தமிழ் திரையுலகில் ஓபனிங்க் என்று ஒரு பதம் இருக்கிறது. குறிப்பிட்ட சில நடிகர்கள் அல்லது இயக்குநர்களுக்கு படத்தின் ஆரம்ப தினங்களில் வருகின்ற பார்வையாளர்களை குறிப்பிடுகிற வார்த்தை அது. தமிழின் தற்போதைய இயக்குனர்களில் செல்வராகவனுக்கு அதிகமான துவக்கப் பார்வையாளர்கள் (ஓபனிங்க்) கிடைத்துள்ளது அவரது குறிப்பிடத்தக்க சாதனை என்று சொல்லலாம்.
செல்வராகவனின் சாதனை என்று இதனை மட்டும் சொல்லி விட முடியாது. தனுஷ் என்கிற ஒல்லிச் சிறுவனையும், மிகச் சராசரியான அவரது முகத்தையும் தோற்றத்தையும் மக்களை ஏற்றுக் கொள்ள வைத்ததில் செல்வராகவனின் பங்கு மிக அதிகம். ஒரு இயக்குனராக அது செல்வராகவனின் வெற்றி. செல்வராகவனின் படம் என்றால் அதனைப் பற்றி பார்வையாளர்களையும் (குறிப்பாக இளைஞர்களை) மீடியாவையும் பேச வைப்பதிலும் செல்வராகவன் ஜெயித்திருக்கிறார்.
வெற்றிகள் கொண்டாட்டத்துக்கு உரியவை. புதுப்பேட்டை படம் பெரிய வெற்றியா அல்லது சுமாரான வெற்றியா என்பது குறித்து சுமாரான குழப்பம் நிலவுகிறது. அத்துடன் புதுப்பேட்டை நல்ல படமா இல்லையா என்கிற குழப்பத்தையும் காண முடிந்தது. இரண்டாவது குழப்பம் குறித்துதான் நாம் பேச வேண்டும்.
இது வரை வந்துள்ள விமர்சனங்களில் அதிகம் சொல்லப்படுகின்ற விஷயங்கள் எதுவென்று கவனித்தால் அவை... படத்தில் வன்முறை மிக அதிகம். இவ்வளவு ரத்தம் தேவைதானா... புதுப்பேட்டை இருண்ட உலகை நாம் இதுவரை பார்த்திராத குரூர உலகின் யதார்த்தத்தை முகத்தில் அறைந்து சொல்கிறது. வன்முறை உலகினை பற்றி சொல்லும் கதையில் ரத்தம் சிந்தத்தானே செய்யும்.... தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிற முயற்சி.... மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார்.... இது தமிழ் சினிமாவில் புது விதம் வேறு மாதிரியான படம் போன்றவைதான்.
நிச்சயமாக புதுப்பேட்டை வேறு மாதிரியான படம்தான். எவ்வகைப்பட்ட வேறு மாதிரியான படம்? ரசிக்கத் தகுந்த வேறு மாதிரியா, பாராட்டத்தகுந்த வேறு மாதிரியா என்றால் அப்படி எதுவும் இல்லை. வருத்தமும் கோபமும் தருகிற வேறு மாதிரியான படம்.
படத்தில் வன்முறை அதிகம் என்று சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் இது ஒன்றும் முதல் வன்முறைப் படம் அல்ல. கர்ப்பிணியின் வயிற்றில் உருட்டுக்கட்டையால் தாக்குகிற வன்முறை எல்லாம் கூட ஏற்கனவே வந்து விட்டது. ஆனால் அதுபோன்ற வன்முறை படங்களுக்கும் புதுப்பேட்டைக்கும் உள்ள வித்தியாசம் எதுவெனில் இந்தப் படத்தில் வன்முறை வெகு இயல்பாக ரசிக்கத்தகுந்ததாக காட்டப்படுகிறது. முதல் முதலில் தனுஷ் ஒருவனின் கையை வெட்டி ‘தொழில்’ பழகும் காட்சியும், கடைசியில் வில்லனைக் கொல்லப் போகையில் உடல் பலவீனமாகிக் கைகள் ஆட ‘கரெக்டா வெட்ட முடியாது அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’ என்னும் போதும் தியேட்டரில் ரசித்து சிரிப்பதைப் பார்க்க முடிகிறது.
