், இவை மூலம் நிலைநிறுத்தப்படும் பாலினப் பாகுபாடு, சாதிய ஏற்றத்தாழ்வு, ஆதிக்க சாதிகளின் அதிகாரம் முதலியவற்றை குறித்தும் அவர் விரிவாகவும் விளக்கமாகவும், தக்க ஆதாரங்க ளோடும் எழுதியுள்ளார். அவர் கையாண்டுள்ள முறைமையை பின்பற்றி, சாதி, குடும்பம், சமுதாயம் ஆகியவற்றின் பின்னணியில் பாலியல்பை வைத்து ஆராயும் போது, "முறை"யான உறவுகளை உயர்த்திப் பிடிப்பதன் பெயரில், "முறையற்ற"வையாக கருதப்படும் உறவுகள் எவ்வாறு புறந்தள்ளப்படுகின்றன, இல்லாமல் போய் விடுகின்றன, உரிமைகள் இழந்தவையாக ஆக்கப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்ட முடியும். மேலும் "முறை"யானவையாகக் கருதப்படும் உறவுகள் எவ்வாறு, எதன் பொருட்டு நிர்பந்திக்கப்படு கின்றன, எவ்வாறு வன்முறையால் நிலைநிறுத்தப்படுகின்றன, அவற்றை பெண்கள் ஏற்று வாழ்வதற்குத் தோதாக எத்தகைய கட்டுக்கதைகள் உருவாக்கப்படுகின்றன, "முறை"யான வாழ்க்கைக்கு ஒப்புதல் தெரிவித்து வாழும் பெண்களின் அவஸ்தைகள் எவ்வாறு அவர்களை தியாகிகளாக, முன்மாதிரிகளாக உருமாற்றுகின்றன என்பதையும் இத்தகைய ஆய்வுகளைக் கொண்டு நிறுவ முடியும்.

இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ளும் போது, திருமணம், குடும்பம் ஆகியவற்றுக்கிடையிலான உறவு பற்றி மாறுபட்ட புரிதல்களை நாம் பெறுவோம் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக திருமணம் என்பதன் தவிர்க்க முடியாத நீட்சிதான் குடும்பம், அது திருமணத்திலிருந்து இயற்கையாகவே உருவெடுத்தது என்பன போன்ற கருத்துகளை நாம் கேள்விக்கு உட்படுத்துவோம். அதாவது, குடும்பம் என்பதன் வேறு பரிமாணங்களையும் - சாதி, பாலியல்பு ஆகியவற்றைச் சார்ந்த பரிமாணங்களையும் - இத்தகைய ஆய்வுகள் அம்பலப்படுத்தும்.

இனி இக்கட்டுரையில் நான் மேற்கொண்டு வாதிட விரும்புவதாவது - பெண்களின் வாழ்க்கை, அவர்களுக்கு வாய்க்கும் வேலைகள், தொழில்கள் ஆகியன எவ்வாறு அவர்களது பாலியல்புபாற்பட்டதாகவே அமைகின்றன, பாலியல்பு பற்றிய கட்டுக்கதைகளை, அரசாங்கம், சட்டம், மதம் ஆகியன எவ்வாறு கற்பிக்கின்றன, இவற்றின் கனத்தை பெண்கள் எவ்வாறு சமாளிக்கின்றனர், இவை விதிக்கும் அறக் கோட்பாடுகளை எவ்வாறு எதிர்கொள்கின்றனர், தங்களது வேட்கைகளை, விருப்புவெறுப்புகளை எவ்வாறு வெளிபடுத்துகின்றனர், அந்நியோன்யம், ஆசை, தங்களுக்கான சமுதாயம் என்பனவற்றை எவ்வாறு உருவாக்கிக் கொள்கின்றனர் ஆகியவை குறித்தும் இக்கட்டுரை ஆராய முற்படும்.

பெண் உழைப்பும் பாலியல்பும்

மார்ச் 2005இல் மஹாராஷ்டிர அரசாங்கம், மாநிலம்தோறும் உள்ள மதுபான கூடங்களில் - பார்களில் - பெண்கள் நடனமாடும் பழக்கத்தைத் தடை செய்தது. இத்தடை மும்பை நகரத்திலும் அமுல்படுத்தப்பட்டது. இதற்கான காரணத்தை விளக்கிய உள்துறை அமைச்சர் கூறியதாவது - "இளைஞர்கள் கெட்டுப் போக இந்த நடனங்கள் காரணமாகவுள்ளன. பார்களில் ஆடப்படும் கேளிக்கை நடனங்களால் ஈர்க்கப்பட்டு, இளைஞர்கள், தந்தையர் கடுமையாக உழைத்துச் சம்பாதித்த பணத்தைச் செலவழிப்பதுடன், குற்றங்களில் ஈடுபடவும் துணிகின்றனர்." மாநில அரசாங்கம் அமுல்படுத்திய தடையின் விளைவாக 75 ஆயிரம் முதல் 1 லட்சம் பெண்களின் வாழ்க்கைப் பாதிப்பிற்குள்ளாகியது. பார்களில் நடனமாடும் பெண்கள், அவர்கள் செய்த தொழிலின் மூலம் பெற்ற வருமானத்தைக் கொண்டு தங்களது குடும்பத்தை நடத்தி வந்தனர். குழந்தைகளைப் படிக்க வைத்தனர். வயதான பெற்றோரைப் பராமரித்தனர். குடும்பத்தில் யாரேனும் நோய்வாய்ப்பட்ட போது அவர்களுக்கு மருத்துவம் பார்த்தனர். இந்த அனைத்து நடவடிக்கைகளும் தடை விதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டன.

இத்தடையைச் சில பெண்ணிய அமைப்புகள் எதிர்த்தனர். "பெண்களின் வாழ்வாதாரத்தைத் திருப்பிக் கொடு, வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகி வரும் ஒரு காலக்கட்டத்தில் பெண்களின் தொழிலுரிமையில் குறுக்கிடாதே" என்ற ரீதியில் கோரிக்கைளை முன்வைத்தனர். இவ்வாறு முழக்கமிட்டவர்கள், பார்களில் நடனமாடும் பெண்களின் வாழ்க்கைப் பற்றி அநேக செய்திகள் அறியப்படாததை உணர்ந்து, அவர்களது வாழ்நிலைமை களைப் பற்றி ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். பாரில் நடனமாடும் பெண்களுக்கான தொழிற்சங்கம் ஒன்று, சில பெண்ணிய அமைப்புகளை அணுகி, இத்தகைய ஆய்வை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதன் பெயரில் அவர்கள் இத்தகைய முயற்சியில் இறங்கினர்.

