தன்னைப் புதுப்பித்துக் கொள்ளாத தத்துவமும் புரட்சியும் காலப்போக்கில் சடங்காகிப் போகும். மேநாளும் காலத்திற்கேற்ப, தேசத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்; இல்லையேல் மேநாள் நிகழ்வுகள் சடங்காகிப் போகும்.

       மே நாளைத் தொழிற்சங்கத்திற்குரிய நாளாக மட்டும் இந்தியாவில் சுருக்கிவிட்டதால், அது விரிவான தளங்களுக்குப் போய்ச் சேரவில்லை.     மே நாளை தொழிலாளர்களின் வேலை நேரம், சம்பளம் சார்ந்த கோரிக்கை நாளாக குறுக்கி விட வேண்டாம் என்று லெனின் எச்சரித்தார். ஆனால், தமிழ்நாட்டில் அது அப்படித்தான் ஆனது.

       நிகரமைப்புரட்சி, தேசிய விடுதலைப் புரட்சி போன்ற சமூகப்புரட்சிகளுக்கான எழுச்சியைப் பெற - வெற்றி பெற்ற புரட்சியின் சமூக நோக்கங்களை நினைவூட்ட மே நாளைப் பயன்படுத்த வேண்டும். இங்கு தொழிற்சங்கத்தின் கையடக்க விழாவாக மே நாள் சிறுத்துப் போனது. தொழிற்சங்கமோ தொழிலாளிகளின் சம்பள பேர நிறுவனமாக சிறுத்துப் போனது.

       தொழிலாளிக்கு உழைப்புக்கேற்ற ஊதியம், ஓய்வு மற்றும் மனித உரிமைகள் தேவை. இவை போக, தொழிலாளிக்கும் மொழி உண்டு, தேசம் உண்டு என்பதை ஏற்க வேண்டும். தொழிலாளிக்கும் ஒரு தத்துவம் வேண்டும். தொழிலாளியும் சமூகத்தில் ஓர் உறுப்பு. சமூகத்திற்கு உட்பட்டவர்தான் தொழிலாளி. தொழிலாளிக்கு உட்பட்டதல்ல சமூகம்.

       கம்யூனிஸ்ட்க் கட்சியைத் தொழிலாளி வர்க்கக் கட்சி என்று சொல்லும் பழக்கம் இருந்தது. இதனால் தொழிலாளி வர்க்கம் என்று சொன்னால் அது கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் குறிக்கும் என்ற புரிதல் ஏற்பட்டது. தொழிலாளி வர்க்கத்திற்குக் கம்யூனிஸ்ட் கட்சிதான் அரசியல் குறித்தும் நிகரமை குறித்தும், பொதுவுடைமை குறித்தும் கல்வி கற்றுத் தரவேண்டும். இதற்குக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அரசியல் வேண்டும். அரசியல் என்பது என்ன? எதிரிவர்க்கத்தின் கருவியாய் உள்ள அரசு எந்திரத்தைக் கைப்பற்றி அதைத்தனது திட்டத்திற்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்வது குறித்த கொள்கையின் சாரம்தான் அரசியல் (அரசு+இயல்=அரசியல்).

       இந்தியாவின் அரசு எந்திரத்தைக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி கைப்பற்றுவதென்றால் அதற்கு அனைத்திந்தியாவிலும் எல்லா தேசிய இனங்களிலும் சீரான வளர்ச்சி பெற்ற அனைத்திந்தியக் கட்சி தேவை. அவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சி எதுவும் உருவாகவில்லை. ஏன்? இந்தியா ஒரு தேசமல்ல் ஒரு துணைக் கண்டம். இதில் பல தேசங்கள் இருக்கின்றன. சில தேசங்களில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. ஒவ்வொரு தேசத்தின் அரசியல், பொருளியல், பண்பியல் தேவை வெவ்வேறாக இருக்கின்றன.

       இந்தியாவை ஒற்றைத் தேசமாகப் பார்ப்பது மார்க்சிய - லெனினிய வரையறுப்புகளுக்கு எதிரானது. சாதாரண சமூக அரசியல் அறிவுக்கும் எதிரானது. ஏகாதிபத்தியப் பெருமுதலாளிய, பார்ப்பனியப் பார்வை அது. இந்தியா பல்தேசிய நாடு. பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை ஒவ்வொருதேசிய இனத்திற்கும் பிறப்புரிமை என்பது லெனினியம். இந்தியாவில் இந்த லெனினியப் பார்வையை ஏற்க மறுப்பது மட்டுமல்ல, எதிர்க்கின்றன கம்யூனிஸ்ட் கட்சிகள். எனவே அக்கட்சிகளுக்கென புரட்சிகர அரசியல் முழக்கமில்லை.

