சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் முதல்வர் கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற வழக்கறிஞர்கள் முதல்வர், மத்திய அமைச்சர் கண்முன்னே தாக்கப்பட்டனர், மேலும் தாக்குதல்களுக்கு ஆளான வழக்கறிஞர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். ஈழப் பிரச்சினை கொளுந்துவிட்டு எரிந்தபோது, தங்களது ஆட்சியை யாரெல்லாம் விமர்சித்தார்களோ அவர்கள் மீது தேச துரோக சட்டம் பாய்ந்தது (பின்னர் அவர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியது). வேலை தேடி போராட்டம் நடத்தும் இளைஞர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகிறது. இவை எல்லாம் அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள். வெளிவராதவை ஏராளம். இது போன்ற பிரச்சனைகளை களைய என்ன வழி என்று இந்தக் கட்டுரையில் கூறுகின்றார் பிரகாஷ் சிங்.

பிரகாஷ் சிங்கைப் பற்றி: இவர் உலகிலேயே மிகப்பெரிய துணை இராணுவக் குழுவான இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர். மேலும் உத்திர பிரதேசம் மற்றும் அசாமின் காவல்துறை தலைமை அதிகாரியாக பணியாற்றிவர்.

****

babri_masjid_341நந்திகிராமத்தில் நடந்த வன்முறையைத் தவிர்த்திருக்க முடியாதா? 2002 குஜராத் இனக்கலவரத்தை தடுத்திருக்க முடியாதா? நம்மால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற இயலும், இது போன்ற கலவரங்கள் தடுக்க முடியாத நிலையில் ஏற்பட்டிருந்தாலும் கூட இந்த வன்முறைகள் மேலும் பரவாமலும், இதன் மூலமாக ஏற்பட்டிருக்கும் இழப்புகளின் எண்ணிக்கையையும், வலியையும் குறைத்திருக்க இயலும், காவல்துறை அரசியல்வாதிகளின் கட்டுபாட்டில் இல்லாமல் இருந்திருந்தால்.

  காவல் துறை சீரமைப்பைப் பற்றி நாம் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருக்கின்றோம். செப்டம்பர் 22, 2006 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பு காவல் துறையினை அரசியல்வாதிகளின் தளைகளிலிருந்து விடுவித்தது; 145 வருட காவல் துறை கட்டமைப்பை ஒரு தீர்ப்பில் மாற்றி எழுதியது. 1861ல் காவல்துறை சட்டம் ஆங்கிலேயனின் அரசியல் நலனுக்காக உருவாக்கப்பட்டது. 1857ல் நடைபெற்ற மக்கள் புரட்சி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடித்தளத்தை சற்று பலமாகவே தாக்கியது. இது போன்ற கலகங்கள் நடைபெறாமல், தனது ஏகாதிபத்தியத்தை பாதுகாத்து கொள்ள ஆங்கிலேய அரசு உருவாக்கியது தான் காவல் துறைச் சட்டம். ஏகாதிபத்தியம் நம்மை விட்டுச் சென்றபின்பு இந்திய அரசியல் தலைவர்கள் இந்த காவல் துறை கட்டமைப்பை மாற்றி காவல் துறையை மக்களுக்கான ஒன்றாக மாற்ற முயன்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கவே இல்லை. தொடர்ந்து வந்த அரசுகள் காவல் துறையை தனது சொந்த அரசியல் விருப்பு வெறுப்பு சார்ந்து தவறாகவே பயன்படுத்தி வந்தன.

சுதந்திரத்திற்கு பின்னர் பல அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களும், சமூக மாற்றங்களும் நடைபெற்ற பின்னரும் இந்த மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் காவல் துறை கட்டமைப்பில் எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லையே என்று எண்ணியதால் 1977ல் இந்திய அரசு தேசிய காவல் துறை ஆணையத்தை நிறுவியது. இந்த தேசிய காவல் துறை ஆணையம் 1979லிருந்து 1981க்குள், காவல் துறை அடி நிலையிலிருந்து மேல் மட்டம் வரை எவ்வாறு இயங்க வேண்டும் என்று எட்டு விரிவான அறிக்கைகளை அரசுக்கு கொடுத்தது.