இந்த ஆய்வில் வெளிபட்ட முக்கியமான தகவல்கள் இவைதான். பெரும்பாலான நடனமாடும் பெண்களின் குடும்பங்களில் அவர்கள் மட்டுமே சம்பாதிப்பவர்கள். அவர்களை யாரும் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முனையவில்லை. இப்பெண்களில் 40%திற்கும் மேலானவர்கள் ஆடிப்பாடி சம்பாதிக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். தங்களது சாதித்தொழிலின் இழிவிலிருந் தும், அது கோரும் பாலியல் ஒடுக்குமுறையிலிருந்தும் விடுபடுவதற் காகவே தமது ஊர்களை விட்டு மும்பைக்கு வேலை தேடி வந்தவர்கள். தேவைக்கு ஏற்றார் போல, இவர்கள் ஒரு மதுபான கடையிலிருந்து மற்றொரு மதுபான அரங்கத்திற்குப் பணி மாறிச் செல்வது வழக்கம். அதாவது, அவர்கள் பார்த்த வேலையில் ஏதோவொரு சௌகரியம் அவர்களுக்கு வாய்த்திருந்தது - வேலையை மாற்றி கொள்ள, பிடிக்காத இடத்திலிருந்து நீங்கி வேறொரு இடத்துக்குச் செல்ல .... ஆணை மகிழ்விப்பதற்காக, ஆண் நோக்கின் இச்சைகளுக்கு ஏற்ப இயங்க வேண்டிய சூழலில், அதையே தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றார் போல, தங்களது மதிப்பைக் கூட்டி சம்பாதிக்கும் ஆற்றல் அவர்களிடம் இருந்ததும் ஆய்வினூடாக வெளிப்பட்டது. மதுபானக் கடைகளில் நடனமாட தடை விதிக்கப்பட்டதால் தமது வாழ்வாதாரத்தை இழக்க நேர்ந்ததை, தாம் நிற்கதிக்குத் தள்ளப்பட்டுள்ளதைப் பல பெண்கள் சுட்டிக்காட்டினர்.

பாரில் நடனமாடுவதற்கு எதிரான தடையைச் சில பெண்ணிய அமைப்புகள் ஆதரிக்கவும் செய்தன. பார் உரிமையாளர்களும் பார் நடனங்களைக் காண வருபவர்களும் நடனமாடும் பெண்களின் உழைப்பைச் சுரண்டுவதாக இவர்கள் குற்றஞ்சாட்டினர். பார்களில் பணி புரிய வரும் பெண்கள் தாங்களாகவேதான் இத்தகைய வேலைத் தேர்வை மேற்கொண்டுள்ளனர் என்பதை இவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. தங்களுக்கு வாய்த்திருந்த சூழ்நிலைமைகளை இந்த பெண்கள் எவ்வாறு திறம்பட எதிர்கொள்கின்றனர், அச்சூழல் விடுக்கும் சவால்களை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பன போன்றவற்றைக் குறித்து விவாதிக்க, யோசிக்க இந்த பெண்ணிய அமைப்புகள் தயாராக இல்லை.

மற்றொரு சாரார், வேறு விதமான ஆட்சேபணைகளை தெரிவித்தனர். பார்களில் நடனமாடுவோரின் பிரச்சனை வேலை உரிமை, பாலியல்பு,அப்பாலியல்பை சார்ந்த தொழில் ஆகியனவற்றுடன் மாத்திரம் தொடர்புடையதன்று, அது சாதி பிரச்சனையும் கூட. எனவே, இப்பெண்களின் வேலை உரிமையைப் பாதுகாப்பது என்பது அவர்களை இழிவான சாதித் தொழிலில் நீடிக்கச் செய்வதுக்கு ஒப்பாகும் என்றும் வாதிட்டனர். இவ்வாதங்களும் எதிர்வாதங்களும் சாதி, பாலியல், உழைப்பு ஆகியன ஒன்றை மற்றொன்று பிண்ணிப் பிணைந்திருப்பதை உணர்த்தின.

"பார் நடனப் பெண்கள் பாலியல் தொழிலாளர்கள் அல்லர், விபச்சாரத்தில் ஈடுபடுகிறவர்கள் அல்லர்!" என்று அப்பெண்கள் கோபத்தோடு வாதிட்டாலும் இத்தடை உத்தரவு அவர்களைப் பாலியல் தொழில் செய்ய நிர்பந்திக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினர். பிரச்சனை என்னவெனில், பாலியல் தொழில் என்பதைப் பெண்களின் மீதான வன்முறை என்கிற ரீதியில் மட்டுமே நாம் புரிந்து வைத்திருப்பதுதான். தமது பாலியல்பை வாழ்வாதாரமாகக் கொண்டு செயல்படுவோரை நாம் விபச்சாரிகள் என்று சொல்வது வழக்கம். தமது உடலை விற்று வயிறு வளர்ப்போர் என்று இவர்களை நாம் சாடுவதும் உண்டு. ஆனால், பாலியல்பைப் பரிமாற்றுப் பண்டமாக பாவித்து அதற்கான பொருளாதார மதிப்பை பெறுவோர், உண்மையில் பலதரப்பட்டவர்கள் - பார் நடனக் கலைஞர்கள், விளம்பர மாடலிங்க் செய்வோர், சினிமாவில் நடிப்போர் என்று இந்தப் பட்டியல் விரியும்.

பாலியல் தொழில் குறித்து பெண்ணியவாதிகள் கொண்டுள்ள நிலைப்பாடுகளை இனி ஆராய்வோம். பல சமயங்களில் பாலியல் தொழில் என்பதன் அனைத்து பரிமாணங்களையும் நாம் கருத்தில் கொள்வதில்லை. பாலியல் தொழிலாளிகளின் வாழ்வனுபவங்களை யும் அவர்கள், தாங்கள் செய்யும் தொழிலைப் பற்றி கொண்டுள்ள பார்வையையும் இன்னும் நாம் சரிவர புரிந்துணரவில்லை. ராஜேஸ்வரி சுந்தர்ராஜன் என்ற ஆராய்ச்சியாளர், பெண்ணிய வாதிகளின் நிலைபாடுகளில் உள்ள சிக்கல்களைப் பின்வருமாறு விளக்குகிறார். பெண்ணியலாளர்கள் தங்களை இரட்சகர்களாகவும் பாலியல் தொழிலாளிகளை தமது கருணையை எதிர்பார்த்து வாழும் பாதிக்கப்பட்டவர்களாகவும் அடையாளப்படுத்துவது பிரச்சனைக் குரியதாகும். இரண்டாவதாக, பாலியல் தொழில்புரிவோரின் மன ஓட்டம், தேர்வு செய்யும் ஆற்றல் என்னவாக உள்ளன, அவர்களால் எந்தளவுக்குச் சுயாதீனமாக செயல்பட முடிகிறது என்பன தொடர்பாகப் பெண்ணியலாளர் எழுப்பும் கேள்விகளுக்கான பதில்களிலும் போதிய தெளிவு இல்லை என்பது மற்றொரு பிரச்சனையாகும். மூன்றாவதாக, பெண் உழைப்பு, பாலியல்பு, இவை இரண்டும் இயங்கும் பொது வெளி ஆகியவற்றுக் கிடையிலான உறவுகள் குறித்து பெண்ணியவாதிகள் இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. இவ்விஷயங்களிலும் நாம் இன்னும் வேண்டிய கருத்துத் தெளிவு பெறவில்லை என்பதுதான் உண்மை.

