இந்தக் களேபரங்களுக்கிடையில் என் முதல் சிறுகதைத் தொகுப்பு வெயிலோடுபோய் வெளியீட்டு விழாவும் இடையில் நடந்தது. முப்பது வயசில் பூமணி தன் முதல் நாவலை எழுதி வெளியிட்டுவிட்டார். நாம முதல் சிறுகதை தொகுப்பையே இப்பத்தான் வெளியிடுகிறோம் என்கிற ஒருவிதமான வருத்தம்தான் அந்த நாட்களில் எனக்கு மேலோங்கி இருந்தது. அதிகம் எழுத முடியாமல் போனதற்கு தொழிற்சங்கப் பணிகள்தான் காரணம் என்று எல்லோரையும் போல நானும் சொல்லிக் கொண்டேன். இந்த மாதிரியான சமாதானங்களை வாழ்நாள் பூராவும் சொல்லிக் கொண்டு திரிகிறேன். ஆனால் அதில் துளியும் உண்மையில்லை என்பதை என் மனம் அறியும். தொழிற்சங்க இயக்கம் என்னை எழுதாதே என்று கட்டியா போட்டிருந்தது? ஊத்து இல்லாமல் தண்ணீர் எங்கிருந்து பீறிட்டு வரும்? ஒரு படைப்பாளிக்கு அழிவு எப்போதுமே அவனுக்குள்ளிருந்துதான் வரும். எந்த வெளி சக்தியாலும் படைப்பு மனதை அழித்துவிடமுடியாது என்பது என் திண்ணமான எண்ணம். அந்தக் கொடுமையான வாழ்க்கைக்கு நடுவிலும் ஜி.நாகராஜன் எப்படி எழுதினார்? யார் மேலேயாவது பழியைப் போடுவதுதானே நம்ம மத்தியதர வர்க்கத்து மனோபாவம். இப்படிப் பல இலக்கியப் பழிகளை குடும்பப் பழிகளை ஒரு குற்றமுமில்லாத தொழிற்சங்க இயக்கம் சுமந்து கொண்டு வருகிறது.
இக்காலப்பகுதியில் தமிழ்நாட்டில் ஒரு மக்கள் அறிவியல் இயக்கத்தைத் துவக்குகிற ஆரம்ப முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. சென்னையில் சில சமூக உணர்வுமிக்க விஞ்ஞானிகள் நடத்தி வந்த ஒரு சைன்ஸ் கிளப் முன்முயற்சி எடுத்தது. கேரளத்திலிருந்து டாக்டர் எம்.பி.பரமேஸ்வரனும் டாக்டர் கே.கிருஷ்ணகுமாரும் பங்கேற்ற இரண்டுநாள் அறிவியல் முகாம் ஒன்று பாண்டிச்சேரியில் நடந்தது. அன்று ஒன்றுபட்டிருந்த நெல்லை மாவட்டத்திலிருந்து நான், பேராசிரியர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் மற்றும் ஹெவி வாட்டரில் பணியாற்றிய கிருஷ்ணசாமி ஆகிய மூவரும் சென்றிருந்தோம். டாக்டர் சுந்தரராமன் அம்முகாம் பொறுப்பாளராக இருந்தார். அம்முகாமில் பங்கேற்ற எல்லோருமே பேராசிரியர்களாக அல்லது விஞ்ஞானிகளாக ஏதோ ஒரு வகையில் அறிவியல் மற்றும் கல்வி தொடர்பான ஆளுமைகளாக இருந்தார்கள்.
அஞ்சலகத்திலிருந்து நானும் ரயில்வேயிலிருந்து த.வி.வெங்கடேஸ்வரன் என்கிற இளைஞனும் விதிவிலக்காக அங்கே கலந்து கொண்டிருந்தோம். அந்த முகாம் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக என் பார்வையை மேலும் விசாலமும் கூர்மையும் உடையதாக ஆக்கியது. குறிப்பாக எம்.பி.பரமேஸ்வரனின் உரை (அவர் ஒரு அணு விஞ்ஞானி. விமான விபத்தில் இறந்து போன ஹோமி பாபாவின் சக விஞ்ஞானி) விஞ்ஞானத்தை விளக்குவதாகத் துவங்கி மக்கள் அறிவியல் இயக்கம் ஒரு சமூகப்புரட்சிக்கு எப்படி அடிப்படையாக அமையும் என்பதை என்றென்றும் மறக்கமுடியாத படிக்கு எடுத்துரைத்தது.
அங்கு வாழ்வில் முதன்முறையாக டெலஸ்கோப் மூலம் நிலவைப் பார்த்தது பிற கோள்களைப் பார்த்தது மறக்க முடியாத அனுபவமாக இன்றும் நிற்கிறது. நிலாவில் வைப்பாட்டியை டெலஸ்கோப்பில் பார்க்க முடியாமல் அது வெறும் புள்ளிகளும் பள்ளங்களுமாகத் தெரிந்தது பெரிய ஏமாற்றமாக இருந்தது. நிலாவைப் பற்றிய சித்திரம் அன்று அழிந்தது. திரும்பி வரும்போது இது வரை நாம் பார்த்து வந்த வேலைகள் அத்தனையும் வேஸ்ட் என்கிற உணர்வு மேலோங்க நாங்கள் மூவரும் பேசிக்கொண்டு வந்தோம். ஊர் திரும்பிய பிறகு தொழிற்சங்க வேலைகள் பற்றி நிறைய கேள்விகளும் விமர்சனங்களும் தினசரி மனசில் முளைத்துக் கொண்டிருந்தன.