சிரிக்கிற ஜனங்கள் எல்லாம் யார்? ஷேவ் பண்ணிக் கொள்கையில் லேசாக பிளேடு கீறி விட்டால் பதட்டமாகி ‘டெட்டால்’ தடவி ‘டெட்டனஸ்’ போட்டுக் கொள்கிறவர்கள். (இக்காட்சிகளை பார்க்கும் குழந்தைகள், இளவயதுப் பிள்ளைகள் கையில் கத்தி இருந்தால் எதிரே இருக்கும் சக குழந்தை மீது நிச்சயம் வீசிப்பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது)
இப்படம் சில அதிர்ச்சிகரமான காட்சிகளைக் கொண்டிருக்கிறது. அம்மாவை அப்பா கொல்வதை மகன் பார்க்கிறான். திரையில் இது புதுசுதான். ஆனால் செய்திகளில் மனைவியைக் கொல்கிற கணவனும் கணவனைக் கொல்லும் மனைவியும் நாம் அடிக்கடி பார்க்கும் விஷயங்கள்.
புதுப்பேட்டையின் எந்த விஷயமும் புதுசு கிடையாது. செய்திகளில் பார்க்கிறவைதான். பிரச்சினை என்னவென்றால் செய்திகளில் பார்க்கிற போது கொல்கிறவர்கள் மீது நமக்கு நேர்மறை உணர்வுகள் வருவது கிடையாது. இதில் கொலை ரசிக்கப்படுகிறது, விரும்பப்படுகிறது. கதாநாயகனின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வித்திடுகிறது.
யதார்த்தமாக எல்லாவற்றையும் காட்டி இருப்பதாகக் கூறப்படுவதை ஏற்க முடியவில்லை. உடன் வந்தவர்கள் சுவர் ஏறித் தப்பி விட, சுவரில் கூட ஏற முடியாமல் திணறுகிற தனுஷ் அதன் பின் உடல் எல்லாம் ரத்தக்களறியாய் வெட்டுகள் வாங்கிக் கொண்டு ஒரே அடியில் வில்லன் தம்பியைக் கொல்வது என்ன யதார்த்தமோ? அங்கே தனுஷ் வழக்கமான ஹீரோ தானே? ஒல்லியானவர்கள்தான் தாதாக்களாம்! படத்தில் தனுஷ் மட்டுமே ஒல்லி. மற்றவர்கள் எல்லோருமே `ஜிம்’மில் பிறந்து வளர்ந்தவர்கள் மாதிரியே இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் எல்லாம் தனுஷை விடப் பெரிய ரவுடிகள் என்பது போன்று ஒரு காட்சி இருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகளின் தலைவர் போன்றவர் மகள் சம்பந்தப்பட்ட வீடியோவை கைப்பற்றித் தருமாறு தனுஷிடம் காலில் விழாக்குறையாகக் கெஞ்சுகிறார் (நாயகனில் வருவது போன்ற காட்சி). ரவுடிகள் பெருத்து அலைகிற ஊரில் போலிஸ் பஞ்சம் என்று சகல விதமான சமாச்சாரங்களும் அடங்கிய இப்படம் எப்படி அடுத்தகட்ட சினிமா என்று புரியவில்லை.
வன்முறை என்பது யதார்த்தம்தான், அதைக் காட்டக்கூடாதா? என்கிற கேள்வி எழலாம். காட்டலாம்தான். வன்முறையைக் காட்டும்போது மிகுந்த கவனமும் பொறுப்புணர்ச்சியும் படைப்பாளிக்கு வேண்டும். உதாரணமாக ஒரு ஜாதிக் கலவரத்தையோ மத வன்முறையையோ காட்டும்போது பார்க்கிறவர்கள் மனது பதற வேண்டும். இனி வன்முறை கூடவே கூடாது என்கிற உணர்வும் அமைதியின் மீது விருப்பமும் வர வேண்டும். மாறாக கலவரத்தின் மீது விருப்பத்தை ஊட்டி அதை ரசிக்கத்தக்கதாய் காட்டினால் எப்படி இருக்கும்?
புதுப்பேட்டை வன்முறையை ரசிக்கத் தக்கதாகக் காட்டுகிறது. வன்முறை சகஜமான ஒன்றாக உணர்த்தப்படுகிறது. வன்முறையை வேடிக்கை பார்ப்பவர்களாக மட்டுமே இருக்கும் பார்வையாளர்களை வன்முறையை ரசிக்கவும் கைதட்டவும் வைக்கிறது.
இந்தப் படத்தின் மேக்கிங் பற்றியும் சில பத்திரிகைகள் பாராட்டுகின்றன. ‘கில்லட்டின்’ கருவியையும், ‘கேஸ் சேம்பரை’யும் வடிவமைத்தவர்களையும் பாராட்டுவோமா நண்பர்களே!