ராஜேஸ்வரி சுந்தர்ராஜன் விபச்சாரம் குறித்து மூன்று வேறுபட்ட பார்வைகள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். முதல்சாரார், விபச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப் பட வேண்டும் என்பர். இவர்கள் பாலுறவு பற்றிய விவாதங்களில் பங்கேற்பதில்லை. திருமண உறவைக் கடப்பதன் தேவையையும் கடந்து செல்வதன் நியாயத்தையும் பெண்கள், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பாலுறவு கொள்வதும் குறித்தும் இவர்கள் விவாதிப்பதில்லை. இவ்விஷயங்களில் மௌனம் காப்பவர்களாகவே உள்ளனர்.

இரண்டாம்சாரார், பாலியல் தொழில் என்பதை விபச்சாரமாக, குற்றமாகப் பார்ப்பதில்லை. அது தொழிலாக இருப்பது அவர்களுக்கு பிரச்சனையில்லை. பாலியல் தொழிலுக்கும் திருமண உறவுக்குமிடையே அப்படி என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது. பெரும்பாலான பெண்கள், தமது வயிற்றுப்பாட்டுக்காகவே திருமணஞ் செய்து கொள்கின்றனர். பாலியல் தொழில் புரிவோரும் இதைத்தான் செய்கின்றனர் என்பது இவர்களது தர்க்கம். திருமணம் ஏன் மரியாதைக்குரியதாய் உள்ளது, பாலியல் தொழில் கேடுகெட்டதாய் அறியப்படுகிறது என்பன போன்ற கேள்விகளை இவர்கள் எழுப்புவது வழக்கம்.

மூன்றாம்சாரார், விபச்சாரம் என்பது சாதியை அடிப்படையாகக் கொண்ட சுரண்டல்முறை. பார்ப்பனீய இந்து மதத்தின் மூலம் இது நியாயப்படுத்தப்படுகிறது. தேவதாசி, ஜோகினி, மாத்தம்மா என்ற பெயர்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் அடிமைகளாக ஆக்கப்படுகின்றனர் என்று இவர்கள் வாதிடுகின்றனர். இந்த மூன்றாம் சாரார், விபச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் அல்லது தொழிலாகப் பாவிக்கப்பட வேண்டும் என்ற வாதங்களுக்குள் அதிகம் போவதில்லை. மாறாக, பாலியல் தொழிலுக்குட்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களின் கதைகளினூடாகவும் வரலாற்றினூடாகவும் பயணித்து, அவர்களது அனுபவங்களைப் பொதுவில் வைத்து பேச முற்படு பவர்களாக உள்ளனர். முந்தைய இருசாராரது விவாதங்களைப் போல் இவர்களது கருத்துகள் அதிகம் விவாதிக்கப் படுவதில்லை.

பாலியல்பு, பெண்களின் உழைப்பு ஆகியனவற்றுக்கு நாம் தரும் மதிப்பு, சன்மானம், அவற்றை நாம் புரிந்து கொள்ளும் விதம் ஆகியன, சம்பந்தப்பட்டவர்களின் சாதி, வர்க்க நிலைகளால் தீர்மானிக்கப்படுவதைப் பார்களில் நடனமாடும் பெண்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். ஒரு திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பாரில் நடனமாடும் பெண்ணாக வருகிறார். அவர் தனது பாலியல்பைப் பயன்படுத்தி சம்பாதிப்பதை அரசால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. அதை சமுதாயமும் ஆமோதிக்கிறது. ஆனால்,அவளைப் போல, ஆனால் சினிமாவிலல்லாமல், நிஜ வாழ்வில், நாங்கள் ஆடும் போது, அதுவும் வயிற்றுப் பிழைப்புக்காக ஆடும்போது அதை யாராலும் ஏற்றுகொள்ள முடிவதில்லை என்ற கேள்வியைப் பார்களில் ஆடும் பெண்கள் எழுப்பியுள்ளனர். ஆக, பாலியல் சார்ந்த பெண்களின் உடல்கள் பொதுவில் இயங்குவது என்பது பிரச்சனையல்ல. இவ்வாறு பொதுவில் இயங்கும் உடல்களின் சாதி, நிறம், சமுதாய அந்தஸ்து, மணத் தகுதி ஆகியவற்றைக் கொண்டே அவை பிரச்சனைக்குரிய உடல்களா, அல்லது ரசனைக்கும் போற்றுதலுக்கும் உரிய உடல்களா என்பது தீர்மானிக்கப்படு கின்றன.

இங்கு வேறொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மணவாழ்வில் துலங்கும் பாலியல்பு, பாலுறவு ஆகியனவற்றுக்குள்ள மதிப்பைக் கொண்டுதான் மணவாழ்வுக்குள் வராதவர்களின் பாலியல்புக்கான மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. பார்களில் நடனமாடும் பெண்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது ஒரு சோசலிச பெண்ணியலாளர் கூறியதாவது - "பார் டான்ஸ் செய்யும் பெண்களின் ஆட்டத்தில் மயங்கி, அதற்காக பணம் செலவழிக்கும் ஆண்கள் தங்கள் மனைவிகளுக்காக எதையும் செய்வதில்லை." அதாவது, குடும்பத்தைப் பேணுதல், மனைவியின் உரிமைகளைப் பாதுகாத்தல் என்பன போன்ற செயல்பாடுகளின் பெயரில், ஆயிரமாயிரம் ஏழைப் பெண்களின் தொழில் உரிமை பறிக்கப்படுவது நியாயமானதே என்று இவர் சொல்லாமல் சொல்கிறார்.

ஆண்களின் நடவடிக்கைகள் அவர்களைச் சார்ந்து வாழும் பெண்களைப் பாதிக்கின்றன என்பது உண்மைதான் என்றாலும் அத்தகைய பாதிப்பு மட்டுமே இங்கு முக்கியமானதாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதுவும், இல்லற பெண்ணைக் குறித்த கவலையாகவே பரிணமிக்கிறதே அன்றி, ஆண்களைக் கட்டுப்படுத்தும் செயல்பாடாக அல்ல. அரசு, நடுத்தர வர்க்கத்தினர், ஆதிக்க சாதியினர் ஆகியோரின் அக்கறைக்குப் பாத்திரமான இந்த ஆண் மையப்பட்ட இல்லறமானது, இல்லறத்துக்கு உட்படாத வர்களை மனிதர்களாகவே கருதுவதில்லை. மேலும், அவர்களை அடக்கி ஆள, இல்லறம் சார்ந்த சொல்லாடல்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வாறு வர்க்கமும் சாதியும் அரசும் கை கோர்த்துக் கொண்டு இல்லற வாழ்வு வாழாத பெண்களின் மீது அதிகாரம் செலுத்துகின்றன. கூடவே, எது தொழில், எது தொழில் அல்ல, எது சேவை, எது மரபு, எது கலை, எது ரசனை என்ற ரீதியில் பாலியல்பு, பாலுறவுகள் குறித்த வாதங்களை இவை தரம் பிரிக்கின்றன.