 ஆனால் மைய அரசோ அந்த எட்டு அறிக்கைகளை கண்டுகொள்ளவே இல்லை. 1983ல் இந்த அறிக்கைகள் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டன. மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கண்துடைப்புக்காக சொல்லப்பட்டது. இந்த அறிக்கையின் சில இடங்களில், தேசிய காவல் துறை ஆணையம் ஷா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கோரியது. ஆனால் பல மாநில அரசுகள் இந்தப் பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரித்து விட்டன. மேலும் இந்த அறிக்கையின் சில இடங்களில் அரசியல் மற்றும் காவல் துறை செயல்படும் முறையையும் அதன் கட்டமைப்பையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. தற்சமயம் நடைபெற்றுவரும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை வெளிக் கொணரவும், அதை சரி செய்தவதற்கான வழிகளை உருவாக்குவதே இது போன்ற கடுமையான விமர்சனங்களின் நோக்கம். இவ்வளவு தெளிவான, இந்த தேசிய காவல் துறை ஆணையத்தின் பல முக்கிய பரிந்துரைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது யாருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காது.

 இந்த பரிந்துரைகள் எல்லாம் 1996ல் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு பொது நல வழக்கின் மூலமாக மீக்கொணரப்பட்டன. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோது உச்ச நீதிமன்றத்தின் கவனம் மேலும் சிலவற்றின் மீதும் விழுந்தது. இந்தியாவையே உலுக்கிய இரு பயங்கர வன்முறைகளே அது. இந்த இரு பயங்கர வன்முறைகளும் காவல் துறையினால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாமல் போனதால் ஏற்பட்டவை. 1984ல் நடந்த தில்லி கலவரம், 1992ல் அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தது.

1984 தில்லி கலவரத்தை ஆராய்ந்த நானாவதி கமிட்டி பின்வருமாறு பரிந்துரைத்தது ”எந்த வித அரசியல் தலையீடுகளும் இல்லாத சுதந்திரமான மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ள காவல் துறையே இது போன்ற கலவரங்களை உடனடியாக கட்டுப்படுத்த முடியும்”.

 இந்த பொது நல மனு நீதிமன்றத்தில் இருக்கும்போதே இன்னொரு வன்முறையும் காவல் துறையின் ஒரு தலைபட்சமான நடைமுறைகளால் இந்தியாவில் நடைபெற்றது. 2002 குஜராத் இனக்கலவரம். இந்த மதக்கலவரத்தை ஆய்வு செய்த தேசிய மனித உரிமை ஆணையம் இவ்வாறு கூறியது ”இந்த மதக்கலவரமும், இந்தியாவில் மற்ற இடங்களில் நடைபெற்ற கலவரங்களும், இதற்கு முன்னரே தேசிய காவல் துறை ஆணையம் பரிந்துரைத்த காவல் துறை சீரமைப்பை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. இது காவல் துறையின் விசாரணைகளில் ஏற்படும் அரசியல் குறுக்கீடுகளை தவிர்க்க உதவும்”.

இந்த பொது நல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே அரசு காவல் துறையை சீரமைக்க வேண்டுமா என திட்டமிட்டே மூன்று ஆணையங்களை அமைத்தது. 1) ரிபேரியோ ஆணையம் 1998, 2) பத்மநாபன் ஆணையம் 2000, 3)குற்றவியல் தண்டணைச் சட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய மாலிமாத் ஆணையம் 2002. இந்த மூன்று ஆணையங்களும் புதிதாக உருவாகிவரும் சவால்களை சந்திக்க காவல் துறை உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும் என்ற ஒரே முடிவுக்கு வந்தன. இந்த காவல் துறை சீரமைப்பு என்பது இன்று வரை அமல்படுத்தாததற்கு ஒரே காரணம் அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பே. 