       இந்திய ஏகாதிபத்தியப் பெருமுதலாளிகளின் ஒற்றை அரசியல் முழக்கமான “இந்திய ஒருமைப்பாடு” என்பதே இங்கே கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் அரசியல் முழக்கம். இந்த “இந்திய தேசிய ஒருமைப்பாட்டு” முழக்கம் புரட்சிகரமானது அன்று. எதிர்ப்புரட்சித் தன்மையது. ஓர் எதிர்ப்புரட்சி முழக்கத்தைத் தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் தொழிலாளி மக்களிடம் பரப்புகின்றன.

       வீரஞ்செறிந்த போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் மாவோயிஸ்ட்டுகள். ஈகம் புரிகின்றனர். மாவோயிஸ்ட்டுகள் மீதும் பழங்குடி மக்கள் மீதும் அரசு நடத்தும் போரை எதிர்த்து, சனநாயக சக்திகள் போராட வேண்டும். மாவோயிஸ்ட்டுகளின் அரசியல் முழக்கமென்ன? இந்திய அரசு எந்திரத்தைக் கைப்பற்றுவது! மலைவாழ் பழங்குடி மக்களுக்கு வெளியே சமவெளிப் பகுதிகளில் அரசு எந்திரத்தோடு மோதும் வலுப்பெற்றுள்ளார்களா மாவோயிஸ்ட்டுகள்? இல்லை. பிறகு எப்படி தலைநகர் தில்லியை அவர்களால் கைப்பற்ற முடியும்?

       எதிர்காலத்தில் அவ்வாறான வலுப்பெறலாம் என்று கருதக்கூடும். பழங்குடி மக்களிடம் மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்குப் பெற்றதற்குக் காரணம் அம்மக்களின் தாயகப் பாதுகாப்புப் போராட்டத்தை நடத்துவது தான். இது இனப்போராட்டம் ஆகும்.

       சமவெளியில் வெறும் பொருளியல் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினால், அது ஒருவகைத் தொழிற்சங்கப் போராட்டமாகத்தான் இருக்கும். ஏற்கெனவே இப்போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் நடத்திக் கொண்டுள்ளன. மாவோயிஸ்ட்டுகள் அதை ஆயுதப் போராட்டமாக நடத்தலாம். ஆனால் பழங்குடி மக்களிடம் பெற்ற அளவு செல்வாக்கைச் சமவெளிகளில் பெற முடியாது. எனவே அனைத்திந்தியப் புரட்சி என்பதற்கு வாய்ப்பில்லை.

       பல்தேசக் கூட்டமைப்புகள் இப்பொழுது இந்தியாவில் ஏற்பட வாய்ப்பில்லை. உலக அளவிலும் அதற்கான வாய்ப்பில்லை. சேர்ந்திருந்த பல்வேறு பல்தேசக் கூட்டமைப்புகள் பிரிந்துவிட்டன.

       1. சோவியத் ஒன்றியம், 2. யூகோஸ்லாவியா, 3. செக்கஸ்லோவாக்கியா போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள். எரித்திரியா, கிழக்குத் திமோர் போன்ற புதிய தேசங்கள் பிறந்துள்ளன. ஸ்பெயினில் கட்டலான், பார்சிலோனா ஆகியவை விடுதலை கோருகின்றன. பிரிட்டனில், ஸ்காட்லாந்து தனிநாடு கேட்கிறது. கனடாவில் கியூபெக் தனிநாடு கோருகிறது. இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றில் தனிநாட்டுப் போராட்டங்கள் நடக்கின்றன. ஈழவிடுதலைப் போர் நாம் அறிந்ததே. எனவே உலகப் போக்கை உணர்ந்து கொள்ள வேண்டும்.

       தேசிய விடுதலை கோரும் இயக்கங்களிடையே உறவும் ஒன்றுக்கொன்று உதவியும் வாய்ப்பதே இன்று சர்வதேசியத்தை நோக்கிய முதல்படி முன்னேற்றம். சர்வதேசியம் என்று வரும்பொழுது எச்சரிக்கை மிகமிகத் தேவை. பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற உயர்ந்த கோட்பாட்டை சோவியத் ஒன்றியமும், சீனாவும் தங்கள் நாடுகளின் நலன்களுக்காகவே மிகுதியும் பயன்படுத்திக் கொண்டன. சொந்தநாட்டு நலனுக்காகத் தோழமைக் கட்சிகளின் தனித் தன்மையைச் சிதைத்தன. அந்தந்த நாட்டுப் புரட்சிப்பாதையில் குறுக்கிட்டு, தன்னல நோக்கில் வழிகாட்டின.

       தமிழர்களும் தமிழ்ப்பாட்டாளிகளும் இந்த படிப்பினைகளை மனதில் கொண்டு தமிழ்த் தேசியப் புரட்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மே நாளை தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக கடைபிடிக்க வேண்டும்.

       அனைவர்க்கும் மே நாள் வாழ்த்துகள்!

Pin It