தாம்பத்தியம், காதல், உரிமை, இன்பம்

பாலியல் தொழில் குறித்த பெண்ணிய புரிதல்கள் ஒருபுறமிருக்க, அந்நியோன்யம், பாலியல்பு, வன்முறை ஆகியன ஒன்றோடு மற்றொன்று பின்னிப்பிணைந்துள்ளதன் நுணுக்கங்களும் பெண்ணியவாதிகளின் கவலையார்ந்த கவனத்தை ஈர்த்துள்ளன. குடும்பங்களில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள பெண்களைக் குறித்த தனது கட்டுரையில் வ. கீதா பின்வருமாறு குறிப்பிடுகிறார். நெருக்கமான உறவுகளில் தொழிற்படும் வன்முறை குறித்து கூட்டுக் கலந்தாய்வுகளைப் பெண்ணியவாதிகள் மேற்கொண்டுள்ளனர். வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்ட, பழகிவிட்ட பெண்கள் வன்முறையார்ந்த உறவுகளிலிருந்து விடுபட, அத்தகைய வன்முறையை எதிர்கொள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளித்துள்ளனர். அவர்கள் பொருட்டுக் கூட்டுச் செயல்பாடுகளில் இறங்கியுள்ளனர். என்றாலும், நெருக்கம், காதல், அந்நியோன்யம் ஆகியனவற்றைச் சார்ந்த அனுபவங்களைக் குறித்த தமது புரிதல்களைப் பொதுவில் வைத்துப் பேச அவர்கள் முற்படவில்லை. இன்னும் சொல்லப் போனால், குறிப்பிட்ட பிரச்சனைக்குத் தீர்வு காணுதல், அதை அரசியல்படுத்துதல், இவற்றைச் செய்து முடிக்க சட்டத்தை நாடுதல் என்றரீதியில்தான் பெண்ணியவாதிகள் சிந்தித்துச் செயல்பட்டு வந்துள்ளனர்.

இத்தனைக்கும், பெண்ணிய வட்டாரங்களில் காதல், காமம், நெருக்கம் குறித்து நாம் பேசாமல் இல்லை என்பதையும் கீதா சுட்டிக் காட்டுகிறார். இவ்வாறு நமக்கான இடத்தில், நம்மால் பேசப்பட்டவற்றைப் பொது உரையாடலாக நாம் வளர்த்திருந்தால், நெருக்கம், அந்நியோன்யம், குறிப்பாக பெண்ணியமும் பெண்ணிய செயல்பாடுகளும் சாதித்துள்ள தோழமை, சிநேக இன்பம் ஆகியவற்றைப் பற்றிய பார்வையைப் பொது புத்தியில் பதியச் செய்திருக்கலாம். இத்தகைய விஷயங்களைப் பற்றிய புதிய சொல்லாடல்களை உருவாக்கியிருக்கலாம். நாம் இவ்வாறு செய்யாததால், ஆண்கள், பெண்கள் மீது செலுத்தும் வன்முறையி னூடாக வெளிப்படும் காதல், ஆசை, வேட்கை ஆகியனவற்றுக்கு, இல்லாத நியாயங்கள் சொல்லப்படுகின்றன. "அடிக்கிற கைதான் அணைக்கும், அடிச்சாலும் உதைச்சாலும் அவன் புருஷன்தான், வலி இல்லாத காதல் கிடையாது, இன்னிக்கு அடிப்பேன் நாளைக்கு அணைப்பேன், உரிமை இருக்கு அடிக்கிறாரு, அக்கறை உள்ள இடத்துலதான் ஆக்கிரோஷமும்" இருக்கும் என்பன போன்ற வசனங்கள் ஆண்களின் வன்முறையார்ந்த செயல்பாடுகளுக்கு நியாயம் சேர்க்கின்றன. மேலும், பெண்ணிய சமூகவியலாளர் கல்பனா கண்ணபிரான் குறிப்பிடுவது போல, ஆண்களின் இந்த நடத்தைமுறைச் சரியானதே, நியாயமானதே என்பதை அரசு, சமயம், சாதி , பொது அறம் ஆகிய அனைத்துமே தத்தம் அளவில், தமக்கேயுரிய வகையில் பொதுவில் வைத்துத் தொடர்ந்து உறுதி செய்கின்றன.

இங்கு இன்னொரு விஷயத்தையும் யோசிக்க வேண்டியுள்ளது. நெருக்கமான குடும்ப உறவுகளில் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதை இன்று வெகுசிலர் மறுப்பர். ஆனால் திருமண உறவு குறித்து வேறு விதமான கேள்விகளையும் நாம் எழுப்ப வேண்டும். ஆணும் பெண்ணும் பாலுறவு கொண்டு வாழும் திருமண வாழ்க்கையில், அவர்களால் சுயேச்சையாக, சுதந்திரமாக தமது பாலியல் விருப்பங்களை, காதலை, தேவையை வெளிபடுத்த முடிகிறதா? திருமணம் என்று வரும் போது, தமது ஆசையை, பாலியல் தேவையை எவ்வாறு, எந்த அளவுக்கு மக்கள் வெளிப்படுத்துகின்றனர்? அவர்களுடைய விருப்பங்கள் குறுகிய, விதிமுறை சார்ந்த வலியுறுத்தல்களுக்குள் முடக்கப்படுகின்றனவா? இக்கேள்விகளில் நாம் இன்னும் தெளிவு பெறவில்லை. இவை குறித்த ஆய்வுகளைப் போதுமான அளவுக்கு மேற்கொள்ளவில்லை.

நம் நாட்டில் இளம் ஆண்களும் பெண்களும் ஓடிப்போய் திருமணஞ் செய்து கொள்ளும் போது கொல்லப்படுகின்றனர். சாதி, மதம் என்பவற்றின் பெருமையைக் காப்பாற்ற அவர்கள் கட்டாயத் திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கபடுகின்றனர். பொருந்தா மணம் செய்து கொண்டதால் மூர்க்கமாக கொலை செய்யப்படு கின்றனர். இத்தகைய கொலைகள் கௌரவக் கொலைகள் என்று அழைக்கப்படுகின்றன. அப்படியானால், இங்கு எதனை முன்னிட்டு, யாருடைய கௌரவம் பங்கப்படுகின்றது, அல்லது காப்பாற்றப்படுகின்றது? கௌரவம் என்பது ஒரு புறமிருக்க, நமது சமுதாயத்தில், இளம் பெண்கள் வலுக்கட்டாயமாக மணஞ்செய்து கொடுக்கப்படுவதைக் குறித்துச் சமுதாயம் சாதிக்கும் நாசகார மௌனத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? திருமணம் என்பது குறித்து நமக்கு இத்தனைக் கேள்விகள் இருக்க, ஒரு பால் உறவாளர்கள் தாமும் திருமணஞ் செய்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் போது அதை நாம் எப்படி புரிந்து கொள்ளப் போகிறோம்? அவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைக்கான கோரிக்கையாக பார்க்கப் போகிறோமா? அல்லது அவர்களுமே ஏதோ ஒரு முறைமைக்குள் வர விரும்புவதன் அறிகுறியாக இதை கொள்ளப் போகிறோமா?