காவல் துறை சீரமைப்பில் அரசுக்குத் தேவையான நேரத்தை நீதிமன்றம் வழங்கியது. இறுதியாக உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. 1)இந்தப் பிரச்சனையில் உள்ள முக்கியத்துவத்தை கருதியும், 2) சட்டத்தைப் பாதுகாக்கவும், பலப்படுத்துவதற்குமான அவசர தேவை கருதியும், 3) இந்த வழக்கு கடந்த பத்து வருடங்களாக நிலுவையில் இருப்பதாலும், 4) பல்வேறு ஆணையங்களும் நாட்டின் காவல் துறை சீரமைப்பை வலியுறுத்தியுள்ளதாலும் 5) எப்பொழுது காவல் துறை சீரமைப்பு நிகழும் என்பது கேள்விக்குறியாக இருப்பதால், மேலும் நம்மால் காத்திருக்க இயலாத காரணத்தினால், காவல் துறை சீரமைப்பு குறித்த சட்டம் மைய / மாநில அரசுகள் இயற்றும் வரை கீழ்க்காணும் வழிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

 இந்த வழிமுறைகள் புதிய காவல் துறை சட்டம் வரும் வரை செயல்படுத்தப்படும். உச்ச நீதிமன்றம் மாநில அளவில் மூன்று அமைப்புகளை உருவாக்க வேண்டும். இவை விசாரணைகளில் ஏற்படும் வெளிப்புற(அரசியல்) குறுக்கீடுகளை களைவதற்கும், சுதந்திரமாகவும் அதே சமயம் தனது செயல்களுக்கான பொறுப்புடனும் காவல் துறை செயல்பட உதவும். அவையாவன,

 1984_riots1) கலவரங்களைத் தடுக்கவும், மக்களுக்கான சேவையை நோக்கியும் காவல் துறை செயல்படுவதற்கான விரிவான வழிமுறைகளை வகுத்து செயல்படுத்த ஒரு மாநில பாதுகாப்பு ஆணையம்.

 2) மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பதவிக்கு கீழே உள்ள காவல் துறை அதிகாரிகளை நியமித்தல், பதவி உயர்வு, பதவி மாற்றம் மற்றும் அவர்களுக்கான பணி தொடர்பான வேலைகளை செய்யவும், மேலும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் அவரது பணிக்கு மேலே உள்ள அதிகாரிகளை நியமித்தல், பதவி உயர்வு மற்றும் பதவி மாற்றம் போன்றவற்றை மாநில அரசுக்குப் பரிந்துரை செய்வதற்கு ஒரு தலைமை காவல்துறை இயக்குநரையும், நான்கு மூத்த அதிகாரிகளையும் கொண்ட காவல்துறை தேர்வாணையம்.

 3) காவல் துறை அதிகாரிகளின் மேலான புகார்களை விசாரிக்க மாவட்ட மற்றும் மாநில அளவில் காவல்துறை புகார் மையம்.

மேலும் இந்தத் தீர்ப்பில், மைய பணியாளர் தேர்வாணையத்தால் பரிந்துரைக்கப்படும் தகுதியான மூன்று மூத்த அதிகாரிகளிலிருந்தே மாநில அரசுகள் காவல் துறை தலைமை அதிகாரியை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேலும் இவ்வாறு நியமிக்கப்படும் தலைமை காவல் துறை இயக்குநர் குறைந்தபட்சம் இரண்டு வருடம் அதே பொறுப்பில் இருக்க வேண்டும். மேலும் களத்தில் செயல்படும் காவல்துறை அதிகாரிகளான காவல்துறை தலைவர், காவல் துறை துணைத் தலைவர், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர்களும் இரண்டு வருடம் அதே பொறுப்பில் இருக்க வேண்டும்.

இட மாறுதல்களும், பதவி மாறுதல்களும் மாநிலங்களில் மிகப் பெருமளவில் தற்பொழுது நடைபெறுகின்றன. எப்பொழுதெல்லாம் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் உயர் பதவியிலிருந்து தொடங்கி மாவட்ட தலைமைப் பதவி வரை பதவி மாறுதல்கள், இட மாறுதல்கள் நடைபெறுவது வழக்கமாகி விட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அமல்படுத்தப்பட்டால் இது போன்ற பதவி, இட மாறுதல்களெல்லாம் அரிதாகி விடும்.