மத்தியதர வர்க்கத்துத் தொழிற்சங்கத்தில் என்னதான் மாடாக உழைத்தாலும் ஒரு ட்ரான்ஸ்பர் வாங்கித் தரமுடியவில்லையானால் சங்கத்தை விட்டு வேற சங்கத்துக்குப் போய் விடுவான். எதுக்காகப் போட்டு இப்படி நாம அலையணும் என்று சலிப்பும்கூடத் தோன்றலாயிற்று. 1984க்குப் பிறகு ஸ்ட்ரைக் பற்றிய பயம் போய்விட்டது. 88இல் என்று நினைக்கிறேன். அஞ்சல்துறைக் கோரிக்கைகளுக்காக எங்களுடைய சங்கமும் ஐ.என்.டி.யு.சி சங்கமும் இணைந்து ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தன.
நாங்கள் மீண்டும் சைக்கிள்களில் கொடிகளைக் கட்டினோம். இப்போது ஒரு புதிய விசயமாக ஐ.என்.டி.யூ.சி சங்கத்தின் செயலாளராக முற்றிலும் புதிய இளைஞர் ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் எங்கள் குழுவோடு இணைந்து சைக்கிள் பயணம் வந்தார். அவர் பெயர் செல்வ கிருஷ்ணன். எங்கள் வட்டத்தின் தோழமை உணர்வலையில் சிக்கி அவருடைய சங்கத்திலிருந்து மனரீதியாக விலகத் துவங்கினார். அந்த விலகிய மனநிலையை நான் புரிந்து கொண்டேன. அந்த யாத்திரை முடிந்ததும் அவருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அன்று எனக்கு இருந்த அறிவின் அடிப்படையில் சங்கம்னா என்னா - ஐ.என்.டி.யு.சி மாதிரியான அமைப்புகளெல்லாம் எப்படி உண்மையான தொழிற்சங்கங்களாக ஆக முடியாது என்பதையெல்லாம் விளக்கி வரிந்து வரிந்து ஒரு ஐந்தாறு பக்கத்துக்கு எழுதினேன்.
எதிர்பார்த்தபடி கல் உருண்டது. அவர் பதிலுக்கு மேலும் சில கேள்விகள் எழுப்பிப் பதில் கடிதம் போட்டார். அதற்கு மீண்டும் ஒரு நீண்ட கடிதம் நான் எழுதினேன். ஏதோ பெரிய காந்தி-ஜோஷி கடிதப் போக்குவரத்துப் போல அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. ஆபீசில் இருவரும் பார்த்தால் இது பற்றிப் பேசிக் கொள்வதில்லை. ஏனெனில் என்னோடு பேசினால் அவருடைய சங்கத்தார் அவரைச் சந்தேகமாகப் பார்ப்பார்கள். அதே நாட்களில் அம்பாசமுத்திரத்தில் பேங்க் ஆப் தமிழ்நாடு கிளையின் ஊழியரான முத்தையா எங்கள் வழிக்கு வந்து எங்களோடு காரசாரமாக அரசியல் பேசிக் கொண்டிருந்தார். ஏ.ஐ.டி.யு.சி சார்புடைய ஒரு வங்கித் தொழிற்சங்கத்தில் அப்போது அவர் பொறுப்பிலிருந்தார்.அவர் CPI திட்டத்தைவிட உங்க கட்சித் திட்டம் சரியானதுன்னு எப்படிச் சொல்றிங்க என்கிற நேரடியான அரசியல் கேள்வியோடு வந்திருந்தார். நான் என் வீட்டில் கிடந்த பழைய கம்யூனிஸ்ட் கட்சி தஸ்தாவேஜ்களையெல்லாம் எடுத்து அவரிடம் படிக்கக் கொடுத்தேன்,
ஒரு பக்கம் ஐ.என்.டி.யூ.சிக்காரனான இளைஞன் செல்வகிருஷ்ணனின் கேள்விகள். இன்னொரு பக்கம் ஏஐடியுசி தரப்புக் கேள்விகள். இக்கேள்விகள் மீண்டும் என்னை மூல நூல்களை நோக்கித் தள்ளின.
இருவருமே குறுகிய காலத்தில் எங்கள் வட்டத்தோடு ஐக்கியமானார்கள். உங்களோடு ஐவரானோம் என்பதுபோல அவர்களை உற்சாகமாக எங்கள் குழு வரவேற்றது. முத்தையா இப்பக்கம் வந்தது அம்பாசமுத்திரம் பகுதில் அச்சங்கத்தின் இருப்புக்கே ஆப்பு வைத்து விட்டது. செல்வகிருஷ்ணனின் அப்பா இளம்பருவத்தில் நேதாஜி படையில் ஒரு முன்னணிச் சிப்பாயாகப் பணி புரிந்தவர் என்று கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க மணிமுத்தாறு பக்கம் ஏர்மாள்புரம் சென்று சற்றே அரசியல் பேசி வந்தோம். அது இன்னும் செல்வகிருஷ்ணனை எங்கள் பக்கம் நெருக்கமாகக் கொண்டு தள்ளியது.