நமது கேள்விகளும் மௌனங்களும் எப்படியானதாக இருந்தாலும் திருமணம் பற்றி அரசு கொண்டுள்ள கருத்தையும் நாம் அறிய வேண்டியவராகிறோம். 2006இல் வெளியிடப்பட்ட தனது 217 ஆம் அறிக்கையில், இந்திய சட்ட ஆணையம் ஏற்கனவே 1978இல் செய்த பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்தியது. பொதுவாக, திருமண முறிவு அல்லது விவாகரத்து என்று வரும்போது, மணமுறிவுக்கு யார் காரணம், அவரது எந்த செய்கை, முறிவுக்கு வழிவகுத்தது என்பதை இனங்கண்ட பிறகே, தீர்ப்பு வழங்கப் படுவது வழக்கம். அதாவது, ஏதோவொரு தவறு நிகழ்ந்து விட்டதால்தான் மணவாழ்க்கை முறிந்து விட்டது என்ற புரிதலின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்படும். ஆனால், 1978இல் செய்யப்பட்ட பரிந்துரையின்படி, மணவாழ்க்கையை இனி எந்த வகையிலும் தொடர முடியாது, முறிந்து போனது முறிந்து போனதுதான், அதை சரி செய்யவே முடியாது என்று சம்பந்தப் பட்டவர்கள் எண்ணினால், அதுவே மணமுறிவுக்கான நியாயமான காரணமாகக் கொள்ளப்படலாம்.

இந்தக் கருத்தை ஆதரித்து ஏற்கனவே பல பெண்கள் குழுக்கள் குரல் கொடுத்துள்ளன. சரி செய்யவே முடியாதபடிக்குத் திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டுவிட்டது என்பதன் அடிப்படையில் விவாகரத்துக் கோரலாம்; இத்தகைய காரணத்தின் பெயரில் விவாகரத்து வழங்கப்பட வேண்டும் என்று இக்குழுக்கள் கூறிவருகின்றன. பொருளாதார ரீதியாக கணவனைச் சார்ந்திருப்பதாலும் புகுந்த வீட்டை விட்டால் வேறு புகலிடம் இல்லை என்ற காரணத்தி னாலும், புகுந்த வீட்டில் தொடர்ந்து வாழ தனக்கு உரிமையுள்ளது என்று சிலர் எண்ணுவதாலும் சாரமற்ற, சீர்குலைந்த வாழ்க்கையில் பல பெண்கள் தொடர்கின்றனர். இவர்களுக்கு 1978இல் பரிந்துரைக் கப்பட்ட விஷயம் பயனுள்ளதாக இருக்கும் என்பது கண்கூடு.

ஆனால், சில பெண்கள் குழுக்கள் மணமுறிவு குறித்த இந்த புதிய பார்வைக்கு ஆட்சேபணை தெரிவித்து வருகின்றனர். மனைவி, குழந்தைகள் ஆகியோரின் சொத்துரிமையையும் திருமணத்துக்குப் பிறகு வாழும் வீட்டில் தொடர்ந்து வாழ மனைவிக்குரிய உரிமையை யும் பத்திரப்படுத்திக் கொடுக்கக் கூடிய சட்ட மாற்றங்களைப் புதிய மணமுறிவு சட்ட திருத்தத்துடன் இணைக்க இவர்கள் விரும்பு கின்றனர். மேலும், திருமண வாழ்க்கை, குடும்பம் ஆகியவற்றைக் கட்டிக் காக்க மனைவி செலுத்தும் உழைப்புக்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர். இந்த விவாதங்களில் துலங்கும் உண்மை இதுதான் - பெண்ணைப் பொறுத்த வரை, திருமணம் செய்து கொள்வதன் மூலமே அவள் தனக்கான பொருளாதார பாதுகாப்பைப் பெறுகிறாள். அதாவது, அவளுக்கு மணம் முடித்து வைப்பவர்கள் அவளை "ஒருத்தன் கையில பிடித்துக் கொடுப்பதன்" மூலம் இத்தகைய பாதுகாப்பை ஏற்படுத்தித் தர முடியும் என்று எண்ணுகின்றனர். திருமணம் என்ற பந்தம் அடிப்படையில் அவளைச் சரிநிகர் சமானமாக வாழ அனுமதிப்பதில்லை என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. ஆணைச் சார்ந்து, அவனுடைய பொருளாதார அதிகாரத்தை அண்டி வாழ வேண்டிய சூழலில், பெண்ணுடைய பாலியல்பு எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.

இன்றைக்குத் திருமணஉறவு என்பது ஆழமான மாற்றத்துக்கு ஆளாகியிருக்கிறது என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது. சமுதாயத்தின் ஏனைய பிரிவினரும் தம்மை உயர்த்திக் கொள்ள விழையும் இந்தக் காலகட்டத்தில், அனைவருடைய ஆசை அபிலாஷைகள் கூரையை எட்டும் தருணத்தில், "நுகர்தல்" என்ற செயல்பாடு மட்டுமே அனைவரையும் ஈர்க்கக்கூடியதாக உள்ள உலகில், புதுவிதமான "இலட்சிய" பெண் முன்மாதிரியாக நிறுத்தப் படுகிறாள். அவள் படித்தவள். முற்போக்கு சிந்தனையுடையவள். ஆனால், காதலைப் புறக்கணிக்கக்கூடியவள் அல்ல. இன்னும் சொல்லப் போனாள், காதலையும் இச்சையையும் பகிரங்கமாக வெளிபடுத்தக் கூடியவளாக அவள் இருக்கிறாள். என்றாலும் அவள் அத்து மீறி நடப்பவள் அல்ல. அவள், மணவாழ்க்கையின் வரம்புகளை, நியாயத்தை ஏற்பவள். அதாவது, அவளது காதலானது மணவாழ்க்கைக்கான காதல்தான். ஆணை நோக்கி செலுத்தப்படும் "முறை"யான காதல்தான். அவனை மகிழ்விக்கக்கூடிய, அவனுக்கான கனவுக்காதல்தான். ஏன், தொலைக்காட்சிகளில் அரங்கேறும் டாக்-ஷோக்கள், ரியாலிட்டி ஷோக்கள் என்பன போன்ற நிகழ்ச்சிகளும் கூட மணவாழ்வில் துலங்கும் காதலையும் தாம்பத்தியத்தையும் கொண்டாடுவதைக் காணலாம்.