 விசாரணை செய்யும் காவல் துறை அதிகாரிகளையும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகளையும் பிரித்து வைக்க வேண்டும். இது விரைவாக விசாரணை நடக்கவும்,மக்களுடன் ஒரு நல்ல உறவை ஏற்படுத்தவும் உதவும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

 மைய காவல் துறை தலைமை அதிகாரிகளை தெரிவு செய்யவும், அங்கு பணியாற்றும் அதிகாரிகளின் பணி சூழலை மேம்படுத்தவும் அதன்மூலம் அந்தப் படைகளை அடுத்த தளத்திற்கு நகர்த்துவதற்காக மைய அரசு ஒரு தேசிய பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 சோலி சரப்ஜீ கமிட்டி ஒரு உதாரண காவல் துறை சட்டத்தையும் மைய அரசுக்கு 2006 அக்டோபர் 30 அன்று கொடுத்துள்ளது. இந்த சட்டம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் உள்ள அடிப்படைக் கூறுகளை எடுத்து கொண்டு, சற்று வேறு வகையில் அதை நடைமுறைபடுத்துவது எவ்வாறு என கூறியுள்ளது. அதாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள ”மாநில பாதுகாப்பு ஆணையம்” சோலி சரப்ஜீ கமிட்டியில் “மாநில காவல்துறை ஆணையம்” என்றும், “மாநில காவல்துறை தேர்வாணையம்” என்பது ”மாநில காவல்துறை தேர்வாணைக் குழு” என்றும், “காவல் துறை புகார் ஆணையம்” என்பது "காவல்துறை பொறுப்பு ஆணையம்” என்றும் மாற்றப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றமும், சோலி சரப்ஜீ கமிட்டியும் காவல்துறை உயர்நிலை அதிகாரிகளின் பணி வருடத்திலும், விசாரணை செய்யும் காவல் துறை அதிகாரிகளையும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகளையும் பிரித்து வைக்க வேண்டும் என்பதிலும் ஒத்த கருத்து கொண்டுள்ளன.

 இந்த சீரமைப்பு காவல் துறையின் புகழுக்காக அல்ல, நாட்டில் உள்ள மக்களை நல்லமுறையில் பாதுகாக்கவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும், அரசமைப்பை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லவும் என புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தலைமுறை காவல்துறை அதிகாரிகள் நிகழ்வுகளுக்கு தகுந்தாற்போல வளர்ந்து மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்.

 இந்த மாறுதல்கள் அவ்வளவு எளிதாக நடந்துவிட முடியாது. அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, உத்தராஞ்சல், கோவா போன்ற பத்து மாநிலங்களே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை முழுமையாகவோ (அ) பெரும்பான்மையாகவோ ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. மீதமுள்ள பெரும்பான்மையான மாநிலங்கள் இதை செயல்படுத்துவதில் இலுவை நிலையையே தொடர்கின்றன.

இந்தத் தீர்ப்பை சிறிது கூட மதிக்காத மிக மோசமான மாநிலங்கள் தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, உத்திரபிரதேஷ். நீதிமன்றங்களுக்கு மாநிலத்தின் அரசமைப்பை மாற்றுவதற்கு உரிமை இல்லை என்று வாதாடுகின்றது தமிழ்நாடு. மகாராஷ்ட்ரா அரசோ உச்ச நீதிமன்றத்தின் வழிமுறைகள் “நடைமுறையில் உள்ள அமைப்புக்கு தொடர்பில்லாத வழிமுறைகள்” என்று கூறுகின்றது. உத்திரப் பிரதேசமோ காவல்துறை சீரமைப்பு ஆணையத்தை உருவாக்கி ஒரு சிறப்பு சட்டத்தை உருவாக்க முயன்றுவருகின்றது.

 மேலும் பீகார்,சட்டீசுகர், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், குஜராத், கேரளா மற்றும் இராஜஸ்தான் போன்ற ஒன்பது மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தடுக்கும் வகையில் சட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளன. பீகார் காவல் துறை சட்டம் 2007ல் உருவாக்கப்பட்ட மிக மோசமான ஒரு சட்டம் ஆகும்.

 இது போன்ற காவல் துறை சட்டங்கள் நடைமுறைக்கு வரும் பொழுது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத மாநிலங்களில் பொது மக்களை பெருமளவில் ஒன்று திரட்டி அந்தந்த மாநிலங்களுக்கு நெருக்குதலை உண்டாக்க வேண்டும்.

 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படும்போது, காவல் துறை வேலை செய்யும் விதமே மாறி விடும். ஆட்சியாளர்களின் காவல் துறை என்பது மக்களுக்கான காவல் துறை என்பதாக மாறும்.

மூலம்: பிரகாஷ் சிங்

மூலப்பதிவிற்க்கான சுட்டி : http://www.littlemag.com/security/prakashsingh.html

மொழியாக்கம் ப.நற்றமிழன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It