பெண்களைக் காதலிகளாகவும் மனைவிகளாகவும் சிலாகித்துக் கொண்டாடும் இந்தப் போக்கானது, அன்றாட வாழ்வு, குடும்பம் ஆகியனவற்றில் தொழிற்படும் அசதியையும் சலிப்பையும் நயமான வகையில் மூடி மறைத்து, மனைமாட்சியை, அது காட்டும் "முறையான" காதலை ரசனைக்குரியவையாக காட்டுகின்றன.

ஆண்-பெண் பாலுறவிற்கான நியாயம் இவ்வாறு கட்டமைக்கப் படும் சூழலில், பெண்களின் ஆசை, விருப்பம் என்பன குறித்து வேறுவகைகளில் பேச முடியாததோடு, அவர்கள் திருமண உறவுக்குள் பாலியல்ரீதியாகவும் பிற வகையிலும் தொடர்ந்து ஒடுக்கப்படும், அவதியுறும் அனுபவங்களைச் சொல்லும் கதைகளி லிருந்து மட்டுமே அவர்களது சொல்லப்படாத வேட்கைகளை நாம் உய்த்துணர வேண்டியுள்ளது.

அன்றாட தாம்பத்தியம் ஏற்படுத்தும் சலிப்பு, எரிச்சல் ஆகியவற்றை வித்தியாசமாக எதிர்கொண்டுள்ள இரு முக்கிய நூல்களைக் குறித்து இங்குப் பேசுவது பொருத்தமாக இருக்கும். மலையாளக் கவிஞர் கமலா தாசின் சுயசரிதையையும் கேரளாவைச் சேர்ந்த பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலாவின் சுயசரிதையை யும் ஒப்பிட்டுப் பெண்ணிய வரலாற்றாசிரியர் ஜே. தேவிகா எழுதியுள்ளதை இங்கு கவனப்படுத்த விரும்புகிறேன். தேவிகா கூறுவதாவது; நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கமலா தாஸ், உடல்சார் அனுபவங்களை, குறிப்பாக உடலை வாட்டும் ஆசை, வேட்கை, காதல், உடலின் அழகு ஆகியவற்றைக் கவித்துவமான, கற்பனை யார்ந்த வகையில் தனது எழுத்தில் வெளிபடுத்தியுள்ளார். அவ்வாறு செய்ததன் மூலம் அழகியலை முன்நிறுத்தி அழகற்ற, சுவையற்ற தாம்பத்தியத்தைச் சவாலுக்கழைத்துள்ளார், வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளார்.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த நளினி ஜமீலாவோ அவர் சார்ந்திருக்கும் பாலியல் தொழிலை "வெறும் வேலை"யாக, பிற தொழில்களைப் போல, அன்றாடம் பார்க்க வேண்டிய தொழில் என்ற ரீதியில் விவரித்துள்ளார். பாலியல் தொழிலின் "அன்றாட"த் தன்மையைச் சர்வ சாதாரணமாக விவரிப்பதன் மூலம், அதைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள வக்கிரங்களையும் மாயைகளையும் சாரமற்றவையாக ஆக்கிவிடுகிறார். அதே சமயம் பாலியல் தொழிலுக்கு நேர்எதிரானதாக, அதன் எதிர் நிலையாக நிறுத்தப்படும் இல்லறத்துக்குரிய ஒளிவட்டத்தையும் மங்கச் செய்து விடுகிறார். இல்லத்தரசிக்குரியதாக போற்றப்படும் பெருமிதத்தையும் விபச்சாரிக்கு என்று ஒதுக்கப்படும் வசைகளையும் ஒரு சேர புறந்தள்ளிவிடுகிறார். இல்லறம் உன்னதமானது, விபச்சாரம் பாவப்பட்டது என்ற வாதத்தைத் தவிடுபொடியாக்கி விடுகிறார். மேலும், பாலியல் தொழிலாளி என்ற தனது அடையாளத்தை மீள்வரையறை செய்கிறார். உடல், மன வேதனைகளை ஆற்று படுத்தக்கூடிய தனது ஆற்றலை, திறன்களை முன்நிறுத்துகிறார். பாலியல் தொழில் அனுபவங்களினூடாக தான் பெற்றுள்ள பிரத்யேக அறிவைச் சிலாகிக்கிறார். ஆணாதிக்க, பெண்-விரோத கருத்தியலும் பார்வையும் மேலோங்கியிருக்கும் சமுதாயத்தில், சுயாதீனமான அடையாளம், சுதந்திரமான காதல், ஆசை ஆகியவற்றை நோக்கிய தேடல்களாக இந்த இரு பெண்களின் பதிவுகளையும் கொள்ளலாம்.

தாம்பத்தியக் காதலைக் கொண்டாடும் இன்றைய வரலாற்றுக் சூழலில், மணவுறவை உள்ளடக்கிய ஆதிக்க சமுதாய உறவுகளிலிருந்து பெண்ணின் பாலியல்பை மீட்டெடுத்து, மானுட விடுதலைக்கான ஆற்றலாக அதை மடைமாற்றம் செய்த பெண்ணிய முயற்சிகளை நினைவுகூர்வது அவசியம். ஆரம்பகால சோசலிஸ்டுகள், பெண்ணிய இயக்கங்கள் சாதிக்க நினைத்த இந்த விடுதலைப் பற்றிய கூட்டுநினைவு அற்றுப் போய்விட்ட சூழலில் இதை நாம் செய்ய வேண்டியுள்ளது.

ஆரம்பகால சோசலிச இயக்கங்கள், குறிப்பாக 1820களிலும் அதற்குப் பிறகும் இங்கிலாந்தில் செயல்பட்ட இயக்கங்கள், முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடிய அதே வேளையில், முதலாளித்துவ சமுதாயத்தில் ஆண்-பெண் உறவு எத்தகையதாக உள்ளது, சோசலிச சமுதாயத்தில் அது எவ்வாறு மாறி அமைய வேண்டும் என்பன குறித்தும் பேசின. இவற்றைச் சாதிக்க வல்ல போராட்டங்களைப் பற்றிச் சிந்தித்தன. பெண் விடுதலை, குறிப்பாக பாலுறவில் பெண் பேண வேண்டிய சுயாதீனம், வர்க்கப் போராட்டத்துக்கும் பாலியல் விடுதலைக்கும் இடையிலான தொடர்புகள் என்பன போன்ற விஷயங்களில் ஆழ்ந்த அக்கறை செலுத்தின. 20ஆம் நூற்றாண்டில் சோசலிச கருத்துகளை ஏற்று செயல்பட்ட மார்க்கரெட் சாங்கர், எம்மா கோல்டுமான் ஆகியோர், பெண்கள், தமது கருவுரும் ஆற்றலைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதன் அவசியத்தைக் குறித்துப் பேசினார்கள். கர்ப்ப ஆட்சி என்பதன் நுணுக்கங்களை விளக்கினர், பரப்புரை செய்தனர்.

சோசலிச, பெண்ணிய கருத்துகளை முதன்படுத்திய சுய-மரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள், காதல், அழகு, கற்பு, தாய்மை ஆகியவற்றை விமர்சனம் செய்தனர். ஆண்மையைச் சாடினர். தேவதாசி ஒழிப்புச் சட்டம், பெண்களின் மண வயதை உயர்த்திய சட்டம் ஆகியன குறித்து நடந்த விவாதங்களில் முழுமூச்சுடன் பங்கேற்றுப் பெண்களின் காதல் உரிமை, பாலுறவில் அவர்களுக்குரிய இடம், அவ்வுறவில் அவர்கள் பேண விரும்பும் மாண்பு ஆகியன குறித்து விரிவாகப் பேசினர். பெரியாரும் இவை குறித்து நிறைய எழுதினார், பேசினார். காதல், தாம்பத்தியம், மணமுறிவு ஆகியன குறித்து வித்தியாசமான புரட்சிகர கருத்துகளை வெளியிட்டார்.

ஆனால் இத்தகைய மாறுபட்ட, புரட்சிகரமான மரபுகளைத் தாங்கிய வரலாறுகள் நமக்கு வாய்த்திருந்தாலும் பிற்போக்கான, ஆணாதிக்க அரசியலும் அறவியலும்தான் நமக்கு இன்று எஞ்சி இருக்கின்றன. "பையர்" திரைப்படம் வெளிவந்த போது அது "நமது பண்பாட்டு"க்கு பொருந்தாத, இன்னும் சொல்லப் போனால் நமது பண்பாட்டுக்கு இழுக்கைக் கற்பிக்கக்கூடிய, லெஸ்பியன் உறவைப் பிரதானப்படுத்துகிறது என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டினர். அந்த படம் திரையிடப்படக்கூடாது என்று கோஷமிட்டு ரகளை செய்தனர். தமிழ்நாட்டில் நடிகை குஷ்பூ தற்கால தமிழ் சமுதாயத்தில், திருமணத்துக்கு முன்னமே பெண்கள் பாலுறவு கொள்கின்றனர் என்று கூறிய போது, அவர் தமிழ்க் கற்பைக் களங்கப்படுத்தி விட்டதாகக் கூறி களம் இறங்கியவர்கள், அவருக்கு எதிராக பல வழக்குகளைத் தொடுத்தனர். இப்படி எத்தனையோ கதைகளைச் சொல்லலாம். அறம், கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நடத்தப்படும் உரிமை மீறல்கள், வலதுசாரி அறங்காவலர்களின் தலைமையின் கீழ்தான் அரங்கேறுகின்றன. கலை, புத்தகங்கள், நடத்தை நெறிகள் ஆகிய அனைத்தையும் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வரவே இவர்கள் விரும்புகின்றனர்.

பாலியல் உரிமைகள், அரசியல் சட்டம், பொது அறம்

இப்பகுதி, நமது விவாதத்தின் கடைசிப் பகுதி. 2009 ஜூலை 2ஆம் தேதி தலைமை நீதிபதிகள் ஏ. பி. ஷா, முரளீதர் ஆகியோர் இ.பி.கோ 377 சட்டப்பிரிவு தொடர்பான வழக்கில் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு முக்கியமானது. இவ்வழக்கு (எண் 7455/ 2001) நாஸ் ஃபௌண்டேஷன் என்ற அமைப்பின் மூலம் அரசின் மீது தொடரப்பட்டதாகும். இ.பி.கோ 377 பிரிவின்படி, ஒருபால் உறவு, குறிப்பாக ஆணும் ஆணும் கொள்ளும் பாலுறவு என்பது தண்டிக்கத்தக்க கிரிமினல் குற்றமாகும். சம்பந்தப்பட்ட நபர்கள் வயது வந்தவர்களாக இருப்பினும் அவர்கள் சுய விருப்பத்தின் பெயரில் இத்தகைய உறவில் ஈடுபட்டாலும் இந்த சட்டப் பிரிவின்படி அது குற்றமாகும். இந்த சட்டப்பிரிவை நீக்கக் கோரி 2001 முதற்கொண்டே பலர் கோரினர். இந்த கோரிக்கை எழும்பியதற்கான உடனடி வரலாறு இதுதான். 2001 இல், உத்தர பிரசேத்தில் எய்ட்ஸ் கட்டுபாடு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வக் குழுவினர் சிலர், இ.பி.கோ 377இன் கீழ்க் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பொது வெளியில் ஆணுறைகளை விநியோகம் செய்து கொண்டிருந்த போது இது நடந்தது. அவர்களைக் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் "இயற்கைக்கு மாறான" உறவுகளை ஊக்குவிக்கும்படியான செயல்களில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ் சாட்டி கைது செய்தனர். இந்தியாவிலிருந்து ஒருபாலுறவை தாம் ஒழிக்கப் போவதாகவும் அறிவித்தனர். இந்த கைதைத் தொடர்ந்து தான் மேற்கண்ட வழக்கு தொடரப்பட்டது. அது தில்லி உயர் நீதி மன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது, மீண்டும் தில்லி உயர் நீதி மன்றத்துக்கே திரும்ப வந்தது.

முடிவில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஷாவும் முரளிதரனும் ஒருபாலுறவு கொள்ள விழையும் வயதுக்கு வந்தவர்கள், பரஸ்பர ஒப்புதலுடன் தமக்கான அந்தரங்க வெளியில் அத்தகைய உறவில் ஈடுபட்டால் அது குற்றமாகாது என்று தீர்ப்புரைத்தனர். இந்த தீர்ப்பு இ.பி.கோ 377 பிரிவை நீக்கவில்லை என்றாலும், "இயற்கைக்கு மாறானதாக" அந்த பிரிவு அடையாளப்படுத்திய பாலுறவை குற்றமற்றதாக்கியது. இந்த வழக்கு தொடரப்பட்ட காலக்கட்டத்தில் தான், ஒரு பாலுறவில் உள்ளவர்கள் எப்படி வாழ்கின்றனர், அவர்கள் ஒளிந்தும் மறைந்தும் வாழ்வது ஏன், அவர்களுக்கு எதிராக புரியப்படும் வன்முறைகள் யாவை என்பன போன்ற விஷயங்கள் பொதுவில் வைத்துப் பேசப்பட்டன.

வயதுக்கு வந்தவர்கள் பரஸ்பர ஒப்புதலுடன் மேற்கொள்ளும் பாலுறவை மையமிட்டு அமைந்த இந்த தீர்ப்பு, அனைவரும் சமத்துவமாகவும் மாண்புடனும் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் வாழ, தமக்கான அந்தரங்க வாழ்க்கையை பின்பற்ற உரிமை உடையவர்கள் என்பதைத் தெளிவுப்படுத்தியது. அதே சமயம் எல்லோருக்கும் பொதுவான, நாம் அனைவரும் பேணத்தக்க பாலியல் அறம் குறித்துப் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த உள்துறை அமைச்சகம், இத்தகைய பாலியல் அறம் என்ற ஒன்றை முன்நிறுத்தி, அதன் அடிப்படையியே தனது வாதங்களைத் தொடர்ந்தது. ஒருபாலுறவு என்பது இந்திய சமுதாயத்துக்கு ஒத்து வராது, பொருந்தாது, அதை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள், ஏன் வெறுக்கவும் செய்வார்கள், பெரும்பான்மை மக்களுக்கு உவப்பற்றதாக உள்ள ஒன்றை அவர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, ஒருபாலுறவினர் தமக்கான உரிமைகளை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டும். அவற்றை உள்ளவாறே கோர முடியாது. பொது நன்மையை முன்னிட்டு இவர்களது உரிமைகள், குறிப்பாக சமத்துவம் கோரும் உரிமை யானது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பன போன்ற வாதங்களை உள்துறை அமைச்சகம் முன்வைத்தது. தில்லி உயர் நீதி மன்றத் தீர்ப்பு பொது நன்மை, பொது அறம் குறித்த அமைச்சகத்தின் வாதங்களை ஏற்கவில்லை -

“பொதுவான ஒழுக்க நெறி விதிகள் என்பது, அரசியலமைப்புச் சட்ட ஒழுக்க நெறிகளினின்றும் வேறுபட்டது. இந்த நெறிகள், சூழ்நிலைகள் சார்ந்து மாறக்கூடியவை. நாட்டின் நலன் என்பது பற்றி முடிவு செய்ய, ஆய்வுக்குள்ளாகும் ஒழுக்க நெறியானது, அரசியலமைப்புச் சட்டத்தினுடயதாக இருக்க வேண்டுமே தவிர, பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒழுக்க நெறி விதிகளாக இருக்க முடியாது.”

அரசியல் சட்டம் கோரும் அறத்தைக் குறித்து அம்பேத்கர் மேலும் கூறியதாவது; அரசியல் சட்டத்தின் வடிவத்துக்கு ஏற்றார் போல் நிர்வாகத்தின் வடிவமும் அமைய வேண்டும். இரண்டும் தொடர் புடையனவாய், ஒத்திசைவோடு செயல்பட வேண்டும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். நாம் சரிவர நிர்வாகம் செய்யாமல் போனால், நிர்வாக அமைப்புக்குரிய வடிவத்தை நாம் மாற்ற, கெடுக்க எத்தனித்தால், அரசியல் சட்டத்தின் உள்ளுரைக்கு, உள்ளார்ந்த பண்புக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டு, அதற்கு ஏற்ப நடக்காமல் அதை சிதைப்பவராகி விடுகிறோம்.

அரசியல் சட்டம் வகுத்துள்ள உன்னத அறங்கள் தாமாகவே என்றுமே மக்களைச் சென்று அடையப் போவதில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். அவ்வறங்களை மக்கள் தாமாக ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். அந்த அறங்களை ஏற்க, அவற்றின்படி நடக்க மக்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இவ்வகையில் அரசியல் சட்டம் கண்டுள்ள அறங்களை நாம் கவனத்துடன் வளர்த்தெடுக்க வேண்டும். காரணம், இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை, சனநாயகமற்ற சமூக வாழ்வை அறிவிக்கும் அரசியல் மேல்பூச்சுதான் சனநாயகமே தவிர, அது நமது சமூக வாழ்வில் ஆழ வேரூன்றிய பண்பல்ல.

தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு நமது அரசியல் சட்டத்தில் உறைந்துள்ள சாத்தியப்பாடுகளை இனங்காட்டுவதாக அமைந் துள்ளது. அரசும் சமுதாயமும் நேரடியாகவோ மறைமுகமாகவோ செலுத்தம் வன்முறை, கட்டுப்பாடு ஆகியவற்றிலிருந்து அனைத்து குடிமக்களையும் மீளச் செய்து, அனைவரும் சரிநிகர் சமானமாக, சமத்துவமாக வாழ நமது அரசியல் சட்டம் வழிவகுத்துள்ளது. விடுதலை என்பது சலுகையுற்ற ஒரு சிலருக்கு மாத்திரம் உரித்தானது என்பது போய் அது அனைவருக்குமானது என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் நமது அரசியல் சட்டம் வேறுபாடுகளை அங்கீகரிக்கிறது, கொண்டாடுகிறது, மாறுபட்ட கருத்துடையவர் களைப் பாதுகாக்க கூடியதாக உள்ளது. பாலியல் விருப்பம் என்ற ஒரு விஷயத்தின் காரணமாக ஒருபாலுறவாளர்களை அவதூறுக் குள்ளாக்குவது அல்லது குற்றவாளிகளாக ஆக்குவது அரசியல் சட்ட நீதிக்கு, அறத்துக்கு எதிரானதாகும்.

தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பின் இந்த வரிகளைக் கொண்டே இந்த கட்டுரையை முடிக்க விரும்புகிறேன் ,

”ஒழுக்கநெறி சார்ந்த மனக்கொதிப்புகள் எவ்வளவுதான் பரவியிருந்தாலும், அவை, தனிப்பட்ட நபர்களின் அடிப்படை உரிமைகளான சுய கௌரவம் மற்றும் தனிச்செயல்பாடுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவோ தடை செய்யவோ போதுமான அடிப்படைக் காரணமாக இருக்க முடியாது. சரியான முறைமை களின் படி அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதாக இருந்தாலும் அரசிய லமைப்புச் சட்டம் சார்ந்த ஒழுக்க நெறி விதிகள் தாம் கூடுதலாக மதிக்கப்பட வேண்டும். ”

நமது போராட்டங்களின் எல்லைகள் விரிவடையட்டும். நாம் தொடர்ந்து போராடுவோம்.

References

Prem Chowdhry, Contentious Marriages, Eloping Couples: Gender, Caste, and Patriarchy in North India, OUP, Delhi: 2007.

J Devika, ‘Housewife, Sexworker, Reformer: Controversies over Women Writing their Lives in Kerala,’ Economic and Political Weekly, April 29, 2006, pp. 1675-1683.

V Geetha, ‘Sexuality and violence: some thoughts on a worrisome subject’,Inter-Asia Cultural Studies, vol 3 no 3, 2002, pp. 407-417

 Kalpana Kannabiran, ‘Gender, Sexual Violence, and the Idea of Intimacy, presentation at the Plenary 1 - Violence in Intimacy, ISA 17th World Congress of Sociology, Goteborg, Sweden, 11-17 July 2010.

Chayanika Shah, ‘The Roads that (E)Merged: Feminist Activism and Queer Understanding’, in A. Narrain & G. Bhan (eds.) Because I have a Voice: Queer Politics in India, Yoda Press, New Delhi: 2005, pp.143-154.

Rajeswari Sunder Rajan, ‘The Prostitution Question(s): Female Agency, Sexuality, and Work’ in The Scandal of the State: Women, Law, and Citizenship in Postcolonial India, Permanent Black, Delhi: 2003.

(மீனா கோபால் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய இக்கட்டுரையை வ.கீதா மற்றும் சாலை செல்வம் ஆகியோர் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளனர்) 

Pin It